திங்கள், 17 டிசம்பர், 2018

ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தமை எதிர்கட்சிகளின் இணைவை பாதிக்குமாம் ..திரிணமூல்

ராகுலை பிரதமராக முன்மொழிந்த மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதை பாதிக்கும் - திரிணாமுல் காங்கிரஸ்தினத்தந்தி : கலைஞர்  சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.
 புதுடெல்லி,‘ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்’’ என்ற மு.க.ஸ்டாலின் சூளுரை எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
ஆந்திரபிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். டிசம்பர் 10-ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கலந்துக் கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை விரும்பும் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக அமைதியாகவே இருந்து வருகிறது. இவ்வாண்டு மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாத ஒருவரை பிரதமராக ஏற்க தயார் என்று அறிவித்தார்.

ஆனால் கட்சியின் தலைவர்கள் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவதை பொறுத்து அமையும் என்றார்கள். இதற்கிடையே மம்தா பானர்ஜி அல்லது மாயாவதி பிரதமர் வேட்பாளர் ஆகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியது. மம்தா பானர்ஜி தன்னுடைய பிரதமர் ஆசையை வெளிப்படையாக தெரிவித்தது கிடையாது.


பிரதமர் வேட்பாளர் விவகாரம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் குளறுபடியை ஏற்படுத்துமோ என்ற அச்சம் தொடர்கிறது. காங்கிரசும் இவ்விவகாரத்தில் அமைதி காக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது பெரும் அதிர்ச்சியை எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

சமாஜ்வாடி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், சிபிஎம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜனதாவின் தோல்வி எதிர்க்கட்சிகளுக்கு உந்துதலை கொடுத்தாலும், பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும். முக்கியமாக திரிணாமுல் காங்கிரஸ் ஸ்திரமான நிலையை கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. 

பாதிப்பை ஏற்படுத்தும்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில்,  திரிணாமுல் காங்கிரஸ் இது எதிர்க்கட்சிகள்  ஒன்றாக இணைவதை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. பிராந்திய கட்சிகளை ஒன்றாக இணைத்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த செய்வதில் மம்தா பானர்ஜி முக்கியமான பணியை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது திமுகவின் அறிவிப்பை முக்கியமானதாக பார்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் சிகப்பு கொடியை உயர்த்தியுள்ளது.


“நாங்கள் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மிகவும் முக்கியமாக பார்க்கிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தை முக்கியமாக பார்க்கிறது, ஆய்வு செய்கிறது. பிரதமர் வேட்பாளராக யாருடைய பெயரையும் அறிவிப்பதை விரும்பவில்லை. இது எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதை பாதிக்கும்,” என திரிணாமுல் காங்கிரசின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: