செவ்வாய், 16 அக்டோபர், 2018

கலைஞர் சிலைதிறப்பு அறிவிப்பு ..... டி.கே.எஸ். இளங்கோவன் நீக்கம்?

கலைஞர் சிலை: டி.கே.எஸ். இளங்கோவன் நீக்கம்!மின்னம்பலம் : மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சிலை தொடர்பாக பேட்டியளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்புத் துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அந்தப் பொறுப்பில் இருந்து நேற்று இரவு (அக்டோபர் 15) அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் சிலை அமைக்கும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னையை அடுத்த மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் தலைமையிலான குழுவினர் கலைஞரின் சிலையை உருவாக்கி முடித்துள்ளனர். இந்த நிலையில் கலைஞரின் சிலையை வரும் நவம்பர் 15ஆம் தேதிவாக்கில் சோனியா காந்தி திறந்து வைப்பார் என்று நேற்று பகலில் வாட்ஸ் அப் செய்திகள் பரவின.

மாநிலத்தில் அடுத்து திமுக ஆட்சி என்று உறுதியாகப் பேசிவரும் திமுக தலைவர் ஸ்டாலின், மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி என்று இதுவரை உறுதியாகப் பேசவில்லை. மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் அக்கட்சிக்கு ஒற்றை இலக்கத்திலேயே மக்களவைத் தேர்தலில் ஒதுக்கீடு செய்வார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தைலாபுரம் தோட்டத்தில் தனது சம்பந்தியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமியுடன் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘காங்கிரஸ் தலைமையில் பாமக உள்ளடக்கிய ஓர் அணி அமைவது பற்றி’ சில மாதங்களுக்கு முன்பே பேசியதாக நாம் செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
ஏற்கெனவே காங்கிரஸோடு கூட்டணிக்குத் தயார் என்று டிடிவி தினகரன் அறிவிக்க, சில நாட்களுக்கு முன் திமுகவோடு கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸோடு இணைந்து செயல்படத் தயார் என்று கமல்ஹாசனும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கலைஞர் சிலையை சோனியா திறந்து வைத்தால் அது திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதுகுறித்து நேற்று சில செய்தியாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பேட்டியளித்தார் டி.கே.எஸ். இளங்கோவன்.
“கலைஞர் சிலை தயாரிப்புப் பணிகள் நிறைவு கட்டத்தில் இருக்கின்றன. தலைவர் மு.க.ஸ்டாலின்கூட சிலைப் பணிகளைப் பார்வையிட்டார். சில திருத்தங்களைச் சொன்னார். அவை செய்யப்பட்டுவிட்டன. நவம்பர் 15 வாக்கில் சிலை திறப்பு நடைபெறலாம். சிலை தயாரிப்பு நிகழ்ச்சியில் தேசிய தலைவர்களை அழைத்திருக்கிறோம். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்களை அழைத்திருக்கிறோம். அந்த நேரத்தில் நாடாளுமன்றம் இருக்கிறதா என்று கூட இப்போது தெரியவில்லை. அவர்களின் பதிலைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் இந்தப் பேட்டியை அளித்த சில மணி நேரங்களில், டி.கே.எஸ். இளங்கோவன் செய்தித் துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஒற்றைவரிச் செய்தி அறிவாலயத்தில் இருந்து பொதுச் செயலாளர் அறிவிப்பாக வெளியானது.
“கலைஞர் சிலை திறப்பு என்ற முக்கியமான விஷயம் பற்றி தலைவர் ஸ்டாலின் தான் முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்னரே யார் யாருக்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம், என்ன தேதியில் நடக்கும் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டார் இளங்கோவன். அதனால்தான் இந்த நீக்கம்” என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
இளங்கோவன் மீதான நடவடிக்கையால் திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி மீண்டும் ஆராய்ச்சிகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: