ஞாயிறு, 16 ஜூன், 2019

பீகாரில் அடுத்தடுத்து 100 குழந்தைகள் இறப்பு .....மூளைக்காய்ச்சல் ....

tamil.samayam.com: பீகார் மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடையின் உச்சம் காரணமாக, பொதுமக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட நோய் காரணமாக, ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் உயிரிழந்தனர்.
அடுத்த இரு வாரங்களில் 54 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பீகார் மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் மிகக் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை பீகார் மாநில அரசும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், முசாபர்நகரில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம் அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், சில குழந்தைகள் உயிரிழந்துள்ளன. எனவே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநில அரசுக்கு உதவி செய்யும் வகையில், மருத்துவக் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

தற்போது 100க்கு மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் தொடர் உயிரிழப்பு சம்பவத்தால், முசாபர்நகரில் வரும் 22ஆம் தேதி வரை 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: