நேரம் வரும் வரை காத்திருப்போம் என்கிற அடிப்படையில் சின்னதம்பிக்கு
எதிராக நிகழ்ந்தது எல்லாமே வன்முறைதான். கடந்த மாதம் 25 தேதி சமவெளிக்கு
அதாவது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு வந்த பிறகே அதற்கு மயக்க
ஊசியைச் செலுத்தியிருக்கிறார்கள். சின்னதம்பி யானைக்கு 9 மில்லி அளவுக்கு
மயக்க ஊசியைச் செலுத்தியிருந்தார்கள். மயக்க ஊசி செலுத்திய யானையைப்
பதற்றத்திற்கு கொண்டு வர வேண்டும். யானை பதற்றமடைந்தால் அதனுடைய உடல்
வெப்பமாகும் நிலையில் ஊசி உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்கும். ஊசி
செலுத்தியவுடன் கும்கி யானைகளைக் கொண்டு அதைப் பயமுறுத்த ஆரம்பிப்பார்கள்.
கும்கி யானைகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த நடைமுறையைத்தான்
வனத்துறையும் கால்நடை மருத்துவர்களும் பின் பற்றுகிறார்கள். அதன்படியே
அன்றைய காலை 6 மணிக்கு மேல் மயக்க ஊசியைச் செலுத்தி யானையைப் பதற்றமடைய
வைத்துப் பிடித்தார்கள். பிடிபட்ட யானைக்குக் கும்கி யானைகளின் துணை கொண்டு
கால்களில் சங்கிலியும், கழுத்தில் கயிறும் போட்டுத் தங்களின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சின்னதம்பி பாதி மயக்க நிலையிலேயே
இருந்தது. இதற்கிடையில் சின்னதம்பியோடு இருந்த மற்ற காட்டு யானைகளால்
பணியில் எந்தப் பின்னடைவும் நிகழ் கூடாது என்பதால் 20 மேற்பட்ட
வேட்டைத்தடுப்பு காவலர்கள் அவற்றை ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாகவே
தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.நான்கு கும்கி யானைகள் சேர்ந்து ஒரு காட்டு யானையை இழுத்து வந்து லாரியில் ஏற்றுவது என்பது எளிதான காரியம்தான். ஆனால் சின்னதம்பி யானையை ஏற்றுவதில் நான்கு கும்கி யானைகளின் பலமும் அனுபவமும் சோதித்துப்பார்க்கப்பட்டது. கும்கி யானைகள் போதாதென்று ஜேசிபி இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.அதற்குக் காரணம் சின்னதம்பி யானையின் உடல்பலமும், மனபலமும்தான்.எல்லா நிகழ்வுகளும் சின்ன தம்பிக்கு எதிராகவே அமைய வனத்துறை யானையை லாரியில் ஏற்றும் பணியை தொடங்கியது. இந்த இடத்தில் தான் சின்னதம்பியின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் பலமும் சிதைந்து போனது. நான்கு கும்கி யானைகள், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் என சின்னதம்பியை முட்டித் தள்ள வேறு வழியின்றி லாரியில் ஏற்றப்பட்டது. உடலெங்கும் கும்கி யானைகள் தந்தங்களை கொண்டு குத்தி லாரியில் ஏற்றிவிட்டன. பிடிபடும்போது நன்றாக இருந்த தந்தங்கள் லாரியில் ஏற்றப்பட்ட பிறகு உடைந்திருந்தன. தந்தம் உடைந்த யானையின் படம் இணையத்தில் பரவ சின்னதம்பி மீது மக்களுக்குப் பரிதாபம் ஏற்பட ஆரம்பித்தது.
சின்னதம்பி பிடிபட்டு வனத்திற்குள் விடப்பட்ட 7 நாட்கள் கழித்து மீண்டும் ஊருக்குள் வந்த தகவல் வனத்துறையைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. எப்படியும் அதனுடைய பழைய இருப்பிடத்திற்குச் சென்று தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னதம்பி கிளம்பியிருக்கிறது. காலர் ஐடி பொருத்தப்பட்ட சின்னதம்பி காட்டுக்குள்விடப்பட்ட அன்றே தன்னுடைய இருப்பிடத்தைத் தேட தொடங்கியிருக்கிறது. ஆனால் யானை மலைப்பகுதியை விட்டு சமவெளி பகுதியான பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராம பகுதிக்குள் வந்தபிறகே வெளி உலகத்திற்குத் தெரிய வந்திருக்கிறது.
இதற்கிடையில் சின்னதம்பி கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே யானை அதன் பலம் முழுவதையும் இழந்து நிற்கிறது. இப்போதைக்கு சின்னதம்பியை கும்கியாக மாற்ற முயல்வதைவிட அதைக் காப்பாற்ற முயற்சி எடுப்பதே முக்கியமானது என விலங்கு நல ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சின்னதம்பியின் வாழ்க்கையில் அடுத்து என்ன? என்கிற கேள்விக்குப் பதில் மீண்டும் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்கே செல்கிறது. அதனைப் பிடிக்க டாப்ஸ்லிப்பில் இருந்து கலீம் கும்கி யானை சின்னதம்பி இருக்கிற இடத்தை நோக்கிக் கிளம்பியிருக்கிறது. நினைவில் வலியிருக்கும் யானை எளிதில் கட்டுப்படும் என நினைக்கிறவர்கள் மதுக்கரை மகாராஜாவை ஒரு நொடி நினைத்து கொள்ளவேண்டும்!
““ஒரு யானையைக் கும்கியாக மாற்றுவது என்பது மனிதனுக்கு எளிமையான காரியமாக இருக்கிறது. ஆனால் கும்கியாக மாறுவதற்கு யானைதான் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக