
தினமலர் :கொழும்பு: இந்திய தொழிலதிபரிடமிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்ற இலங்கை அதிபர் சிறிசேனாவின் தலைமை உதவியாளர் ஐ.எச்.கே.மகாநாமா, மரவளர்ச்சி ஆணைய தலைவர் பியதசா திசநாயகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை திரிகோணமலையில் கந்தளாய் சர்க்கரை ஆலை உள்ளது. 25 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை. இதை மீண்டும் இயங்கச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை ஏற்று நடத்த இந்திய தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார்.ஆனால் அவருக்கு ஆலையை தருவதற்கு அதிபர் சிறிசேனாவின் முதன்மை உதவியாளர் ஐ.எச்.கே.மகாணாமா 540 மில்லியன் இலங்கை ரூபாய்களை லஞ்சமாகக் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் 100 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலதிபர் இலங்கையின் சி.பி.ஐ.யான லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணையத்திடம் புகார் அளித்தார்.லஞ்சப்பணத்தில் முதல் தவணையாக 20 மில்லியன் ரூபாய்கள் கொழும்பு தாஜ் சமுத்ராவின் கார் பார்க்கில் வைத்து கைமாறியுள்ளது. இதையடுத்து விசாரணை ஆணைய அதிகாரிகள் மகாணாமாவை கைது செய்தனர். லஞ்சம் பெற உதவியதாக அரசு மர வளர்ச்சி வாரிய தலைவர் பியதசா திசநாயகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.இருவரையும் பதவியில் இருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சம் கொடுத்த தொழிலதிபர் யார் என்பதை விசாரணை ஆணையம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக