வெள்ளி, 21 ஜூன், 2019

இந்தியாவைப் பாதிக்கும் அமெரிக்க விசா கட்டுப்பாடு!

இந்தியாவைப் பாதிக்கும் விசா கட்டுப்பாடு!  மின்னம்பலம் : அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச்1பி விசா விதிமுறைகளைக் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதனால் இந்திய ஐடி துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று தொழில்துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் எச்சரித்துள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிவதற்கு அமெரிக்க அரசால் ‘ஹெச்1பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) நிறுவனங்கள் மற்றும் ஐடி பணியாளர்களுக்கு இந்த விசாக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த விசா வைத்திருப்பவர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும்பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுக் காலம் இந்த விசாவை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அமெரிக்க அரசு தனது விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளதால் இந்திய ஐடி பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்ததோடு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்ததால், அதற்குப் பதிலடி தரும் விதமாக இந்திய அரசும் 29 அமெரிக்கப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்தது.
அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க அரசு தனது ஹெச்1பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் கிளைகள் வைத்துள்ள இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் எனவும், அமெரிக்காவுக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களை இது பாதிக்கும் எனவும் இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நாஸ்காம் கூறுகிறது. இந்திய ஐடி பணியாளர்களுக்கான தேவை அங்கு அதிகமாக இருப்பதால் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: