சனி, 1 ஏப்ரல், 2017

கையில் வளர்ந்த காது : சீனாவில் மருத்துவ சாதனை!


மின்னம்பலம் : யாராலும் நம்பமுடியாத ஒரு அதிசயம் மருத்துவ உலகில் நடந்துள்ளது. சீனாவில் காதை கையில் வளர்த்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவில் சியான் நகரத்தைச் சேர்ந்த ஜி எனும் நபர், கடந்த 2015ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி தனது காதை இழந்ததுடன் கேட்கும் திறனையும் இழந்தார். எனவே, இவருக்கு கேட்கும் திறனை மீட்டுக்கொடுப்பதற்காக சியான் ஜியோடோங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணராக பணியாற்றும் குவோ சூசோங் என்பவர் வினோத சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். அதாவது, 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காதுபோல் வடிவமைத்து, அது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது. மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜி தனது கையில் காதை வளர்க்கத் தொடங்கினார். இந்நிலையில், காது வளர வளர உடம்போடு ஒட்டி உணர்ச்சிமிக்கதாக மாறிவந்தது என மருத்துவர் சூசோங் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது.


பின், நன்கு வளர்ந்த அந்தக் காதை அறுவை சிகிச்சைமூலம் அகற்றி அதை காது இருக்கும் இடத்தில் மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். ஏழு மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது ஜிக்கு நன்றாக காது கேட்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 45 வயதுக் கலைஞர் ஸ்டெலார்க், அவரது இடது கையில் செயற்கையாக மூன்றாவதாக ஒரு காது வளர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: