சனி, 22 ஜூன், 2019

பிரேமலதா .. பித்தலாட்டத்தில் புதிய உச்சம் தொட்ட தேமுதிகவின் அரசியல் தந்திரங்கள்


சாவித்திரி கண்ணன்" : பிரமிக்க வைக்கிறார் பிரேமலதா!
அரசியல் என்றாலே அது பித்தலாட்டமானது, மொள்ளமாரித்தனமானது தான் என்ற புரிதலில், தன் ஒவ்வொரு நகர்வையும் கொண்டிருக்கிற கட்சியாக தே மு தி க வை மாற்றிவிட்டார் பிரேமலதா!
ஐந்து கோடி சொச்சத்து கடனை கட்ட முடியவில்லை என்பதற்கும்,கட்ட மனமில்லை என்பதற்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது.
விஜயகாந்திற்கும்,அவரது குடும்பஉறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலும் இருக்கும் சொத்துகளின் மதிப்பு குறைதபட்சம் என்று எடுத்துக் கொண்டாலே ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பது அந்த கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கு கூட தெரிந்த உண்மையாகும்!
ஏதேனும் ஒரு சொத்தை விற்றலே கூட பல கோடி தேறும்!
இது போக, ஒவ்வொரு தேர்தலிலும் - எந்தவித கொள்கை அரசியல் பார்வையும் கிஞ்சித்தும் இல்லாத கட்சி என்ற வகையில் - வெற்றி வாய்ப்புக்கு சாத்தியமுள்ள கூட்டணி எது? என்ற அளவு கோளை விடவும் , யாரிடம் அதிக பணம் கிடைக்கும்..என்று கூட்டணி கண்ட கட்சி தான் தே மு தி க!
அந்த வகையில், சமீபத்திய தேர்தலில் தே மு தி க வாங்கிய பெரும் தொகையின் கணிசமான பகுதி செலவழிக்கப்படாமல்- தங்கள் கட்சி வேட்பாளரின் வெற்றியில் கூட அக்கரை காட்டாமல் - அமுக்கி கொள்ளப்பட்டதையும் அக் கட்சியின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் அறிவார்கள்!

ஒரு காலத்தில் விஜயகாந்த் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்பதற்கு மாற்று கருத்து யாருக்குமே இருக்க முடியாது.
ஆனால், தற்போது கொடுக்காமல், வாங்கி போடுவதில் மட்டுமே குறியாக இருக்கும் அவரது குடும்பத்திற்கு ஈடாக காட்ட வேறொருவர் கிடையாது என்பதே யதார்த்தம்.!
இருக்கிற பணத்தை எடுத்துக் கடனைக் கட்டினால், கட்டப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்ட முடியாது என்று ஆடிட்டர்கள் சொன்னார்களாம்! அதனால், அண்ணியார், ‘’சரி, கட்ட வேண்டாம்.., நல்லதா போச்சு..இதையும் இமேஜ் பில்டப் பண்ணுவதற்கு பயன்படுத்திக்கலாம். நாம் நேர்மையானவர்கள் என்பதற்கும், கல்வி சேவை செய்து நஷ்டப்பட்டோம் என்பதற்கும் இது ஒரு இலவச விளம்பரமாச்சு ..’’ என்ற ரீதியில் களமாடுகிறார்.
இந்த அரசியல் சூதாட்டம் தெரியாமலே சிலர் பரிதாபப்பட்டு உருகியும்,
தெரிந்தும் வெளிப்படுத்தாமல், திசை திருப்பி சிலரும் பதிவிடுகிறார்கள்.. எழுதுகிறர்கள்!
எது எப்படியானாலும் ,கட்சி தொண்டர்களிடமிருந்து நிதி திரட்டி கட்டினோம் என்று கணக்கு காட்டி,பணம் கட்டப்பட்டுவிடும் !
20,000 வரை சில்லறையாக கட்சிக்கு கொடுக்கும் நிதிகளுக்கு ரசிது தேவையில்லை என்ற ஒரு பித்தலாட வசதியும் ஏற்கனவே கட்சிகளுக்கு உள்ளது தானே!

கருத்துகள் இல்லை: