புதன், 19 செப்டம்பர், 2018

பாகிஸ்தான் அரசு வாகன ஏல விற்பனை தோல்வி .. இம்ரான் கான் ஏமாற்றம்

இம்ரான் கான்இம்ரான் கான்.vikatan.com- அஷ்வினி சிவலிங்கம் : பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்குச்  சொந்தமான சொகுசு கார்களும்  ஹெலிகாப்டர்களும் நேற்று ஏலம் விடப்பட்டன. `இந்த ஏலத்தில் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை' என்ற ஏமாற்றத்தில் இருக்கிறார் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற இம்ரான் கான், >நாட்டின் பொருளாதார நெருக்கடியைச்சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் முதல்கட்டமாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்காக அரசு செய்துவரும் தேவையற்ற செலவுகளைத் துண்டிக்க உத்தரவிட்டார். `பதவியேற்ற நாள் முதல், பிரதமர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கார்களையும் ஹெலிகாப்டர்களையும் இம்ரான் கான் பயன்படுத்துவதே இல்லை. ஆடம்பரமான பிரதமர் மாளிகையிலும் தங்கவில்லை. தன் சொந்த வீட்டில் அவர் வசிக்கிறார்' என உள்ளூர் ஊடகங்கள் அவரைப் பாராட்டியுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக பாகிஸ்தானை ஆட்சி செய்த இரண்டு மிகப்பெரிய கட்சிகளும் ஊழல் அரசை உருவாக்கிவிட்டுச் சென்றுவிட்டதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், `தற்போது பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நாட்டை மீட்க அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் உதவ வேண்டும்' என்று கோரியுள்ளார்.  
மேலும், உயர் அதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களையும் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் ஏலத்தில்விட முடிவு செய்த இம்ரான், இஸ்லாமாபாத்தில் நேற்று ஏலத்தையும் நடத்தி முடித்தார். ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இம்ரான் கணித்த அளவுக்கு ஏலத்தில் லாபம் கிடைக்கவில்லை. குண்டு துளைக்காத கார்கள், விலையுயர்ந்த சொகுசு கார்கள் உள்ளிட்டவை ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.
இம்ரான் கான்
தொழிலதிபர்களும் கார் பிரியர்களும் கலந்துகொண்ட அந்த ஏலத்தில், 1.6 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இது இம்ரான் கான் கணித்த தொகையின் 10% மட்டுமே. ஏலத்துக்கு விடப்பட்ட 100 வாகனங்களில் 61 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. அதாவது, இம்ரான் எதிர்பார்த்தது 16 மில்லியன் டாலர் கிடைக்குமென்று. இது இம்ரான் கான் அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதனிடையே ஏலத்தில் பங்குபெற்ற சிலர், டோக்கன் தொகையைச் செலுத்தாமல் சென்றுவிட்டதாக பாகிஸ்தான் ஊடகமான Dawn செய்தி வெளியிட்டுள்ளது. ஏலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் மிகவும் பழைமையானவை என்பதால் அவற்றை அதிக தொகைக்கு ஏலம் எடுத்துவிட்டோமோ என்ற குழப்பத்தில், அவர்கள் டோக்கன் தொகையைச் செலுத்தாமல் சென்றுவிட்டனராம். இதனையடுத்து அந்த வாகனங்கள் மீண்டும் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. 

கருத்துகள் இல்லை: