ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

ஈழத்தமிழர்கள், எதை முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டுமோ அதை நிராகரித்தார்கள்!

LR Jagadheesan : ஈழத்தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.
அவர்களுக்கு சேவிக்க சிதம்பரம் வேண்டும்.
ஓதுவதற்கு தேவாரம் திருவாசகம் வேண்டும்.
பரதம் படிக்க பாரதீய வித்யாபவன்கள் வேண்டும்.
ஹிந்தி கற்க ஹிந்தி பிரச்சாரசபா வேண்டும்.
கல்விக்கு ராமகிருஷ்ணா மடங்கள் வேண்டும்.
இலக்கியத்துக்கு காலச்சுவடும் அதன் கிளைக்கும்பல்களும் அவற்றின் நிலைய வித்வான்களும் வேண்டும்.
சங்கீத கச்சேரிக்கு சுதா ரகுநாதன்கள் வேண்டும்.
பேச்சுக்கச்சேரிக்கு சுகிசிவங்களும் பாரதி பாஸ்கர்களும் வேண்டும்.
தமிழ் சினிமாவில் சிம்புவுக்கும் ஓவியாவுக்குமே டிக்கெட் வாங்கி உடன் நின்று படமெடுக்க வரிசையில் நிற்பார்களென்றால் ரஜினி, கமல், விஜய், அஜித் கதைகளை கேட்கவே வேண்டாம். லட்சங்களை கொட்டி அழுவார்கள் கூட நின்று ஒரே ஒரு படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புக்காக.
சின்னத்திரை ராதிகா தான் பிரபாகரனுக்கு அடுத்து அனைத்து தரப்பு ஈழத்தமிழர் இல்லங்களின் ஆதர்ஷ நாயகியாய் கடந்த இருபதாண்டுகளாய் கோலோச்சுகிறார்.
கட்டகடைசியாய் அவர்கள் மேற்குலகில் கட்டிய கோவில்களில் அதிகமான வேலைவாய்ப்பு இப்போதெல்லாம் இந்திய ஐயர்மார்களுக்கே கிடைக்கிறதாம்.
இது போதாதென்று இந்தியாவிலிருந்து வரும் போலிச்சாமியார்கள் ஜோசியக்காரர்களுக்கு இவர்கள் கொட்டி அழும் வெள்ளிக்காசை வெளியில் சொன்னால் ரத்தக்கண்ணீர் வரும். அம்புட்டு காசு.
இத்தனையையும் இந்தியாவில் இருந்து எந்த தயக்கமும் இல்லாமல் தாமாகவே இறக்குமதி செய்து தலைமேல் வைத்துக்கொண்டாடி மகிழ்பவர்கள், தமிழ்நாட்டு அரசியலை மட்டும் தரம் குறைந்த அரசியல் என்பது ஏன் என்பது தான் என்றுமே புரியாத புதிர்.

இத்தனைக்கும் இவர்களின் ஈழத்தமிழர் அரசியல் எந்த விதத்தில் தமிழ்நாட்டு அரசியலைவிட மேம்பட்டது? எந்தவிதத்தில் ஈழத்தின் தமிழ்மக்களின் கல்வியை, பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை மற்றுமுள்ள உரிமைகளை அல்லது வளங்களை மேம்படுத்தியது என்கிற எளிய கேள்விக்கு கூட இவர்களிடம் இன்றுவரை நேர்மையான பதில் இல்லை. “மரணத்தில் வாழ்வோம்” என்கிற முட்டாள் தனம் மொத்தமாய் மிளிரும் ஒற்றை வரியைத்தவிர.
தமிழ்நாட்டில் இருந்து எதையெல்லாம் இறக்குமதி செய்யக்கூடாதோ அதையெல்லாம் வேண்டி விரும்பி இறக்குமதி செய்து தலைமீது வைத்துக்கொண்டாடிய/கொண்டாடும் ஈழத்தமிழர்கள், எதை முன்னுதாரணமாக கொண்டிருக்க வேண்டுமோ அதை நிராகரித்தார்கள் என்பது தான் ஈழத்தமிழர்களின் ஆனப்பெரிய வரலாற்று பெருஞ்சோகம்.
பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற உருப்படியான தலைமைகளையெல்லாம் ஒருக்கிவிட்டு இருந்ததிலேயே மோசமான எம்ஜிஆரை தன் அரசியல் ஆதர்ஷமாக கொள்ளும் அளவுக்குத்தான் ஈழத்தமிழர்களின் ஆனப்பெரிய ஆளுமையின் அரசியல் புரிதல் இருந்தது என்னும்போது அவரை தம் நடமாடும் முருகனாக வழிபடும் ஆட்களை நொந்து என்ன பயன்?
2009 ஐ சாக்காக வைத்து கண்டது கழிஞ்சதுகளெல்லாம் கலைஞரை வாய்க்குவந்தபடி வசைபாடி மகிழ்ந்த காலம்போய் இப்போது ஈழத்தமிழருக்கு இலக்கிய மரபே இல்லையென இந்திய அரசாங்க குமாஸ்தாவெல்லாம் அசிங்கப்படுத்தும் இடத்துக்கு வந்திருக்கும் ஈழத்தமிழரை நினைத்தால் உண்மையில் கோபம் வரவில்லை. அனுதாபமே மிஞ்சுகிறது. உங்களுக்கா இந்த நிலை என்று.
நீங்கள் அரசியல் பிழைத்தீர்கள். அறம் கூற்றாய் வந்து முன் நிற்கிறது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Everything is true.

பெயரில்லா சொன்னது…

Everything is true