சனி, 27 மே, 2017

‘பிருந்தாவனம்’ - Feel good படங்களுக்கு மீண்டும் ஒரு ரவுண்டு


இயக்குநர் ராதாமோகன் அதிக செலவு வைக்காமல், பெரிய நடிகர்களை நடிக்க வைக்காமல் கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவான படங்களை கொடுப்பவர் என்ற பெயரை இன்றுவரை தக்கவைத்துள்ளார். தற்போது வந்துள்ள பிருந்தாவனமும் அவரது நல்ல படங்களின் பட்டியலில் வலுவாக இடம் பெறுகிறது. ராதாமோகன் அவரது முதல் படமான ‘அழகிய தீயே’, சினிமாவுக்கு சென்று வெற்றி பெற முற்படும் இளைஞர்களின் போராட்டங்களை நகைச்சுவை ததும்ப சொல்லியிருப்பார்.

அதன் றகு வந்த அவரது படங்களான மொழி, பயணம், உப்புக்கருவாடு போன்றவற்றில் சினிமா குறித்தும் சினிமாவில் இருக்கும் அபத்தங்கள் குறித்தும் லேசான கிண்டல் பார்வையோடு கூடிய வசனங்கள் இருக்கும்.
உதாரணமாக ‘பயணம்’ படத்தில் விமானத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கும் பயணிகளோடு திரைப்படத்தில் நடிக்கும் ஆக்ஷன் ஹீரோவும் இருப்பார். அப்போது சக பயணி, ‘உங்க படத்தில் மட்டும் அத்தனை வில்லன்களை அடிக்கிறீர்கள்... நேரில் அடிக்க மாட்டீங்களா?’ எனக் கேட்க, ‘அதெல்லாம் டூப்’ என்கிறார். அந்தக் காட்சியில் திரையரங்கமே கைதட்டி ரசித்தது.
ராதாமோகனின் தனித்துவம் எப்போதும் சாமானிய மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி, அவர்களின் சுக துக்கங்களை, வாழ்வில் ஏற்படும் அற்புதத் தருணங்களை, கொண்டாட்டங்களை, எளிய மகிழ்ச்சியை பதிவு செய்பவைகளாக அவருடைய படங்கள் இருந்து வந்திருக்கின்றன. அந்த வகையில் `பிருந்தாவனம்’ அவரது அக்மார்க் ஃபீல் குட் திரைப்படம்.

‘பிருந்தாவனம்’ படத்தின் கதை மிக எளிதானது. ஊட்டியில் ஒரு சலூனில் முடிதிருத்தம் செய்பவராக அருள்நிதி இருக்கிறார். அவருக்கு காது கேட்காது, பேசவும் முடியாது. அவர் குடியிருக்கும் தெருவில் இருப்பவர்கள் அனைவரும் அவர்மீது அன்புடன் இருக்கிறார்கள். நடிகர் விவேக்கின் நகைச்சுவை மீது அலாதியான ஈடுபாடுகொண்டு அவர் நடித்த படங்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறார். விவேக்கின் ரசிகரான அருள்நிதிக்கு ஊட்டியில் ஒருநாள் விவேக்கை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அன்றுமுதல் விவேக் வாழ்க்கையில் இன்றியமையாத நபராக அருள்நிதி மாறுகிறார். தன் மீதும் தன் நகைச்சுவை மீதும் அளவற்ற பிரியம் வைத்திருக்கும் அருள்நிதியை வாழ்க்கையை நல்லபடியாக செட்டில் செய்ய விரும்புகிறார். அருள்நிதியின் இளம் பருவத்து தோழியான தான்யா அவரை காதலிப்பதாகச் சொல்கிறார். ஆனால், அருள்நிதியோ அதைப் பிடிவாதமாக ஏற்க மறுக்கிறார். விவேக் தான்யாவை ஏற்றுக்கொள்ள சொல்லி சிபாரிசு செய்தும் அதை புறக்கணிக்கிறார் அருள்நிதி. தான்யாவின் காதலை அவர் ஏன் ஏற்க மறுக்கிறார்? அதற்கான காரணங்களும், விவேக் இவ்விருவரையும் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகள்தான் மீதிப் படம். இந்தக் கதையை திறமையான முறையில் திரைக்கதையாக மாற்றி கொஞ்சம்கூட போரடிக்காமல் கொண்டுசெல்கிறார் ராதாமோகன்.

விவேக் நடிகர் விவேக்காகவே வருகிறார். நகைச்சுவை காட்சிகளிலும் சரி, எமோஷனல் காட்சிகளிலும் சரி... அருமையாக ஸ்கோர் செய்துள்ளார். ஊட்டியின் தெருக்களில் விவேக்கைத் தேடிவரும் செல்முருகனை அவர் பல பொய்கள் சொல்லி அலைய விடும்போது திரையரங்கே சிரிப்பலையில் அதிர்கிறது. வெகுநாள்களுக்குப் பிறகு விவேக்குக்கு நல்ல களம் அமைந்திருப்பதால் கிடைக்கும் பந்துகளிலெல்லாம் சிக்சர்களாக அடித்திருக்கிறார். இதில் அவர் படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளை அவரே கிண்டல் செய்திருக்கிறார். தெருவில் அவர் நடந்துபோகும் போதே ‘ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ போடுற’என்று ஒருவர் சொல்லிக்கொண்டே போவார். அதைப் பார்க்கும் விவேக் ‘ஓ... இந்த டயாலாக் எல்லாம் இன்னும் பேசுறாங்களா?’ என்று கவுன்ட்டர் கொடுத்துவிட்டு செல்வார். இன்னொருக் காட்சியில் விவேக் ‘ஒழுங்கா அவன் நடிப்ப மட்டும் பார்க்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு மரம் நடுறேன்னுச் சொல்லிட்டு ஊர் ஊராப் போனா என்னாகும்? அந்த கேப்புலதான் இவங்கெல்லாம் வந்தாங்க? யாரெல்லாம் சார்? அதான் இந்த மொட்ட ராஜேந்திரன், பரோட்டா சூரி’என்று தன்னைத் தானே பகடி செய்து கொள்ளும் காட்சிகள் அழகு.

படம் முழுக்கவே விவேக் கதாபாத்திரத்தை மையமாக கொண்டே செல்கிறது. இந்த மாதிரி கதையில் அருள்நிதி நடித்திருப்பது அவர் நடிப்பின்மீது கொண்ட அக்கறையைக் காட்டுகிறது. கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்துள்ளார். பன்ச் வசனங்கள், குத்துப்பாடல் போன்ற எந்த கமர்ஷியல் விஷயங்களும் இல்லாத, யதார்த்தமான இந்தக் கதையை தேர்வு செய்ததற்கு ஸ்பெஷல் பாராட்டை தெரிவிக்கலாம். நாயகி தான்யாவும் முதல் படம் என்றளவில் சிறப்பாக செய்திருக்கிறார். திடீரென பார்க்க முன்னாள் நடிகை நவ்யா நாயர் போலவே தெரிகிறார். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் பெரிய ரவுண்ட் கண்டிப்பாக வருவார். நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர் என்பது கூடுதல் தகவல். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பாடல்களை விட, பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார். ஊட்டியை மிக புதிதான கலர்ஃபுல் விஷுவல்களோடு மிக அழகாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேகானந்தன்.
வன்முறைகள், ரத்தம், பழிவாங்கல், செக்ஸ் என்றெல்லாம் காட்டும் படங்களுக்கு மத்தியில் யதார்த்தமான கதையை, அளவான கதாபாத்திரங்களை வைத்து இயல்பான நகைச்சுவையோடு, சுவை குன்றாமல் சொன்ன ராதாமோகன் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ‘பிருந்தாவனம்’ நிச்சயம் அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய நந்தவனம்.
- விஜய் மகேந்திரன்

கருத்துகள் இல்லை: