செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சசிகலா உடல் நிலை- பிடிவாதம் ... ஆஸ்பத்திரியில அட்மிட் ஆக மாட்டேன்

டிஜிட்டல் திண்ணை: உடல் நிலை- பிடிவாதம் பிடிக்கும் சசிகலா
 மின்னம்பலம் : தமிழகத்தில் தேர்தலை மையமாக வைத்து பரபரப்புகள் சூழ்ந்திருக்கும் நிலையில், பெங்களுருவில் என்ன வேலை என்று யோசிக்கும் வேளையிலேயே வாட்ஸ் அப் செய்தி வந்து விழுந்தது.
“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017 பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. அவரோடு இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இருமுறை பரோலில் வந்த சசிகலா இப்போது சிறையில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.

ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக கழுத்தின் பின்பக்கம் பிடரி பகுதியில் அவ்வப்போது சசிகலாவுக்கு வலி எடுக்கும். அதற்காக நரம்பியல் மருத்துவர்களையும் அப்போது பார்த்திருக்கிறார் சசிகலா. அப்போது பரிசோதித்துப் பார்த்து பிசியோதெரபி முறையில் ஐ எஃப் டி, அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பெற்றுள்ளார் சசிகலா. ஆனால் அதில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் தினமும் பிசியோதெரபி பண்ண வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி கொஞ்ச நாள் பிசியோ தெரபி செய்துவந்திருக்கிறார். பின் அதையும் விட்டிருக்கிறார். தினமும் பிசியோதெரபி செய்யுமாறு ஜெயலலிதாவே பலமுறை சசிகலாவை கட்டாயப்படுத்தியிருக்கிறாராம்.
இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக சிறையிலேயே இருக்கும் சசிகலாவுக்கு பழையபடி பிடரி வலி அதிகரித்துவிட்டது. பாடாய் படுத்தும் வலியால் அவதிப்படுகிறாராம் சசிகலா. இரவில் தலையணை கூட வைத்துப் படுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் தலையணையும் பயன்படுத்தவில்லையாம். சில நாட்களாகவே வலி அதிகமானதால் சிறை மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதித்திருக்கிறார்கள். அவர்களிடம் ஏற்கனவே நரம்பு பிரச்சினை சம்பந்தமாக தான் எடுத்துக் கொண்ட சிகிச்சை முறைகள் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார் சசிகலா.
இடையில் வருடக் கணக்கில் ட்ரீட்மென்ட்டை நிறுத்தியதுதான் வலி அதிகமானதற்குக் காரணம் என்று சொன்ன சிறை மருத்துவர்கள், தினமும் பிசியோதெரபி செய்தாக வேண்டும் என்றும் குறைந்த பட்சம் ஒருவாரமாவது தொடர்ந்து பிசியோதெரபி பயிற்சி செய்தால்தான் வலி குறையும் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். ஆனால் பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவமனையில் பிசியோதெரபி வசதி இல்லையாம். எனவே வெளியே சென்றுதான் தினமும் ஒருமணி நேரம் பிசியோதெரபி செய்துகொள்ள வேண்டும். ஆனால் தினந்தோறும் வெளியே சென்று வருவதற்கு சிறை விதிகள் இடம் கொடுக்கவில்லை. எனவே ஏதாவது ஒரு மருத்துமனையில் அட்மிட் ஆகி ஒருவார காலம் தொடர்ந்து பிசியோ தெரபி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று இளவரசி யோசனை கூறியிருக்கிறார்.
ஆனால் சசிகலாவோ, ‘நான் வெளிய போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆக மாட்டேன். நான் வெளியே போனால் அதை வைத்து ஆயிரம் கதை கட்டுவார்கள். அதனால இங்கயே இருந்துடறேன். வேணும்னா பிசியோ தெரபி மருத்துவரை வெளியிலேர்ந்து இங்க வரவைக்க முடியுமான்னு பார்ப்போம்’ என சொல்லிவிட்டாராம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிறைக்கு வெளியே மருத்துவமனையில் அட்மிட் ஆக சசிகலா உடன்படவே இல்லை. சமீபமாக ஒவ்வொரு நாள் இரவும் சசிகலா வலியால் துடிப்பதைப் பார்த்த இளவரசி, வெளியே ஏதாவது மருத்துவமனையில் சசிகலாவை அட்மிட் செய்யலாமா என்று சிறை மருத்துவர்களிடம் பேசி வருகிறாராம்

கருத்துகள் இல்லை: