ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

களத்துமேட்டு நிலங்களை களவாடலாமா பத்மா சுப்பிரமணியம்? பரதமுனியை புரோமோட் பண்ணியது போதும் அம்மணீ


Savithri Kannan :பத்மா சுப்ரமணியத்தின் 'பரத நாட்டிய' புரட்டு பற்றி தொடர்ந்து அம்பலப்படுத்தி
வரும் தோழர் Savithri Kannan அவர்களது அடுத்த பதிவு தோழர்களின் பார்வைக்கு...
இனியேனும் உங்களை சுயபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள்….!
பத்மாசுப்ரமணியம் அவர்களே……..
-சாவித்திரிகண்ணன்
முந்தைய பதிவின் மூலம் உண்மைக்கும், நியாயத்திற்கும் வலுசேர்க்க இணைந்த, ஷேர் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பத்மாசுப்ரமணியத்தின் பரதமுனி நினைவுமண்டப திறப்பு விழாவை தமிழகத்தின் மிகப்பெரும்பாலான நடனக்கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர் என்ற செய்தி கிடைத்தது.
ஒரே இடத்தில் ஆயிரம் பரதக்கலைஞர்களை கொண்டு நாட்டிய அரங்கேற்றம் நடத்தியவர் பத்மா. 50 வருடங்களுக்கும் மேலாக நாட்டிய கலையில் இயங்கி வருபவர்.
அவரது வாழ்நாளின் ஒரே லட்சியக்கனவான பரதமுனி நினைவு மண்டப திறப்புக்கு ஒரு 50க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கூட இல்லை.
நிகழ்ச்சிக்குச்சென்ற நிருபர்களிடம் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பொங்கி வெடித்துள்ளார்.
களத்துமேட்டு நிலங்களை களவாடலாமா பத்மா சுப்பிரமணியம்?

ஒரு முக்கிய தகவல் என்னவென்றால், பட்டிபுலம் கிராமத்தில் தமிழக அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் மட்டுமே தந்துள்ளது. ஆனால், கிராமத்திலுள்ள மேலும் 3 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார் பத்மா. கிராமமக்களின் களத்து மேட்டுப்பகுதி இப்படி பரதமுனி பெயரால் கார் பார்க்கிங் இடமாக பறிபோயுள்ளது. மக்களின் ஆட்சேபத்தை அவர் பொருட்படுத்தவில்லை. “மத்திய அரசே நமக்கு ஆதரவாக உள்ளது என்ன செய்ய முடியும்? என்ற அசட்டுத்துணிச்சலுடன் செயல்படுகிறார். பரதமுனி நினைவு மண்டபத்திற்காக உலகமெங்கிலிமிருந்து பெரும் நிதியை அவர் திரட்டியதாக தெரிகிறது. ஆனால், அவருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்புகூட கிடைக்கவில்லை.
பொதுவாக அவர் எதை விரும்புகிறரோ, அதை, நியாய தர்மங்களை புறம் தள்ளி நிறை வெற்றியே தீருவார் என்பது அவரை அறிந்த அனைவருக்குமே தெரிந்தது தான்!
பரதமுனி என்ற கற்பனை கதாபாத்திரத்தை அவர் கடந்த 37 ஆண்டுகளாக முரசறைந்து வருகிறார்.
திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்புகள் வந்தன. தெளிவான விளக்கங்கள், சான்றுகள் தரப்பட்டன. எனினும் திருத்திக்கொள்ளாமல் திரும்பத் திரும்ப சொல்லி நினைத்ததை நடத்திக்கொண்டார்.
1981ல் மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்த போது, மேடையில் பத்மாசுப்ரமணியம், “பரதமுனிவர் எழுதிய நாட்டிய சாஸ்த்திரத்தையை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்” என பேசிச்சென்றபோது
அந்த மேடையிலேயே அதற்கு உடனடி எதிர்வினை வெளிப்பட்டது. நீதிபதி மகாராஜன், சாலை இளந்திரையன், டாக்டர். இளவரசு ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பார்வையாளர்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்வினைகள் எழுந்தன. பத்மா சுப்பிரமணியம் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று!
இது மட்டுமல்ல, தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர்கள் தேவநேயபாவாணர், வள்ளுவர் கோட்டத்தையும், தென்குமரியில் திருவள்ளுவர் சிலையையும் நிறுவிய கணபதி ஸ்தபதி போன்றோர்களும் 30 ஆண்டுகளுக்கு முன்பே பத்மாசுப்ரமணியத்திற்கு தெளிவான விளக்கங்கள் தந்துள்ளனர்.
எனினும் மூர்க்கத்தோடு துணிந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுகிறார். இந்த துணிச்சலுக்கு ஒரு பெரிய வரலாற்றுபின்புலம் உள்ளது. அதை புரிந்து கொண்டால் அதன் தொடர்ச்சி தான் பத்மாசுப்பிரமணியம் என நமக்கு புரியவரும்.
புதுடில்லியில் முதன்முதலாக மேடையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தி, ‘இதற்குப் பெயர் தான் பரதநாட்டியம்’ என்று ருக்குமணி அருண்டேல் 60 ஆண்டுகளுக்கு முன்பு கூறியபோது, அதேமேடையில் ஆடல்கலையில் அபிநயசரஸ்வதி என பெயர் பெற்ற பாலசரஸ்வதி அம்மையார், “தவறு இது தமிழ்நாட்டின் வழக்கிலுள்ள சதிராட்டம் என்று விளக்கமளித்தார்.
இது பரதநாட்டியம். பரதமுனிவரால் கற்பிக்கப்பட்டதே என்றால் இதற்கு ஆதாரமாக வட இந்தியாவில் ஏதேனும் ஒரு கல்வெட்டிலோ,, கோயில்களிலோ கல்வெட்டு அல்லது சிற்ப ஆதாரங்கள் இருக்கவேண்டுமே? ஏன் இல்லை? வட இந்தியாவில் கூட யாருக்குமே தெரிந்திராத பரதமுனிவருக்கு தென் இந்தியாவில் நினைவு மண்டபமா?
வி.கே.சூரியநாராயண சாஸ்த்திரி என்ற தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி கொண்ட வரலாற்று ஆய்வாளரின் கூற்றுப்படி பல்லவர் காலத்திலும், சோழர்காலத்திலும் மருத்துவம், நாட்டியம், இசை, வானியல், தத்துவம் ஆகிய குறித்து தமிழல் எழுதப்பட்ட நூல்களை அப்படியே சமஸ்கிருத்ததில் பெயர்த்தோடு மூலநூல்களை அழித்தனர். அந்தவிதமாக சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டும் நாட்டிய நன்நூலின் மொழிபெயர்ப்பே பரதமுனி என்ற பெயரால் தொகுக்கப்பட்டுள்ள நாட்டிய சாஸ்திர நூல். இந்த நூலின் காலக்ட்டம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டாக கணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதே நமது சிலப்பதிகாரம், சிலப்பதிகாரத்திற்கும் முந்தியே தொல்காப்பியத்திலும் பத்துபாட்டு, எட்டுத்தொகையிலும் நாட்டிய கலையின் கூறுகள் அழகாக வெளிப்பட்டுள்ளன.
இது ஒரு எளிய உண்மை! இந்த டிஜிட்டல் உலகத்தில் கட்டுக்கதைகளும் புராணபுரட்டுகளும் கேள்விக்குட்படுத்தப்படாது ஏற்கப்படும் என எப்படி நம்புகிறார் பத்மா சுப்பிரமணியம்?
முற்றும் துறந்த முனிவருக்கு வாழ்க்கையையும், மானுட உடலின் அசைவுகளையும் அணுஅணுவாக கலைபூர்வமாக ரசித்து, சுவைத்து அதை அனுபவத்தில் கொண்டுவரும் நடனக்கலை மீது எப்படி ஆர்வம் பிறக்கும்?
பாரதியின் கூற்றுப்படி
ஒன்றுள்ளதுண்மை ஒன்றுள்ளதுண்மை – அதை
கொன்றிடலொண்ணாது, குறைத்திடலொண்ணாது.

கருத்துகள் இல்லை: