புதன், 17 அக்டோபர், 2018

ஆயுதபூஜை, ஆபத்தான வேலையில் ஈடுபட்ட மாணவிகள். – பொதுமக்கள் அதிர்ச்சி


school
school nakkheeran.in -rajappriyan: திருவண்ணாமலை நகரத்தில் தேரடி வீதியில் உள்ளது நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 100திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டுகூட இந்தப்பள்ளி 100 சதவிதம் தேர்ச்சி விகிதத்தை காட்டியது. நகரத்தின் பல முக்கிய பிரமுகர்கள் இந்த பள்ளிக்கு தேவையானதை செய்து தர தயாராய் உள்ளனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் ஜோதிலட்சுமி. நாளை  (18.10.18) ஆயுதப்பூஜை, நாளை மறுநாள் (19.10.18) விஜயதசமி விழாவினை முன்னிட்டு இந்த அரசுப்பள்ளி சுத்தம் செய்யப்பட்டது. பள்ளியின் மாடியில் பள்ளிக்காக வைக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க்கை இன்று 10 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு மாணவிகள் 10 பேர் கொண்ட குழு சென்று சுத்தம் செய்தது. அந்த டேங்க்குக்குள் இறங்கிய ஒரு மாணவி, டேங்கில் இருந்த பாசை, மண் போன்றவற்றை சுரண்டி வாரி வெளியே நின்றுயிருந்த மாணவிகளிடம் தர அதை வாங்கி அவர்கள் கீழே கொட்டி பின்பு அதை சுத்தம் செய்தனர்.
"தடுப்புசுவர் இல்லாத மாடிப்பகுதி அந்த டேங்க் அமைக்கப்பட்டுயிருந்த மாடியின் மேற்கு பகுதியில் 50 அடி உயரமிருந்தது. எந்த தடுப்புமில்லை. உள்ளே இறங்கி சுத்தம் செய்த மாணவி பயத்தில் ஆடியிருந்தாலோ, அல்லது டேங்க் மேல் ஏறும் போதோ, இறங்கும்போதே தவறுதலாக ஏதாவது நடந்துயிருந்தால் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழ வேண்டிய நிலை ஏற்பட்டுயிருக்கும்.


இந்த பள்ளியில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட தண்ணீர்தொட்டிகள், டேங்குகளை மாணவிகள்தான் சுத்தம் செய்தார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுப்போன்ற பணிகளை செய்ய பள்ளி நிர்வாகம், வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம் என்கிறது அரசாங்கம். அதற்காக நிதியும் ஒதுக்குகிறது. பள்ளிக்கு வரும் மாணவ – மாணவிகளிடம் ஆசிரியர்கள் எந்த வேலையும் வாங்கக்கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆயுதபூஜை விழாவுக்காக தண்ணீர் டேங்க்கை மாணவிகளை பாதுகாப்பற்ற முறையில் ஆசிரியர்கள் சுத்தம் செய்யவைத்ததை நகரத்தின் முக்கிய வீதியான தேரடிவீதி வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு வேதனைப்பட்டனர்.
இதுப்போன்ற உயிருக்கு உத்தரவாதமில்லாத வேலைகளில் மாணவிகளை ஈடுபடுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை: