ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ராக தாளங்கள் .சில்க் ஸ்மிதா நடித்த கடைசி படம் விரைவில் வருகிறது .. ஜாதிக்கதை என்பதால் தணிக்கையில் தகராறு ?

மின்னம்பலம் :சில்க் ஸ்மிதா நடித்து வெளியாகாமல் இருந்த அவரது கடைசிப்படம் தற்போது
வெளியாகவுள்ளது.
தமிழ்த் திரையுலகில் 80களில், ரசிகர்களின் மனதில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அதன் பின்னர் பல்வேறு கதாநாயகிகள் வந்தாலும் இவரது மார்க்கெட் மட்டும் என்றும் குறையாமல் இருந்தது. தமிழைக் கடந்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார்.
இவர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தப்பட்டார். இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கமுடியும் என்பதனை நிரூபித்தார்.
திரைப்படத் துறையில் ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. மலையாளத்தில் ‘இணைய தேடி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனையடுத்து 1980ஆம் ஆண்டு ‘வண்டிசக்கரம் ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவாக அறிமுகமானார்.
அதற்கு முன் இயக்குநர் திருப்பதி ராஜன் இயக்கத்தில் உருவான ‘வீணையும் நாதமும்’ என்ற திரைப்படம் தான் சில்கிற்கு முதல் தமிழ் படம். அந்த படம் வெளியாகாமல் போனது. அதே போல் நடிகை சில்க் ஸ்மிதாவை வைத்து கடைசி படத்தை 1995ஆம் ஆண்டு ‘ராக தாளங்கள்’ என்ற பெயரில் எடுத்துள்ளார் திருப்பதி ராஜன். ஆனால், அந்தப் படம் வெளியாகாமல் போக தற்போது அந்த படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்.
இந்த படத்தில் சாதிப் பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சினை ஆகியுள்ளது. இதனால் இந்த படத்தை அப்போது வெளியிட முடியாமல் போயுள்ளது. எனவே தற்போது இப்படத்தை வெளியிட முடிவு செய்து சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் சில்க் ஸ்மிதா, அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: