திங்கள், 30 ஏப்ரல், 2018

கூட்டுறவு சங்க தேர்தல் ...அதிமுகவுக்கு அனுமதி: எதிர்க்கட்சிகளுக்கு போலீசார் பயங்கர தடியடி!

அதிமுகவுக்கு அனுமதி: எதிர்க்கட்சிகளுக்கு தடியடி!மின்னம்பலம :திருப்பூர் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது அதிமுகவினரை மட்டுமே அனுமதிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஏப்ரல் 30) நடைபெற இருந்தது. இதற்காகப் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்குக் கூடியிருந்தனர். ஆனால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அதிமுகவினரைத் தவிர மற்ற கட்சிகளைச் சேர்ந்த யாரையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

இதனைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் வங்கியின் நுழைவு வாயிலை பூட்டியக் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி ஷோபா வேட்பு மனு தாக்கலை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து திமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேட்புமனு தாக்கல் செய்ய முடியாதபடி தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இதுகுறித்து என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் பேசி முடிவெடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரி காலத்தின் கட்டாயத்துக்குப் பதில் கூறியே ஆக வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதுபோலவே சேலம் செவ்வாய்ப்பேட்டை கூட்டுறவு வங்கியில் வேட்புமனு பெறுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: