ஞாயிறு, 26 மார்ச், 2017

அயோத்தி விவகாரம் - வெர்சையில்ஸ் ஒப்பந்தம் போலாகுமா?

என்னுடைய தோழி ஒருவர் நிறைய செய்தித்தாள்களை அள்ளி மேஜை மீது வைத்தார். எனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார். “நண்பா... நமது இஸ்லாமியர்கள் வெர்சையில்ஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஜெர்மானியர்கள் உணர்ந்ததைப்போல இப்போது உணர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

வெர்சையில்ஸ் ஒப்பந்தம்
நான் புரியாமல் குழம்பிப் போனேன். எனக்கு வெர்சையில்ஸ் ஒப்பந்தத்தை பற்றி ஞாபகமே இல்லை. முதல் உலகப்போரின் முடிவில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அவமானப்படுத்தும்விதமாக மட்டும் இந்த ஒப்பந்தம் ஜெர்மனியின் மீது திணிக்கப்படவில்லை, முதல் உலகப்போரை தூண்டியதற்காக குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து, இந்த ஒப்பந்தத்தில் ஒப்புதல் வாங்கப்பட்டது. போரில் ஜெர்மனி முறியடிக்கப்பட்டதால் அந்த ஒப்பந்தத்தை ஜெர்மனி ஒப்புக்கொண்டது.
ஆனால், எனக்கு புரியவில்லை. “என்னைச் சுற்றி எந்த ஒரு போரும் நடக்கவில்லையே... போர் இல்லாமல் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் இல்லையே” என்றேன்.
எனது சந்தேகத்தை தீர்க்கும்விதமாக எனது தோழி பதிலளித்தபோது, பாபர் மசூதி பிரச்னையில் தலைமை நீதிபதி கேகார் நடுவராக இருந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியதை சுட்டிக்காட்டினார். இப்பிரச்னையில் இரு வழக்காளிகள் இருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமியர்களும் மற்றவர் இந்துக்களும் ஆவர்.

ஆதித்யநாத் முக்கியத்துவம்
தொலைக்காட்சி விவாதங்களில் அனைவரும் கேகரின் முடிவை வரவேற்றனர். “இரு தரப்பினருக்கும் பதிலளித்து இந்த முடிவை எடுத்திருந்தாலும், சுப்பிரமணியன் சுவாமியின் அவசர விசாரணை மனுவை ஏற்றுதான் இந்த விசாரணையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என நான் கூறினேன். சுப்பிரமணியன் சுவாமி இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்புணர்ச்சியோடு பேசுவதையும் எழுதுவதையும் குறித்து நான் பேசியதை கண்டு என் தோழி புன்னகைத்தார். ஆனால், “ஏன் இஸ்லாமியர்கள் வெர்சையில்ஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஜெர்மானியர்கள் உணர்ந்தது போல் உணர வேண்டும்?” என நான் கேள்வியெழுப்பினேன். அதற்கு அவர், “இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. பா.ஜ.க., உ.பி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இது முன்னேற்றத்துக்கான வெற்றி என மக்கள் நினைத்து கொண்டிருக்கையில் ஆதித்யநாத்தை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கிறார்கள். அவருடைய முக்கியத்துவம் உனக்கு புரிகிறதல்லவா?” என்று பதிலளித்தார்.
இஸ்லாமியர்கள் கைவிடும் நிலை
ஆதித்யநாத் இதற்கு முன் நிறைய சர்ச்சைகளை கிளப்பியவர். ‘லவ்-ஜிஹாத்’, பசு மாட்டிறைச்சி மீது தடை விதிப்பது, இஸ்லாமியர்களின் அளவற்ற இனப்பெருக்கம் என பல சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு சொந்தக்காரர். அவரின் அரசியல் வாழ்க்கை முழுவதும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாகவே போராடியிருக்கிறார், பேசியிருக்கிறார். எனவே, இஸ்லாமியர்கள் தனது கோரிக்கைகளை கைவிடும் நிலை வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இஸ்லாமியர்கள் உத்தரப்பிரதேசத்தில் தோற்றுவிட்டார்கள். அதன் விளைவுகளை நம்மால் தெளிவாக காண முடிகிறது” என கூறினார். செய்திதாள்கள் எதையும் பார்க்காமலே உத்தரப்பிரதேசத்தில் நடப்பவற்றையும் எனக்கு கூறினார்,
ஊடகங்கள் முட்டாள்கள்
“ஓரிடத்தில் மசூதியில் பா.ஜ.க. கொடியேற்றப்படுகிறது, மற்றொரு இடத்தில் இஸ்லாமியர்களை கிராமத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும் என அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இறைச்சிக்கூடங்கள் சீல் வைக்கப்படுகின்றன. ஆன்டி-ரோமியோ படை உருவாக்கப்படுகிறது. இறைச்சிக் கடைகள் மூடப்படுகின்றன. கோழிக்கறி, மீன் விற்கும் கடைகள் தீயிட்டு எறிக்கப்படுகின்றன”.
“போதும்” என நான் கூறினேன்.
“வரலாறு முழுவதும் போர்களில் முறியடிக்கப்பட்டவர்கள் மீது அவமானகரமான விதிகள் ஒப்பந்தம் என்ற பெயரில் விதிக்கப்படும். நம்மைப்போல ஜனநாயக நாட்டில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாரபட்சமான கொள்கைகள் கொண்டு வரப்படுகின்றன” என என் தோழி கூறினார். என்னைக் குறித்து சற்றும் யோசிக்காமல் அவர் “உங்களை போன்ற ஊடகங்கள் முட்டாள்கள்” என்றார்.
விமர்சனம் செய்வீர்களா?
மேஜை மீது இருந்த செய்தித்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றின் தலைப்பு செய்திகளை அவர் படித்தார். எல்லாவற்றிலும் கோரக்நாத் கோயிலில் வேலைபார்க்கும் இஸ்லாமியர்கள் ஆதித்யநாத் மீது வைத்துள்ள நம்பிக்கை பற்றியே செய்திகள் இருந்தன. “இப்போது பதில் சொல், உங்கள் ஊடக உயர் அதிகாரிகளை குறித்து நீங்கள் வெளிப்படையாக விமர்சனம் செய்வீர்களா?” என வினவினார்.
நான் சற்று கூச்சத்துடன் திரும்பினேன். “ஏன் ஆதித்யநாத் முன்னேற்றம் குறித்தும், சமத்துவம் குறித்தும் பேசியதை ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன?” என கேள்வியெழுப்பினார். நான் அவர் முகத்தைக்கூட பார்க்கவில்லை.
புது வகையான அரசியல்
“இது ஒரு புது வகையான அரசியல். வெறுப்புணர்வும், பகையுணர்வும், வன்முறையும் தூண்டும்விதத்தில் பேசிவிட்டு பின் பதவிக்கு வந்தவுடன் குறைதீர்க்க வந்தவர்போல முன்னேற்றத்தை பற்றி பேசுவதும் அதை ஊடகங்கள் புகழ்வதும் வாடிக்கையாகி விட்டன” என்றார். ஆனால், “அவருக்கு வாய்ப்பளிப்பதை தவிர வேறு என்ன வழியிருக்கிறது?” என நான் கேள்வியெழுப்பினேன். “ஆமாம், முன்னேற்றத்துக்கான ஒரு புதிய பாதையை இந்தியா கண்டுபிடித்திருக்கிறது. வேற்றுமையுடனும் வெறுப்புணர்ச்சியுடனும் பேசுபவர்களுக்கு அதிகாரத்தில் வாய்ப்பு அளிப்பது” என அவர் கூறினார். நான் தலைகுனிந்தேன்.
“ஆதித்யநாத் செய்வது சரி, அசாதுதீன் ஒவாய்சி செய்வது தவறு. நல்ல நியாயம்” என்றார். மேஜையில் இருந்த செய்தித்தாள்களை நான் பார்த்தேன். அவற்றில் பல தலைப்பு செய்திகளை கண்டேன்.
“பாபர் மசூதி பிரச்னையில் நடுவராக செயல்படும் முடிவு இஸ்லாமியர்களுக்கு எந்த வகையிலும் நல்ல வாய்ப்பளிக்காத ஒரு தருணத்தில் வந்திருக்கிறது என்பதை இன்னும் நீ புரிந்துகொள்ளவில்லையா? இந்த வாய்ப்பை எப்படி இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள்?” என்று என் தோழி கேட்டார்.
அப்பொழுது என் தோழி எனக்கு விளக்கினார்,
“மத்தியிலும் உ.பி. மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது. உச்சநீதிமன்றத்தை அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்த இயலாது என இஸ்லாமியர்கள் நினைப்பார்கள். ஆனால், இந்த பாபர் மசூதி பிரச்னையில் இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுக்காவிடில் அவர்களுக்கு சரியான பாதுகாப்போ, உதவிகளோ அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது” என்றார். இவை இந்தியாவில் நடக்கின்றன அல்லவா?

நீதித்துறை மேல் நம்பிக்கை
2002இல் நடந்த குஜராத் கலவரங்களையும், 1984இல் டெல்லியில் நடந்த சீக்கிய படுகொலையையும் நான் நினைவுகூர்ந்தேன். அவருக்குப் பதிலளித்த நான், “இஸ்லாமியர்களுக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருக்கிறது என இஸ்லாமிய தலைவர்கள் அடிக்கடி கூறியிருக்கிறார்களே” என்றேன். வெறுப்புடன் தலையாட்டிய என் தோழி கூறியது, “எனக்கும் நீதித்துறை மேல் நம்பிக்கையுள்ளது. ஆனால், இஸ்லாமிய தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்றால் இந்துக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை எனவும் பிடிவாதம் காட்டுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தப்படுவார்கள். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமா? அது தோல்வியில் முடியலாமே” என்றார்.
“ஏன்?” என்றேன்.
பொது வாக்கெடுப்பாக
“2003-இல் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் பாபர் மசூதி இடம் மட்டுமின்றி மதுராவிலும், வாரணாசியிலும் இருக்கும் மசூதிகளின் இடத்தையும் இஸ்லாமியர்கள் ஒப்படைக்க வேண்டும் என இந்துக்கள் தரப்பில் கோரினர். எனவே அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த முறை மட்டும் எவ்விதம் வெற்றி பெறும்?” என்றார் என் தோழி. மேலும், “இந்த பேச்சுவார்த்தை 2019 மக்களவை தேர்தல்கள் வரை நீடிக்கும். பிறகு அந்தத் தேர்தலை அயோத்தி பிரச்னைக்கான ஒரு பொது வாக்கெடுப்பாக பா.ஜ.க. மாற்றும்” என்றார்.
விட்டுக்கொடுக்க வைப்பதற்கான திட்டம்
இப்போது வெர்சையில்ஸ் ஒப்பந்தத்துடன் என் தோழி உருவகப்படுத்தியது எனக்கு தெளிவாக புரிந்தது. “ஆக, தன்னுடைய முன்னோர்கள் கோயில்களை இடித்து மசூதிகளாக மாற்றினர் என்ற குற்ற உணர்வை விதைத்து, இஸ்லாமியர்களை வற்புறுத்தி அயோத்தி பிரச்னையில் விட்டுக்கொடுக்க வைப்பதற்கான திட்டம்தான் இது” என நான் கூறினேன். பெருமூச்சுடன் பதிலளித்த என் தோழி, “ஒருவழியாக என் நண்பன் இஸ்லாமியர்கள் ஏன் ஜெர்மானியர்கள் (வெர்சையில்ஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு) உணர்ந்ததை போல் உணர்வார்கள் என்பதை புரிந்து கொண்டான்” என்றார்.
நன்றி: Scroll.in
கட்டுரையாளர்: அஜாஸ் அஷ்ரப்
தமிழாக்கம்: விக்னேஷ் பாபு.  minnambalam

கருத்துகள் இல்லை: