திங்கள், 15 அக்டோபர், 2018

ஸ்டாலின் வீட்டில் கலாநிதி மாறனுக்கு நடந்த பஞ்சாயத்து விசாரணை .

டிஜிட்டல் திண்ணை: கலாநிதியிடம் ஸ்டாலின் நடத்திய விசாரணை!மின்னம்பலம்: “மாறன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கலைஞர் எடுத்த திடீர் முடிவில்தான் 2007ஆம் ஆண்டு சன் டிவிக்குப் போட்டியாகக் கலைஞர் டிவி தோன்றியது. இப்போது அதே கலைஞர் டிவியின் நிர்வாகம் முற்றிலும் சன் டிவியின் கைக்குப் போகிறதா என்பதுதான் இன்று தமிழ் தொலைக்காட்சி உயர் வட்டாரங்களில் விவாதிக்கப்படும் தலைப்புச் செய்தி. இதுபற்றி தொலைக்காட்சி வட்டாரங்களில் விசாரிக்கும்போதுதான் தொலைக்காட்சி நிர்வாகம் பற்றி மட்டுமல்ல வேறு பல ஆச்சரியமான உண்மைகளும் வெளிவருகின்றன.
விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இதில் விஜய்யை தளபதி என்ற அடைமொழி கொடுத்தே அழைத்திருந்தனர். இது திமுக தரப்பை டென்ஷனாக்கியது.
மேலும், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் கலைஞருக்கு நடந்த புகழ் வணக்க விழாவில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய வே.மதிமாறன், ‘தமிழ்நாட்டுக்குத் தளபதி என்றால் அது ஸ்டாலின் மட்டுமே...வேறு யாரும் இல்லை’ என்று பேசினார். இந்தப் பேச்சு அடங்கிய வீடியோக்கள் யு ட்யூப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதற்குப் பின்னாலும் சன் தரப்பு இருப்பதாகத் திமுகவினரே குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில்தான் ஸ்டாலினுக்கும், கலாநிதி மாறனுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் இன்னொரு உரசலும் சேர்ந்து, சர்கார் மூலம் வெடித்திருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் கலாநிதி மாறனை அழைத்தார் ஸ்டாலின். கலைஞர் டிவிக்குப் புதிய இயந்திரங்கள் வாங்கவும், பொலிவுபடுத்தவும் 100 கோடி ரூபாய் தேவை என்றும், அதை கலாநிதி மாறனால் முதலீடு செய்ய முடியுமா என்றும் கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு மாறன், ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. சிபிஐ விசாரணை வேறு இருக்கிறது. அதனால் யோசித்துவிட்டுச் சொல்கிறேன்’ என்று ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். சில நாட்கள் கழித்து, ‘கலைஞர் டிவியை நிர்வாகம் செய்ய சன் டிவியில் பணியாற்றும் அனுபவம் மிக்க பத்துப் பேரை அனுப்புகிறேன். அவர்கள் கலைஞர் டிவியை செம்மையாக நடத்துவார்கள். என்னிடம் இருக்கக்கூடிய நவீன இயந்திரங்களையும் தருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் கலாநிதி. இதற்கு ஸ்டாலின் முதல்கட்டமாய் சம்மதம் சொல்லி வைக்க, இத்தகவல் கலைஞர் டிவி சீனியர்களுக்குத் தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
கலைஞர் டிவிக்கு சிஇஓவாக மீண்டும் சரத்குமாரை நியமிக்க வேண்டும் என்பதே ஸ்டாலின் விருப்பம். ஆனால் இந்த மூவை அறிந்துகொண்ட கலாநிதி மாறன், ‘சரத் வேண்டாம். நாங்கள் நியமிக்கும் ஆட்களே போதும்., சரத் ஏற்கனவே சன் டிவியில் நிதியைச் சரியாகக் கையாளவில்லை. கலைஞர் டிவியிலும் தாத்தாவுக்கு (கலைஞருக்கு) தெரியாமல் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார். அதனால் சரத் வேண்டவே வேண்டாம்’ என்று மறுத்திருக்கிறார். ஆனால் சரத் மீது ஸ்டாலினுக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததால் இந்த விஷயம் பற்றி மேலும் சிலரிடமும் விசாரித்திருக்கிறார்.
இதற்கிடையே தன்னைப் பற்றி சிலரிடம் ஸ்டாலின் சந்தேகப்பட்டு விசாரிப்பதை அறிந்த சரத்குமார் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக சபரீசன் மூலம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.
‘என் மேல அவங்க முறைகேடு புகார் உங்களிடம் சொல்லியிருக்கிறதா கேள்விப்பட்டேன். வேணும்னா அப்போது சன் டிவியில் இருந்த ஆடிட்டர்தானே இப்ப கலைஞர் டிவிக்கும் இருக்கிறார். அவரிடம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கங்க’ என்று சொல்லியிருக்கிறார் சரத். ஆடிட்டரும் சரத் பற்றி நல்ல விதமாகவே சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுடனான சந்திப்பில் இன்னொரு விஷயத்தையும் அவரிடம் கொட்டியிருக்கிறார் சரத்.
‘கலைஞர் டிவியோட நிர்வாகத்தை நீங்க சன் டிவிக்கிட்ட கொடுக்குறதுங்குறது உங்க தலைவர் பதவியையே அவங்ககிட்ட கொடுக்கறது மாதிரிதான். பல வருஷம் முன்னாடி என்கிட்ட கலாநிதி மாறன் சாதாரணமா பேசிக்கிட்டிருந்தபோது, ‘எப்படியாவது நம்ம தயாநிதியை திமுகவுக்குத் தலைவராக்கி சிஎம் ஆக்கணும்குறதுதான் என்னோட லட்சியம். திமுக மாவட்டச் செயலாளர் ஒவ்வொருத்தரும் நம்மளோட கேபிள் பிசினஸால மாசம் இருபது லட்சத்துக்கு மேல சம்பாதிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் சில விஷயங்களை செஞ்சுகொடுத்தா அவங்க நம்ம பக்கம் வந்திருவாங்கன்னு கலாநிதியே என்கிட்ட சொன்னாரு. அப்படிப்பட்டவங்க கிட்டயா கலைஞர் டிவி நிர்வாகத்தைக் கொடுக்கப் போறீங்க?’ என்று சரத் நேரடியாகவே ஸ்டாலினிடம் சொல்ல, ஸ்டாலின் அதிர்ந்துவிட்டார்.
இந்தப் பின்னணியில்தான் சர்கார், தளபதி என்று ஸ்டாலினை விஜய் மூலம் வம்பிழுக்கும் காட்சிகள் அரங்கேற ஸ்டாலின் மீண்டும் கலாநிதி மாறனை அழைத்தார்” என்று வாட்ஸ் அப் மெசேஜை செண்ட் செய்தது.
மிகவும் நீண்ட மெசேஜ் என்பதால் மீதியை அடுத்த மெசேஜாக டைப் செய்தது வாட்ஸ் அப்.
“சர்கார் விழாவுக்குப் பின் கலாநிதியைத் தன் வீட்டுக்கு அழைத்தார் ஸ்டாலின். அதை ஏற்று கலாநிதி அங்கே சென்றபோது வீட்டில் ஸ்டாலின், உதயநிதி, மருமகன் சபரீசன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.
கலாநிதி மாறன் வந்ததும் உதயநிதிதான் இந்த டாப்பிக்கை ஆரம்பித்திருக்கிறார். ‘சர்கார் ஃபங்க்‌ஷன் பார்த்தேன். தளபதின்னா அது அப்பாதானே...? நீங்க புதுசா இப்ப தளபதின்னு விஜய்யை ப்ரமோட் பண்றீங்களே? அப்பாவுக்கு எதிராவா?’ என்று கேட்டிருக்கிறார் உதயநிதி. அதற்கு கலாநிதி, ‘ச்சே... ச்சே... அப்டியெல்லாம் இல்லப்பா... அன்னிக்கு நடந்த ஃபங்ஷன்ல ஃபிசிகலாதான் நான் இருந்தேன். அன்னிக்கு ஃபுல்லா ஏதோ ஒரு ஞாபகத்துலயே இருந்துட்டேன். அங்க என்ன நடந்ததுன்னே நான் கவனிக்கலை’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உதயநிதி விடவில்லை. ’கலைக்கு நிதியை வாரி வாரி கொடுக்கும் வள்ளல்னு விஜய் உங்களைச் சொன்னப்ப சிரிச்சீங்களே?’ என்று கேட்க கலாநிதி மாறன் மீண்டும் அதையே சொல்லியிருக்கிறார்.
அப்போது சபரீசன் ஒரு மெயிலின் ப்ரிண்ட் அவுட் பேப்பரை எடுத்து கலாநிதி மாறனிடம் காட்டினார். ‘அந்த விழாவுல விஜய் என்ன பேசணும்னு நாலு நாள் முன்னாடியே ஒரு டிராஃப்ட் எடுத்து உங்களுக்கு அனுப்பிருக்காங்க. நீங்க ஓகே சொன்னபிறகுதான் விஜய்யே பேசியிருக்காரு’ என்று சொல்ல கலாநிதி மாறனால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.
அதன் பிறகு ஸ்டாலின், ‘அப்பா திருவாரூர்லேர்ந்து வந்து கஷ்டப்பட்டாரு, வளர்ந்தாரு. என்னையும் ஆளாக்கினாரு. ஒரே குடும்பம்னு உங்களையும் ஆளாக்கினாரு. அப்பா உங்களை நிறைய அனுசரிச்சாரு. ஆனா, நான் அப்படி இல்லைங்குறத புரிஞ்சுக்கங்க. உங்களை நம்பி நான் திமுக தலைவராகல. தயாநிதி மாறனுக்கு சீட் கொடுக்கறதும்கூட இப்ப என் கையில இருக்கு. இனிமே ஜாக்கிரதையா நடந்துக்கங்க’ என்று கலாநிதி மாறனிடம் மிகக் கோபமாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்”

கருத்துகள் இல்லை: