வெள்ளி, 21 செப்டம்பர், 2018

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் டாக்டர் பிரபுவுக்கு வாய்ப்பு?

டிஜிட்டல் திண்ணை: சேலத்தில் ஸ்டாலின் போடும் புதுக் கணக்கு!மின்னம்பலம்: "திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாதான் சேலம் கிழக்கு மாவட்டத்தின் பொறுப்பாளர். மத்திய மாவட்டப் பொறுப்பாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் ஸ்டாலினுக்கு நெருக்கம் என்பது திமுகவினருக்குத் தெரியும். சேலத்தில் எந்தத் தகவல் என்றாலும் அது ராஜேந்திரன் மூலமாகத்தான் ஸ்டாலின் கவனத்துக்கு வரும். அதேபோலக் கட்சியிலிருந்து தகவல் சொல்வதாக இருந்தாலும் அது ராஜேந்திரன் மூலம்தான் சேலத்துக்குச் சொல்லப்படும். இதுதான் இதுநாள் வரை நடைமுறையாக இருந்தது. இது அப்படியே இருக்கட்டும்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியார் லீலாவதி. அதாவது வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி. இவர்களது மகன் டாக்டர் பிரபு. வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகுதான் திமுகவில் தலைகாட்ட ஆரம்பித்தார் பிரபு.
சென்னையில் வசிப்பதால் அடிக்கடி அறிவாலயம் வருவதும் போவதுமாக இருந்தார். வீரபாண்டியாரின் சாயல் அப்படியே பிரபுவுக்கு இருக்கும். வீரபாண்டியார் குடும்பத்தை ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் ஒதுக்கிவந்தாலும், பிரபுவிடம் மட்டும் கொஞ்சம் நெருக்கம் காட்டிவந்தார். கலைஞர் மறைவுக்குப் பிறகு அந்த நெருக்கம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. முன்பு அவ்வப்போது அறிவாலயத்துக்கும் செனடாப் ரோட்டுக்கும் வந்த பிரபு, இப்போது அடிக்கடி வருகிறார்.
சேலம் மாவட்ட நிர்வாகிகள் யார் ஸ்டாலினைச் சந்திக்க வந்தாலுமே, 'பிரபுவைக் கூப்பிடுங்க...'. என்கிறாராம் ஸ்டாலின். வீரபாண்டியாரின் மூத்த மகன் ராஜாவே அண்மைக் காலமாக பிரபு இல்லாமல் ஸ்டாலினைச் சந்திப்பதே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே பிரபுவும் இருந்தாராம். அவரைப் பார்த்ததும், 'நீங்க எங்கே இங்கே வந்தீங்க?' என விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். கட்சிக்காரர்களே ஸ்டாலினுக்கும் பிரபுவுக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்த்துக் கொஞ்சம் மிரண்டுவிட்டார்களாம்.
இது மட்டுமல்ல திமுக தரப்பில் இன்னொரு தகவலும் ஓடுகிறது. 'வீரபாண்டியாருக்குப் பிறகு சேலம் மாவட்டத்தை வழிநடத்தச் சரியான நபர் இல்லை என்பதைத் தளபதியும் நன்றாகவே உணர்ந்துகொண்டார். அதுவும் எடப்பாடியை எதிர்த்து நிற்க சேலத்தில் ஒரு ஸ்ட்ராங்கான ஆள் வேண்டும் எனக் கணக்குப் போடுகிறார். அதுவும் அந்த நபர் வீரபாண்டியார் குடும்பத்திலிருந்து வந்தால் அது மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பிரபுவுக்கு சேலத்தைக் கொடுத்தால் என்ன, என்பது வரை ஆலோசிக்கப்பட்டதாம்.
மாவட்ட நிர்வாகங்களுக்குச் சில தகவல்கள் இப்போது பிரபு மூலமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ’மாசத்துல 10 நாளாவது இனி சேலத்தில் இருங்க’ என்றும் பிரபுவுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பிரபுவின் தலையும் சேலத்தில் அதிகமாகவே தென்பட ஆரம்பித்திருக்கிறது." என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது ஃபேஸ்புக். "எடப்பாடி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக தூத்துக்குடி போய் அங்கிருந்து கன்னியாகுமரி போயிருக்கிறார். இன்று இரவு கன்னியாகுமரியில் அதிமுக பிரமுகர் ஒருவரின் ஹோட்டலில் தங்குகிறார். கடலைப் பார்த்தபடி இருக்கும் அந்த ஹோட்டலில் எடப்பாடிக்காக ’ஸீ வியூ ரூம்’ போடப்பட்டிருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரை இன்று கன்னியாகுமரிக்கு வரச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். இன்று இரவு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் சில ரகசிய ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஆலோசனையின் முக்கியமான கருப்பொருள் தினகரன்தான்! ஆலோசனையில் என்ன நடந்தது என்பதை நாளை சொல்கிறேன்." என்பதுடன் அந்த ஸ்டேட்டஸ் முடிந்தது.

கருத்துகள் இல்லை: