சனி, 1 ஏப்ரல், 2017

சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் கார்ட் வழங்கிய அதிமேதாவிகள்

சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி
எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஒவ்வொன்றிற்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு. மறுபக்கம் உச்சநீதிமன்றமோ அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் மத்திய அரசு கேட்பதாக இல்லை.
இந்நிலையில், வி.வி.ஐ.பிகளின் ஆதார் கார்டு விவரங்கள் வரிசையாக லீக்காகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகி வைரலானது. அதற்கு தோனி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஆதார் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தவர்களின் குரல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலும் வலுப் பெற்றுள்ளது.

அதன்பின் தொடர்ச்சியாக வி.ஐ.பி.களின் விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா. அவர் கடைசியாக குடியிருந்த தி. நகர் வீட்டு அட்ரஸுக்கு அவரின் இயற்பெயரான விஜயலட்சுமி ராமலு என்ற பெயருக்கே இந்த ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அப்பா பெயர், வீட்டு முகவரி என அத்தனையும் அப்படியே இருப்பதுதான் அதிகாரிகளின் பணியை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. 'விசாரித்துப் பார்க்காமல் எப்படி ஆதார் அட்டை வழங்க முடியும்?, யார் வேண்டுமானாலும் பொய்த்தகவல்களை அளித்து ஆதார் அட்டை வாங்கிவிடலாமா?’ போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு பதிலில்லை. சில மாதங்களுக்கு முன் அனுமாருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம்தான் 'ஆதார் அட்டை மூலமாக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை எளிதாக இணையம் வழி தெரிந்துகொள்ள முடியும். அதனால்தான் விவரங்கள் லீக் ஆகின்றன' என மத்திய தொழில்நுட்பத்துறை அதிகாரி அர்ச்சனா துரேஜா அறிவித்தார். அதற்குள் இப்படி.. vikatan

கருத்துகள் இல்லை: