சனி, 5 மே, 2018

மாமல்லபுரம் சுற்றுலா டிக்கெட்டில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது .. இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே ..

சுற்றுலா டிக்கெட்: தமிழ் புறக்கணிப்பு!மின்னம்பலம்: புகழ்பெற்ற மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கான டிக்கெட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது.
யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோயில் மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவருகின்றன. புராதனச் சின்னமாக விளங்கும் இந்த கடற்கரைக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. மேலும், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் ஆகிய புராதன கலைச் சின்னங்களும் உள்ளன. மாபெரும் யானைகள், குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவற்றின் உருவங்களும் பாறைகளில் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் இந்திய அளவில் சுற்றுலாவிற்கு வருகைதரும் வெளிநாட்டினர் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர். அவ்வாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 500 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் கலாச்சாரப் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுவரும் சுற்றுலா டிக்கெட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் தொல்லியல் துறை சார்பாக வழங்கப்படும் டிக்கெட்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடும் வகையில் மென்பொருள் உள்ள கணினிகள் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாகத் தொல்லியல் துறை மாவட்ட முதன்மை அதிகாரி தரணிதரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: