ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

குஜராத்தில் 5259 விவசாயிகள் தற்கொலை செய்ய முடிவு

குஜராத்தில் 5259 விவசாயிகள் தற்கொலை செய்ய முடிவுமின்னம்பலம்: குஜராத்திலுள்ள பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 5259 விவசாயிகள் தற்கொலை செய்ய உரிமை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள செய்தி அந்த மாநிலம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பாவ்நகர் மாவட்டத்திலுள்ள கோக்லா தாலுகாவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதியன்று தங்களது நிலங்களை குஜராத் மி்ன் கழகம் வலுக்கட்டாயமாக எடுத்து கொண்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவர்களைக் கலைக்க கண்ணீ்ர் புகை குண்டுகள் வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இந்த சம்பத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1997ல் குஜராத் மின் கழகம் 5000 விவசாயிகளிடமிருந்து 4942 ஏக்கர் நிலங்களை ஏக்கா் ஒன்றுக்கு 40,000 ருபாய் வீதம் நட்ட ஈடு கொடுத்து வாங்கியது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் 20 ஆண்டுகள் வரை விவசாயிகள் தங்களது நிலங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு விதி சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது 20 ஆண்டுகள் முடிந்த நிலையில் மின் கழகம் நிலங்களை எடுத்துக்கொள்ளத் தொடங்கியது.

ஆனால் கடந்த 2015ல் இயற்றப்பட்ட நில ஆளுகை ,மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் வாங்கப்பட்ட நிலம் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தபடாமல் இருந்தால் அது பழைய உரிமையாளருக்கே திரும்பி அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி வாங்க வேண்டுமானால் தற்போதைய விலையின்படி நிலத்திற்கு நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் அச்சட்டத்தில் விதிகள் உள்ளன.
இதைச் சுட்டிக்காட்டும் விவசாயிகள் தங்களது நிலங்களை தர மறுக்கின்றனா். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாய அமைப்பின் தலைவர் நரேந்திரசின்கா கோகில் கூறுகையில் ,அவர்கள் எங்களது நிலங்களை அடித்து நொறுக்கி விட்டு நிலங்களை பிடுங்கி விட்டு துரத்தி விட பார்க்கின்றனர். அது சாத்தியமே இல்லை என்று தெரிவித்துள்ளார். புதிய நில ஆளுகை சட்டப்படி ,தற்போதைய விலையின் அடிப்படையில் நட்ட ஈட்டைத்தர வேண்டும் என்றும் அவர் கோரி்க்கை விடுத்துள்ளார்.
அரசு தற்போதைய புதிய நில ஆளுகைச் சட்டத்தின்படி நட்ட ஈட்டைத்தர மறுக்கின்ற சூழலில் நிலங்களை அரசு எடுத்துக் கொண்டால் எங்களுக்கு சாவதைத்தவிர வேறு வழியில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்ள உரிமை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் குஜராத் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்

கருத்துகள் இல்லை: