திங்கள், 15 அக்டோபர், 2018

கறுப்பின விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடையாதா?

கறுப்பின விஞ்ஞானிகள்:  நோபல் பரிசு கிடையாதா?
மின்னம்பலம் :இந்த ஆண்டு இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது குறித்து அறிவியல் உலகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், 100 ஆண்டுகளாக ஒரு கறுப்பின விஞ்ஞானிக்குக்கூட நோபல் பரிசு கிடைக்கவில்லையே... அது ஏன் என்ற கேள்வி உலக அறிவியல் உலகத்தில் எழுந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் கறுப்பினத்தவரின் வரலாற்று மாதம் கடைப்பிடிக்கப்படும் போதுதான் நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதுவரை 900 பேருக்கு மேல் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவர்களில் 14 கறுப்பினத்தவர்களுக்குத்தான் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களில் விஞ்ஞானத்தில் எந்தக் கறுப்பினத்தவருக்கும் கொடுக்கப்படவில்லை. அமைதிக்காக 10 நோபால் பரிசுகளும், இலக்கியத்திற்காக 3 நோபல் பரிசுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஆசிய நாடுகளைச் சேர்ந்த 70 பேர் வரை நோபல் பரிசுகள் பெற்றுள்ளனர். கறுப்பினத்தவர்களுக்கு ஏன் நோபல் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு. அவர்கள் விஞ்ஞானத்தைப் படிப்பது குறைவு. அப்படியே படித்தாலும் அதில் முதுநிலை பட்டம் பெறுவது மிகவும் குறைவு. அவர்களில் பெரும்பாலும் அறிவியல் துறைகளில் பணி புரிவதை விரும்புவதில்லை.
மேலும், நோபல் பரிசு வாங்குபவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டிருக்க வேண்டும். அப்படியே பணிபுரிந்தாலும் அவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டும். உதாரணமாக அமெரிக்காவிலுள்ள கறுப்பின விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு நிதியே கிடைப்பதில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் கறுப்பின விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுகள் கிடைப்பதில்லை. இதையெல்லாம் மீறி கறுப்பின விஞ்ஞானிகளைத் தேர்ந்தெடுப்பது நோபல் அறக்கட்டளையின் முடிவில்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை: