வியாழன், 20 செப்டம்பர், 2018

முட்டைக்கு 1000 கோடி, எடப்பாடிக்கு 3,120 கோடி.. தங்கமணிக்கு 1 லட்சம் கோடி!” ஸ்டாலின் கணக்கு

ஊழல் பட்டியல் வெளியிட்ட ஸ்டாலின்``முட்டைக்கு 1000 கோடி, எடப்பாடிக்கு 3,120 கோடி.. தங்கமணிக்கு 1 லட்சம் கோடி!vikatan.com--k.dhanasekaran" “இதைச் சொல்வதால் சிறைக்குச் செல்லவும் தயார். இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நாங்கள் சிறையைப் பார்க்காதவர்கள் இல்லை. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவந்தால் முதலில் ஓ.பி.எஸ்ஸும்,  ஈ.பி.எஸ்ஸும்தான் சிறைக்குப் போவார்கள்” – ஸ்டாலின்< “நெடுஞ்சாலைத் துறை, ஸ்மார்ட் சிட்டி, குட்கா, எல்.இ.டி பல்ப் மற்றும் பருப்பு, அரிசி, பால் தவிர படிக்கும் மாணவர்களின் மார்க் ஷீட் என  இந்த ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் ஏராளம். இந்த ஊழல் பட்டியலை முன்வைத்து, `எங்கும் ஊழல்… எதிலும் ஊழல்’ என்ற முழக்கத்துடன் சேலம் ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு எதிரே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநில தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் செல்வகணபதி, பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், “இந்த ஊழல் ஆட்சியை அகற்றிவிட்டு, தளபதி (ஸ்டாலின்) தலைமையில் நல்லாட்சி மலர நீங்கள் உதவ வேண்டும்” என்றார். அதையடுத்து பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தை ஆளும் அநியாய, அக்கிரம ஆட்சிக்கும், மோடி தலைமையிலான மத்திய ஆட்சிக்கும் முடிவுகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, தேர்தல் வருவதற்கு முன்பே இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டுவிடும் எனக் கருதுகிறேன். நான் தலைவர் ஆனபிறகு முதல் போராட்டத்துக்காகச் சேலம் வந்திருக்கிறேன். சேலத்துக்கு வருவதற்குக் காரணம், இங்குள்ள கோட்டைப் பகுதியில் தலைவர் கலைஞர் குடியிருந்துள்ளார். சேலம் மாடர்ன் தியேட்டரை எப்படி மறக்க முடியாதோ, அதேபோல சேலம் கோட்டைப் பகுதியையும் மறக்க முடியாது.
கலைஞர், சேலம் கோட்டைப் பகுதியில் தங்கியிருந்த காலத்தில்… `மந்திரிகுமாரி’ என்ற படத்துக்கு கதை – வசனம் எழுதினார். அதில், கொள்ளைக்கார பார்த்திபன் கேரக்டர் வரும். அந்தக் கொள்ளைக்கார பார்த்திபனாக… எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கிறேன். சேலம், மாம்பழத்துக்குப் பெயர்போன நகரம். மாம்பழத்தில் வண்டு நுழைந்தால் எப்படித் தூக்கி எறிந்துவிடுவோமோ, அதைப்போல ஊழல் எடப்பாடி அரசைத் தூக்கி எறிய வேண்டும்.
`ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் ஊழலை விசாரியுங்கள்’ என்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சொன்னால், `அந்தத் துறை அதிகாரிமீதே பாலியல் புகார் இருக்கிறது. `அந்த அதிகாரி மீதுள்ள பாலியல் புகாரை விசாரியுங்கள்’ என்று காவல் துறை டி.ஜி.பி ராஜேந்திரனிடம் சொன்னால், அவர் மீதே குட்கா புகார் இருக்கிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஸ்மார்ட் சிட்டியில் ஊழல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கான்ட்ராக்ட் துறையில் ஊழல், அமைச்சர் காமராஜ் பருப்பு வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் 200 கோடி ரூபாய் ஊழல், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 300 கோடி ரூபாய் ஊழல், சமூக நலத்துறையின் மூலம் முட்டை வாங்கியதில் 1,000 கோடி ரூபாய் ஊழல், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கருவிகள் வாங்கியதில் 89 கோடி ரூபாய் ஊழல் எனத் தமிழக அரசின் பல துறைகளில் ஊழல் நடந்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின்
டி.வி நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்துவதுபோல ஊழல் போட்டி நடத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, 33 அமைச்சர்களும் சிறந்த ஊழல்வாதிகள் என வெற்றிபெறுவார்கள். நான் போகிறபோக்கில் பேசக் கூடியவன் அல்ல… நான் கலைஞரின் மகன்; ஆதாரத்தோடு பேசுவேன். துணிவு, தெம்பு இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள் பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமி ஊழல்:
முதல்வர் கையில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் அனைத்து ஒப்பந்தங்களும் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியத்தின் நிறுவனத்துக்கே கொடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் 3,120 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து ஆளுநரிடம் மனு  கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம்.
இதுபற்றி பத்திரிகையாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, `ஏன்… என் சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுக்கக் கூடாதா’ என்கிறார். உலக வங்கியில் கடன் பெறும்போது உலக அரங்கில் குளோபல் டெண்டர் விதிமுறைப்படி ஒப்பந்தத்தில் ஊழல் இருக்கக் கூடாது. உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது. கூட்டுச் சதி இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. ஆன்லைன் டெண்டர் விடாமல் நேரடி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 310 கோடி ரூபாய் தொகையைக் கையாடல் செய்திருக்கிறார்கள்.
வேலுமணி ஊழல்:
33 அமைச்சர்களில் தலைசிறந்த ஊழல் அமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி என்பது அம்பலமாகி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சித் துறையில் உள்ள பணிகளை அவருடைய 8 பினாமி நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வெறும் 17 லட்ச ரூபாய் அளவில் தொழில் செய்துவந்த கே.சி.பி. நிறுவனம், தற்போது 498 கோடி ரூபாய் அளவுக்குத் தொழில் செய்து வருகிறது. 86 லட்சம் ரூபாய் அளவில் தொழில் செய்த இவருடைய பினாமி கன்சல்ட்டிங் நிறுவனம் தற்போது 28 கோடி ரூபாயாகவும், 9 கோடி ரூபாய் அளவில் இயங்கிய நிறுவனம், தற்போது 147 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது எப்படிச் சாத்தியமானது. எல்.இ.டி. பல்ப் மாற்றியதில் வேலுமணியின் பினாமி நிறுவனமான பூங்கோதை நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது. அதில், 139 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 10 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் ஊழல் நடந்திருக்கிறது.
தங்கமணி ஊழல்:
மின்சாரம் கொள்முதல் செய்ததில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. நிலக்கரி வாங்கியதில் 18 ஆயிரத்து 80 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. மின் மோட்டார்கள் வாங்கியதில் மெகா ஊழல் செய்திருக்கிறார், அமைச்சர் தங்கமணி.
தி.மு.க
விஜய்பாஸ்கர்:
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்றால் பொதுமக்களுக்குத் தெரியாது. `குட்கா புகழ்’ விஜயபாஸ்கர் என்றால்தான் மக்களுக்குத் தெரியும். கொடிய நோயான கேன்சரை ஏற்படுத்தக்கூடியது, குட்கா. இதை, தடுக்காமல் மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார், அமைச்சர் விஜயபாஸ்கர். இவர், போதை நிறுவனங்களை நடத்திவருவதுடன், 350 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். அதிகாரிகளை இடமாற்றம் செய்ததில் 20 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே குட்கா மூலம் 400 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். விஜயபாஸ்கர் வீட்டில் 89 கோடி ரூபாயை ரொக்கமாகப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர். அவருடைய அப்பா வீட்டில் 20 கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர், அப்பாவிடம் இந்தப் பணம் எப்படி வந்தது என்று கேட்டதற்கு, `என் மகன் வாங்கிய பணம்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
பன்னீர்செல்வம்:
200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமெரிக்கா, இந்தோனேஷியா, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளில் நிலங்கள் வாங்கிக் குவித்துள்ளார், ஓ.பன்னீர்செல்வம். தன்னுடைய சொந்தத் தொகுதியில் 150 ஏக்கர் மாந்தோப்பு வாங்கி இருக்கிறார்.
இப்படி அனைத்து அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களையும் வைத்திருக்கிறோம். பிரதமர் மோடி இந்த ஊழல்வாதிகள் அடித்த ஊழலில் கமிஷன் வாங்கியதால்தான், இந்த ஆட்சியைக் கலைக்காமல் காப்பாற்றி வருகிறார். இதைச் சொல்வதால் சிறைக்குச் செல்லவும் தயார். இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நாங்கள் சிறையைப் பார்க்காதவர்கள் இல்லை. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவந்தால் முதலில் ஓ.பி.எஸ்ஸும்,  ஈ.பி.எஸ்ஸும்தான் சிறைக்குப் போவார்கள்.
நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது, தொழில் துறையில் வேலைவாய்ப்பு இல்லை. சமூகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எஸ்.பி-க்கே பாதுகாப்பு இல்லை. நாங்கள் ரகசியமாக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் செய்யும் ஊழல்களை விசாரித்து பட்டியல் தயார் செய்திருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
ஆளும் கட்சியினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டுத் தேர்தலுக்கு இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது தி.மு.க.
vikatan.com

கருத்துகள் இல்லை: