ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கேரளா முதல்வர் பினராயி விஜயன் : இந்திய அரசியலில் மிகபெரும் புரட்சிவாதி கலைஞர் ..விடியோ


tamil.oneindia.com - shyamsundar : சென்னை: இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. அவருக்கு அருகே திமுக தலைவர் அண்ணாவின் சிலை திறக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர். கேரளா முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அதில் கருணாநிதியின் பெருமைகளை அவர் எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது, இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர். அண்ணா மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றி அரசியல் செய்தவர் கருணாநிதி. திராவிட அரசியலின் ஊற்றுக்கண் கருணாநிதி.

தமிழ் மொழிக்காக கருணாநிதி ஆற்றிய சேவை எப்போதும் நிலைத்து நிற்கும். கருணாநிதி அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழின் பன்மையை உலகம் அறியச்செய்தவர் கருணாநிதி. தமிழ் இருக்கும் வரை கருணாநிதி இருப்பார்.
இந்தியாவில் சமூக நீதி மலர்வதற்காக பாடுபட்டவர் கருணாநிதி.ஒடுக்கப்பட்டவர்களுக்காக சட்டங்களை இயற்றிவர் கருணாநிதி. கீழே இருக்கும் மக்கள் மேலே வர வேண்டும் என்று கடைசி வரை பாடுபட்டவர்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் காலத்திற்கும் நிலைக்கும். பெண்கள் முன்னேற வேண்டும் என்று நூற்றுக்கணக்கான திட்டங்களை கொண்டு வந்தார். திருநங்கைகளுக்காக பல முன்மாதிரி திட்டங்களை கருணாநிதி கொண்டு வந்துள்ளார்.
இந்தியா கண்ட சிறந்த அரசியல்வாதி, தலைவர். கருணாநிதி எதிர்கட்சித் தலைவர்களை எப்போதும் மதிக்க கூடியவர். பொருளாதார வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் கருணாநிதி. அவருடைய நினைவிடத்தில் இருப்பது போலவே ஓய்வு எடுக்காமல் பணி செய்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார், என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்துள்ளார்

கருத்துகள் இல்லை: