சனி, 22 ஜூன், 2019

மன்மோகன் சிங் ராஜ்யசபா கோரிக்கை... திமுக மறுப்பு !

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை... ஸ்டாலின் நிராகரிப்பு!“குடிதண்ணீர் பிரச்சினை பற்றிய விவாதத்தை உருவாக்க வேண்டிய திமுகவின் ஆர்ப்பாட்டம் கூட்டணி பற்றிய விவாதத்தை உருவாக்கி விட்டதே...”
-மொபைல் டேட்டாவை ஆன் செய்ததுமே, வாட்ஸ் அப்பில் வந்து விழுந்த கமெண்ட் இது. சில போட்டோக்களை அனுப்பி வைத்த கையோடு விரிவான மெசேஜை அனுப்பியது வாட்ஸ் அப்.
“உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு சொன்னதன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பே , விரைவில் வர இருக்கிற ராஜ்யசபா தேர்தலை ஒட்டியே காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே சிறு மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது.
ஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதற்கு முன் அவரை அறிவாலயத்தில் மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, ‘டெல்லியில் இருந்தபோது காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் என்னை சந்திச்சாங்க. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஸ்ஸாம்லேர்ந்து ராஜ்யசபா சீட் இந்த முறை கிடைக்கலை. அங்க காங்கிரஸுக்கு மெஜாரிட்டி இல்ல. அங்கமட்டுமில்ல, இப்போதைக்கு ராஜ்யசபாவுக்கு அனுப்புற அளவுக்கு காங்கிரஸுக்கு எந்த மாநிலத்துலயும் பலம் இல்ல.

அதனால தமிழ்நாட்டிலேர்ந்து ஜூலை மாதம் திமுக அனுப்புற 3 பேர்ல மன்மோகனுக்கு ஒரு இடத்தைக் கொடுக்கச் சொல்லி உங்க தலைவர்கிட்ட பேசணும்னு சோனியா காந்தி சொன்னதா என்கிட்ட சொன்னாங்க. நான் எடுத்த எடுப்புலயே அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைங்கனு சொல்லிட்டேன்’ என்று கூறியிருக்கிறார் டி.ஆர்.பாலு.
இதைக் கேட்ட ஸ்டாலின், ‘சரியாதான் சொல்லியிருக்கீங்க. ராஜ்யசபாவுக்கு நம்ம கட்சிக்குள்ளேயே யாரை அனுப்புறதுனு யோசிக்குற அளவுக்கு பல பேரும் கேட்டுக்கிட்டிருக்காங்க. இந்த நிலைமையில மன்மோகன் சிங்கை தமிழ்நாட்லேர்ந்து அனுப்பினா கட்சி ரீதியாகவும், கட்சிய தாண்டியும் நம்ம மேல விமர்சனம்தான் அதிகமாகும். லோக் சபாவுல கூட சீட் ஷேரிங் சமாளிச்சுட்டோம். ஆனால் ராஜ்யசபாதான் சமாளிக்க முடியல’ என்று சொல்லிச் சிரித்திருக்கிறார் ஸ்டாலின்.
ராஜ்யசபாவில் திமுகவுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியிருப்பதுதான் டி.ஆர்.பாலுவிடம் ஸ்டாலின் இப்படி சொன்னதற்கான காரணம்.
ராஜ்ய சபா தேர்தலில் திமுவுக்கான மூன்று இடங்களில் ஒரு சீட் மதிமுகவுக்கு என்பது ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியிருக்கிறது. அதன்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் என்பதை ஸ்டாலினும் வைகோவும் ஏற்கனவே பேசி முடிவு செய்துவிட்டனர். மீதி இருக்கும் இரண்டு இடங்களுக்கு பல திசைகளில் இருந்தும் ஸ்டாலினுக்கு சிபாரிசுகள் குவிந்திருக்கின்றன.
கிறிஸ்துவ பாதிரியார்கள், ஆயர்கள் அடங்கிய குழுவினர் சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்தனர். அவர்கள், ‘மூன்று ராஜ்யசபா சீட்டுகளில் ஒரு சீட்டை நீங்க கிறிஸ்துவ மதத்தினருக்குக் கொடுக்கணும். அது பீட்டர் அல்போன்ஸா இருந்தா நல்லா இருக்கும்’ என்று கேட்க, ஸ்டாலினோ, ‘திமுகவினரைதான் அனுப்பனும்னு முடிவெடுத்திருக்கோம்’ என்று அவர்களிடம் பக்குவமாக சொல்லியிருக்கிறார்.
இன்னும் சிலரும் ஸ்டாலினிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை கிறிஸ்துவருக்கு தருமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள். திமுகவினருக்குதான் ராஜ்யசபா சீட் என்ற ஸ்டாலின் முடிவை உணர்ந்த அவர்கள், ‘உங்க முடிவின்படியே ராஜ்யசபாவை திமுகவினருக்கே கொடுங்க. அதில் ஒன்றை திமுகவில் இருக்கும் கிறிஸ்துவருக்கு கொடுங்க. அந்த அடிப்படையில வழக்கறிஞர் வில்சனுக்கு கூட நீங்க கொடுக்கலாம். கலைஞர் நினைவிட வழக்கில் நீதிமன்றத்துல திறமையா வாதாடி, கலைஞரின் உடலோடு ராஜாஜி ஹால்ல நின்னுக்கிட்டிருந்த உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிய தேடிக் கொடுத்தவர். அவருக்கு கொடுக்கலாமே’ என கேட்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் அவர்களை புன்னகைத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்த சந்திப்புகள் மூலம் ராஜ்யசபாவில் ஒரு சீட் கிறிஸ்துவருக்கு என்ற தகவல் திமுகவுக்குள் பரவலாக பேசப்பட்டது. இதன் அடிப்படையில் திமுகவின் நெடுங்கால தோழமை இயக்கமான கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜுக்கு ராஜ்ய சபா சீட் வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை ஸ்டாலினிடம் முன் வைக்கப்பட்டது.

அதேநேரம், ஸ்டாலின் ராஜ்யசபாவுக்கு யார் யார் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். அதன்படி இரண்டு இடங்களில் ஒன்றை திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகத்துக்கு என்று முடிவு செய்துவிட்டார். கடந்த ராஜ்யசபா தேர்தலின் போதே சண்முகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கவேண்டுமென்றும், தனது கொளத்தூர் தொகுதியில் அவர் சிறப்பாக செயல்பட்டார் என்று கலைஞரிடம் வலியுறுத்தினார் ஸ்டாலின். ஆனால் அப்போது டி.கே.எஸ். இளங்கோவனுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார் கலைஞர். அதனால் அப்போது கொடுக்க முடியவில்லை. அந்த அடிப்படையில் இந்த ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்தை தொமுச சண்முகத்துக்கு வழங்குவதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின்.
இன்னொரு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பை திமுகவின் தலைமைக் கழக சட்ட ஆலோசகரான என்.ஆர். இளங்கோவுக்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தார் ஸ்டாலின். ஆனால் சிங்கப்பூர் செல்வதற்கு முன் ஸ்டாலினை சந்தித்து கிறிஸ்துவப் பிரமுகர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஒரு சீட்டை கிறிஸ்துவருக்கு கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதன்படியே கலைஞருக்கு மெரினாவில் நினைவிடத்தை நீதிமன்றத்தில் வாதாடி பெற்றுத் தந்த வில்சனுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அறிவாலயத்தில்.
ஆக, வர இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பாக செல்லும் உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லை என்பதும், சோனியாவின் கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்துவிட்டார் என்பதும் நேரு திருச்சியில் பேசுவதற்கு முன்பே நடந்த சங்கதிகள்” என்று முடிந்தது வாட்ஸ் அப் செய்தி.
அதை ஷேர் செய்து கொண்டது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: