வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

அன்புமணி-சபரீசன் ரகசிய சந்திப்பு!

டிஜிட்டல் திண்ணை 1: அன்புமணி-சபரீசன் ரகசிய சந்திப்பு!மின்னம்பலம் :
“நீங்கள் எப்படி என் செய்திக்குக் காத்திருந்தீர்களோ அதுபோலத்தான் திமுக தலைவர் ஸ்டாலினுடைய மருமகனான சபரீசன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்காக ஒரு ஹோட்டலில் கடந்த புதன் கிழமை இரவு காத்திருந்தார். இரவு 11 மணிக்கு மேல் சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் சபரீசன் காத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் அன்புமணியும் தன் காரில் வராமல் வேறொரு காரில் அங்கே சென்று சேர்ந்திருக்கிறார். சபரீசன் வழக்கமாக தன் நண்பர்களை சந்திக்கும் நட்சத்திர ஹோட்டல்தான் அது. அங்கே இருவருக்கும் இடையே கொஞ்ச நேரம் பேச்சுவார்த்தை நீடித்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு செல்லுமா, அதிமுக கூட்டணிக்குச் செல்லுமா என்ற விவாதம் சில வாரங்களாகவே தொடர்ந்து அரசியல் அரங்கில் நடக்கிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் கோவையில் நடந்த பாமக பொதுக்குழுவில் கூட்டணி அமைக்க முழு அதிகாரம் ராமதாஸுக்கு கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே பாமகவின் தனித்துப் போட்டி என்ற விரதம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர்தான் திமுக அணியிலா, அதிமுக அணியிலா என்ற விவாதம் பாமகவுக்குள்ளேயே நடந்தது. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி திமுக அணிக்கு செல்லலாம் என்றும் அப்போதுதான் வெற்றியை எதிர்பார்க்க முடியும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் ராமதாஸோ திமுக அணிக்கு தன்னால் ஏன் வரமுடியாது என்று பல காரணங்களைப் பட்டியலிட்டு அன்புமணியிடம் விளக்கியிருக்கிறார். இதுபற்றி கூட நம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில், ‘திமுக அணி ஏன் வேண்டாம்? அன்புமணியிடம் விளக்கிய ராமதாஸ் என்று தனியாக செய்தியே வெளிவந்தது.
இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணிக்கு பாமக சென்றால் வட மாவட்டங்களில் அதிமுக ஸ்கோர் செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதை முறியடித்து பாமகவை திமுக அணிக்குக் கொண்டுவரலாம் என்று திமுகவிலும் ஒரு தரப்பு முயன்றது. ஏற்கனவே அன்புமணி தரப்பில் திமுகவோடு பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதில் சில டிமாண்டுகள் பிரச்சினையாக இருந்ததால் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் ஸ்டாலினுடைய மருமகான சபரீசனே களமிறங்கி அன்புமணியிடம் சில நாட்களுக்கு முன் பேசியிருக்கிறார்.
ஏற்கனவே நடந்த பேச்சுகளில் தீர்வு கிடைக்காத சில விஷயங்களை அன்புமணி குறிப்பிட அதுபற்றி விளக்கிய சபரீசன் அதிகாரபூர்வமாக அல்லாமல் சில விஷயங்களை நாமே பேசி பிறகு தீர்த்துக் கொள்ளலாம் என்று அன்புமணியிடம் உரையாடியிருக்கிறார். இருபது நிமிடத்துக்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பில் ‘அப்பாவிடம் பேசிவிட்டு சொல்வதாக அன்புமணி சென்றிருக்கிறார் என்று தகவல்” என முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது தகவலை தட்டியது.
“ முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி எல்லாருக்குமே தெரியும். ஆனால் இப்போது அதில் ஒரு சின்ன இடைவெளி. வேலுமணி தன் அண்ணன் அன்பரசனுக்காகவும், இன்னொரு தொழிலதிபர் நண்பருக்காகவும் கொங்கு பகுதியில் இரு தொகுதிகளுக்கு விருப்ப மனு வாங்கி வைத்திருக்கிறார். இதுபற்றிய தகவல் எடப்பாடிக்குத் தெரியவர வேலுமணியைக் கூப்பிட்டு, ‘அமைச்சராக இருக்கீங்களா? மாவட்டச் செயலாளராக இருக்கீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். ஏனென்றால் மாவட்டச் செயலாளர் என்ற முறையில்தான் தன் அண்ணனுக்கு சீட் கேட்டிருக்கிறார் வேலுமணி. இதுபற்றி முதல்வரின் கேள்வியை எதிர்பார்க்காத வேலுமணி அதிருப்தியில் இருக்கிறாராம். கோவைக்கு போன் போட்டு நம்ம ஆளுங்க யாரும் விருப்ப மனு கொடுக்க வேண்டாமென சொல்லிவிட்டாராம்.
விருப்ப மனு விஷயத்தில் இன்னொரு தகவலும் இருக்கிறது. அதிமுகவில் ஜெயலலிதா தலைமை வகித்த போது விருப்ப மனுக்கள் ஆயிரக்கணக்கில் வாங்கப்படும். ஆனால் இப்போது அதிமுகவில் பலரும் யாரோடு கூட்டணி என்ற விவரம் தெரியாததாலும் ஜெயிப்போமா என்ற நம்பிக்கை இல்லாததாலும் விருப்ப மனுக்கள் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில்தான் இருந்தது. இதை அறிந்த எடப்பாடி மாசெக்களிடம் விருப்ப மனுவை அதிக வாங்கச் சொல்லுமாறு உத்தரவிட இன்று மட்டும் 450 விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதுதான் ஆளுங்கட்சியின் நிலைமை” என்று சொல்லிவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: