புதன், 24 மே, 2017

ஆப்கானிஸ்தான் ..பெண்களே நடத்தும் தொலைக்காட்சி!



பெண்ணுரிமைகள் மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளின் ஆப்கானிஸ்தானும் ஒன்று. கல்வி உரிமை, வேலை செய்ய உரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை, சுதந்திரமாக உடை உடுத்த உரிமை, மருத்துவ உதவி பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளே ஆப்கானிஸ்தான் பெண்களுக்குப் பல காலமாக மறுக்கப்பட்டு இருந்தன. 2001ஆம் ஆண்டுக்குப் பின் தலிபான் வீழ்ச்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சட்டத்தின் முன் சம உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கும் என்று வரையறை செய்தாலும், நடைமுறைகளில் மாற்றங்கள் சிறிதளவே நடைபெறுகின்றன.

இந்நிலையில் பெண்ணுரிமையினைப் பேணிக்காப்பதற்குத்தான் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைகிறோம் என்று சொல்லிய அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால், எவ்வித முன்னேற்றமும் பெண்களின் வாழ்வில் ஏற்படவில்லை. பொம்மை கர்சாய் அரசு, பெண்களுக்கு எதிரான ஏராளமான சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. உதாரணத்துக்குச் சட்டப்பிரிவு 132 புதிதாகச் சேர்க்கப்பட்டது. அச்சட்டமானது, பெண்ணை வெறும் பாலியல் நுகர்வு பொருளாக மட்டுமே சித்திரிக்கிறது. ஆணின் பாலியல் தேவையினை நிறைவேற்றுவது பெண்ணின் கடமை என்றும் கணவனின் அத்தேவைகளுக்குப் பெண்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்றும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வாசித்துக் காட்டாமலேயே, இச்சட்டத்தினை நிறைவேற்றினர்.

சிறப்புக் கட்டுரை: பெண்களே நடத்தும் தொலைக்காட்சி!நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகவோ, பெண்ணுரிமையினை ஆதரித்தோ, பாராளுமன்றத்தில் எந்தப் பெண் உறுப்பினரேனும் குரல்கொடுத்தால், அவர்கள் விவாகரத்து செய்யப்படுவார்கள் என்கிற மறைமுக மிரட்டல்களும் நடந்தன. இதுமட்டுமில்லாமல், பெண்களைக் கடத்துதல், பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் உள்நாட்டு வன்முறையிலிருந்து விடுதலைப்பெற ஆப்கான் பெண்கள் தீக்குளிக்கும் நிகழ்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

ஆப்கானில் குழந்தை திருமணம், கட்டாயத் திருமணம், கற்பழிப்பு மற்றும் பெண்கள் விற்பனைக் குற்றங்கள் வெளிப்படையாகவே நடக்கின்றன. மேலும், வீட்டு வன்முறையில் பெண்கள் அசாதாரணமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற வன்முறைகளிலிருந்து தப்பிக்க ஆப்கான் பெண்கள் விபரீத யுத்திகளைக் கையாளுவதாக வாஷிங்டன் செய்தி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. தீக்குளித்தால் வீட்டில் உள்ள ஆண்களிடமிருந்து ஒரு அனுதாபத்தைப் பெறலாம் என்றும், அதன்மூலம் அவர்களை வீட்டில் உள்ள ஆண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்க மாட்டார்கள் என்று எண்ணுவதாக அந்த ஆய்வு கூறியுள்ளது. மேலும் தீக்குளித்த பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது ,உண்மைகளை மாற்றிக் கூறுகின்றனர் அல்லது மாற்றிக் கூறும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
பெருகி வரும் இதுபோன்ற தீக்குளிப்பு நிகழ்வுகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபை வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கக் கூறியுள்ளது. இவற்றையெல்லாம் தாலிபான்கள் மட்டுமல்ல, அரசுப் பதவியிலுள்ளோரும் செய்கிறார்கள். புர்கா அணிந்த பெண்கள் அணியா பெண்கள் என்கிற பேதமின்றி, பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில், ஒவ்வொரு 28 நிமிடங்களுக்கும், ஒரு பெண் தன்னுடைய பிரசவத்தின்போது இறக்கிறாள். பெண்களுக்கான மருத்துவ வசதிகளும் மறுக்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்புக்குப் போராடியதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிற ‘மலாலாய் சோயா’ நடத்திவருகிற மருத்துவ மையத்தையும் பல்வேறு வழிகளில் மூடிவிட முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது அரசு.

இப்படிப்பட்டச் சூழலில் பெண்களுக்காகவே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆப்கானிஸ்தானில் தனது ஒளிபரப்பைத் தொடங்கி இருக்கிறது. ’சான்’(ZAN) டி.வி-யில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் தொகுத்து வழங்கியவர்கள் அனைவரும் பெண்களே. சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பிரசாரத்துக்குப் பின் இந்தத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கப்பட்டுள்ளது.
ஆப்கானியத் தொலைக்காட்சிகளில் பெண்கள் பலர் செய்தி வாசிக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தத் தொலைக்காட்சியுமே பெண்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்குவது இதுவே முதன்முறை. அன்றாட வன்முறைகளுக்கு மத்தியில் மாற்றமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தொலைக்காட்சியின் வரவு குறிப்பு உணர்த்துகிறது.
மிகக் குறைந்த முதலீட்டில், குறைந்தபட்சத் தொழில்நுட்ப வசதிகளோடு காபூலில் இயங்குகிறது ’சான்’தொலைக்காட்சி. விருந்தினர் சந்திப்புகள், விவாத நிகழ்ச்சிகளுடன் சுகாதாரம், மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இதில் காட்டப்படுகின்றன. சுமார் 50 பெண்கள் இதை நடத்துகிறார்கள். சில ஆண் தொழில்நுட்பவியலாளர்களும் பின்னணியில் பணிபுரிகிறார்கள். அதன் நோக்கம் தெளிவானது.

பெண்ணுரிமை குரலை அனைவரும் கேட்கும்படி செய்வதற்கும் அதன் மூலம் அவர்களும் சமூகத்தில் பணிபுரிய வழி செய்யவும் இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் சான் தொலைக்காட்சியைத் தொடங்கியிருப்பவர் ஓர் ஆண். அமித் ஷபர் ஊடக முதலாளி. காபூல் போன்ற பெருநகரங்களில் இருக்கும் பெருமளவிலான பெண்களை இந்தத் தொலைக்காட்சி ஈர்க்குமென அவர் நம்புகிறார்.
ஊடகத்தில் பெண் நலன்களுக்கான குரல்கள் போதுமான அளவு இல்லாதிருப்பதைப் போக்க அவர் முயல்கிறார். இதைப் பற்றி அவர் கூறும் போது, ‘பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்கள் செயற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே சிறந்த வழி’ என்கிறார்.
மேலும், ‘சில சமயங்களில் பெண்கள் தாமாகவே முன்வந்து செயல்படுவதன் மூலம் தங்கள் தகமைகளை நிரூபிப்பதற்கான சூழலை, வாய்ப்புகளை உருவாக்குவது மிக அவசியம். இதைச் செய்வது எளிதல்ல. இங்குப் பணிபுரியும் பெண்கள் சிலர் ஊடகத்துறையில் பணிபுரிவதற்குத் தடைகள் பலவற்றைக் கடக்க வேண்டி இருக்கிறது’ என்கிறார் இதன் நிறுவனர்.
இதைப் பற்றி அங்குப் பணிபுரியும் பெண் ஒருவர் கூறும்போது ‘ஊடகத்தில் பணிபுரியத் தொடங்கியதால் நான் பல பிரச்னைகளைச் சந்தித்தேன். பல அச்சுறுத்தல்கள் வந்தன. என் குடும்பத்தினரும், உறவினர்களும்கூடத் தொலைக்காட்சியில் பெண்கள் பணி செய்வது சரி இல்லை என்றே சொன்னார்கள். அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டுத்தான் என் பணிகளைச் செய்கிறேன்’ என்றார்.
இந்நிலையில் சான் தொலைக்காட்சி போன்ற புரட்சிகர முன்னெடுப்புகள் ஒருபுறமிருந்தாலும் ஆப்கானில் பெண் முன்னேற்றம் என்பது மெதுவாகவே நகர்கிறது. ஐ.நா-வின் உலகப் பெண் சமத்துவத்துக்கான பட்டியலில் மொத்தமிருக்கும் 187 நாடுகளில் 169ஆம் இடத்தில் இருக்கும் ஆப்கானில் தங்கள் உரிமைகளுக்காகக் கடக்க வேண்டிய தூரம் இன்னும் ஏராளம் பாக்கி இருக்கிறது.
- அன்னம் அரசு  minnambalam

கருத்துகள் இல்லை: