புதன், 19 டிசம்பர், 2018

33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றது; தமிழக அரசு திடீர் அறிவிப்பு! - பாதிப்பில் ஒரு லட்சம் மாணவர்கள்

மாணவர்கள்vikatan.com -sahayaraj-m":
`33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.
இது தாெடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் லட்சக்கணக்கில் செலவழித்து பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் எம்.எஸ்ஸி கணினி அறிவியல், எம்.காம் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றுக்கு மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில் இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் மிகக்குறைவாக இருப்பதாலும், அவற்றை அதிகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் அவற்றுக்கு இணையாக 33 புதிய பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டன. எம்.எஸ்ஸி கணினி அறிவியல், எம்.காம் ஆகிய படிப்புகளைத் தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகள் மற்றும் உயர்படிப்புகளில் இந்த இணை படிப்புகளைப் படித்த மாணவர்களும் சேரலாம் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், இப்போது 33 புதிய பட்ட மேற்படிப்புகளும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை எனத் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும், அவற்றிற்குட்பட்ட கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல் படிப்புகள் எம்.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்திலும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கப்படும் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், எம்.காம் கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம் படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70% புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாகத் தொடங்கப்பட்டப் படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59-வது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை அபத்தமானது. பல்கலைக்கழகங்கள் செய்த தவற்றுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 33 வகையான புதியப் படிப்புகளுக்கு பாடத்திட்டத்தை வகுத்தது பல்கலைக்கழகங்கள்தான். இதற்காகவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டக் குழுக்கள் உள்ளன. அவை வகுத்துக் கொடுக்கும் பாடத்திட்டத்தைக் கல்வி நிலைக்குழுக்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகுதான் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுவும், கல்வி நிலைக்குழுவும்தான் புதிய படிப்புக்கான பாடத்திட்டம் உரிய வகையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அக்குழுக்கள் தங்கள் பணியை சரியாகச் செய்யாததின் விளைவுதான் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்கலைக்கழகங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்கள்
பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்திய படிப்புகளில் சேர்ந்ததைத் தவிர வேறு எந்தத் தவற்றையும் மாணவர்கள் செய்யவில்லை. அரசு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அப்படிப்புகளை வழங்கும்போது அவற்றில் மாணவர்கள் சேருவது இயல்பான ஒன்றுதான். இந்தப் படிப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 25,000 மாணவர்கள் சேருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். இத்தகைய சூழலில் இந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இப்படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் இப்படிப்பு முடித்தவர்களை நிராகரிக்கக்கூடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, 2018-19-ம் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள் எம்.எஸ்ஸி கணினி அறிவியல், எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை; அரசு வேலைக்குத் தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளைத் தடை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: