வெள்ளி, 31 மார்ச், 2017

யார் நமது எதிரிகள்? போராடும் இளைஞர்கள்..

thetimestamil.com : ஜல்லிக்கட்டு போராட்டம் அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம்,விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என மாணவர், இளைஞர்கள் பல்வேறு வகைகளில் தங்களது சமூக அக்கரைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முகநூல், வாட்சப் போன்ற நவீன ஊடக தொடர்பு சாதனங்களால் விரைவாக பகிரப்படுகிற கருத்துகள்,அரசியல் உணர்வுகளின் இணைப்பு சாதனமாக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அரசியல் உணர்வுகள் தீவிரம் பெறுகிறது.
இந்த சூழலில் நமது சமகால பிரச்சனைகளை எவ்வாறு புரிந்து கொள்வது?இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது என்ன?அரசு என்றால் என்ன?நாம் கோருகிற மாற்றம் என்ன?போன்ற அடிப்படை கேள்விகளுக்குள்ளாக நாம் சென்றாகவேண்டும்.
மேலும்,கடந்த அறுபதாண்டு கால ஆட்சி அதிகார முறையானது வெளிப்பார்வைக்கு மாபெரும் ஜனநயாக நாடாக காட்சியளிக்கிற காரண த்தாலும்,சினிமா,ஊடகம்,மாற்று சிந்தனை என அனைத்து தளங்களிலும் இந்த அதிகார முறை மீதான மயக்கங்கள் நீக்கமற கலந்துள்ள காரணத்தாலும் சமகால அரசியல் நிலைமைகளை புரிந்துகொள்வது மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

நம்மை ஆட்சி செய்கிறவர்கள் யார்?
நமது சமூகத்தை முதலாளிய ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிய அமைப்பின் பிரதிநிதித்துவ கட்சிகள் ஆட்சி செய்கின்றன.காங்கிரஸ்,பாஜக,திமுக,அதிமுக என எந்தக் கட்சிஆட்சிக்கு வந்தாலும்,அவர்களின் அடிப்படை செயல்பாடுகள் எவ்வகையில் மாறாது.அம்பானி,அதானிக்களுடனான உறவுகளும் மாறாது.இந்த அம்பானிக்கள் அதானிக்கள் போன்ற நாட்டின் 1 % முதலாளிகள்தான் மீதமுள்ள 99% மக்களின் வாழ்வையும் வளங்களையும் சூறையாடி வருகின்றனர்.
பாராளுமன்ற முறை,சட்டமன்றம்,தேர்தல் பங்கேற்பு போன்றவை முதலாளிய ஜனநாயகத்தின் நடைமுறை வடிவங்களாக உள்ளன.இந்த முதலாளிய ஜனநாயக அமைப்பானது உழைக்கும் வர்க்கத்திற்கான ஜனநாயகத்தைவழங்குவதில்லை.மாறாக 1 % முதலாளிகளின் ஜனநாயகமாக உள்ளது.இந்த ஜனநாயக அமைப்பானது தொழிலாளர்கள்,விவசாயிகள்,பழங்குடிகள்,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் சுதந்திரத்தை,அவர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதில்லை.மாறாக இந்த 1 % முதலாளிகளின் சுதந்திரத்தை,அவர்களின் நலன்களை உறுதிப்படுத்துகிறது.கல்வி கடன் பெற்ற மாணவனும்,விவசாயக் கடன் பெற்ற விவசாயியும் தூக்கில் தொங்க,மல்லையககள்,அதானிக்கள்,அம்பானிகள் பல லட்சம் கோடி கடன் பெற்று ஏப்பம் விட்டு உல்லாசமாக சுற்றித் திரிகிறார்கள்.இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் பாராளுமன்ற ஜனநாயகத்தில் 99% மக்களின் கோரிக்கைகள் என்றைக்குமே ஏற்கப்பட்டதில்லை.
இந்த 1 % முதலாளிகளே,அவர்களை பிரதிநிதிக் கட்சிகளே நம்ம பாராளுமன்ற ஜனநாயகம்,அரசியல் சாசனம் என்ற பெயரில் நம்ம ஏமாற்றி,சுரண்டி ஆட்சி செய்துவருகின்றனர்.
யாருக்கு எதிராக நாம் போராடுகிறோம்?
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபளிக்காத,பிரதிநிதித்துவம் செய்யாத பாராளுமன்ற நடைமுறையானது,ஜனநாயகத்தின் பெயரில் மக்களை சுரண்டவே வழி செய்துவருகிறது.இந்தியா விடுதலை பெற்ற 1947 முதல் தற்போது வரையிலான அறுபது ஆண்டு காலமாக இதுதான் எதார்த்த உண்மையாக உள்ளது.இந்த இடத்தில்,1990 களுக்கு பின்பாக இந்தியாவில் அதி வேகமாக நடைமுறைப் படுத்தப்படுகிறஉலகமயமாக்கம்,தாராளமயமக்கம்,நமது மண்ணையும்,உழைப்பையும் பன்னாட்டுநிறுவனங்களும் இந்திய ஏகபோக நிறுவனங்களும் வரைமுறையற்று சுரண்டுகிற போக்கு தீவிரம்பெறுகிறது.வேதாந்தா,கோக்,பெப்சி நிறுவனங்கள் இவ்வாறு கனிம வளங்களையும் நீர் வளத்தையும் சுரண்டின.உள்ளூர் முதலாளிகள் தாது மணலையும்,ஆற்று மணலையும்,கிரானைட்டையும் சுரண்டிக் கொழுத்தனர்.
மண்ணையும் மக்களையும் சுரண்டுகிற பெரு நிறுவனங்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு கையாளாக செயல்படுகிற அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் பெறுகிறது.
இந்தப் புள்ளியில் நமது நோக்கம் என்னவாக இருக்க முடியும்?நமது எதிரி யார்?நமது நண்பன் யார்?யாருக்கு எதிராக போராடினால் நமது அனைத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்?நமது தீர்வுதான் என்ன?உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தை எவ்வாறு பெறுவது என்ற கேள்வியை எழுப்புவோம் என்றால் அதற்கான பெரும்பான்மை பதில்கள்,முறையே
இந்த அரசு,அதன் அங்கங்கள் நல்லவை,ஆனால் அதன் நிர்வாகிகள்,அதிகாரிகள் சரியில்லை.
இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை,ஆனால் நல்ல கட்சித் தலைமை சரியில்லை.
இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை,ஆனால் உறுதியான தலைவர் இல்லை.
இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை,ஆனால் இந்த அமைப்பில் புரையோடியுள்ள ஊழலை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இந்த அரசியல் அமைப்பு முறை நல்லவை, நாம் அனைவரும் ஒன்றால் கேள்வி எழுப்பி அதன் குறைகளை சுட்டிக் காட்டிய படியே இருக்கவேண்டும்.
இந்த பதில்களில் உள்ள ஒரே ஒற்றுமையை என்னவென்றால் பெரும்பாண்மை மக்களுக்கு இந்த ஆளும் அமைப்பின் பிரதிநிதிகள் மீதே கடும் கோவம் உள்ளது தெளிவாகும்.
ஆனால், பிரச்சனை என்னவென்றால் நாம் எதிர்கொண்டு வருகிற சிக்கல் அனைத்திற்கும் இந்த அரசியல் அமைப்பு முறைதான் அடித்தளக் காரணமாக உள்ளது என காணத் தவறுகிறார்கள்.அல்லது இந்த உண்மையை வலிமையாக உறுதியாக எடுத்துச் செல்கிற வகையிலான சமூக ஜனநயாக சக்திகள் செயல்படவில்லை என்பதே உண்மை.
இந்த அறுபதாண்டு காலத்தில் தங்களது உரிமைகளுக்காக போராடுகிற விவசாயிகளும், தொழிலாளர்களும், மீனவர்களும், இளைஞர்களும் கடுமையான வகையில் அடக்கப்பட்டு வருகின்றனர். இதை நாம் பல உதாரனங்களின்வழி எடுத்துக் கூற முடியும். இந்த அறுபதாண்டு காலத்தில் பல வகையில் பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் நமது வளத்தை ஏப்பம் விட்டு வருகின்றன. இதையும் நாம் பல உதாரனங்களின்வழி எடுத்துக் கூற முடியும்.
ஆக, இந்த சுரண்டல் அனைத்திற்கும் இந்த அமைப்பே காபந்து சக்தியாக உள்ளது.இந்த அமைப்பின் பின்னால் தான் பெரும் முதலாளிகள் ஒளிந்துகொள்கின்றனர்.இவர்களின் நலன்களுக்கு இந்த அமைப்பு எடுக்கிற முடிவுகளையே போலீசும்,இதர அதன் அங்கங்களுக்கும்நடைமுறைப்படுத்துகிறது.இந்த ஆக,இந்த அமைப்பு முறை என்பது “சட்டப்பூர்வ” வடிவத்தில் அராஜகமாக நமது உரிமைகளை பறித்து நசுக்கி வருவது தெளிவாகும்.அதாவது அனைத்து மக்களின் மேலான வாழ்க்கைக்கான உரிமை எனும் ஜனநாயக கோரிக்கையை முதலாளித்துவ “சட்டப்பூர்வ” வழியில் போலீஸ்,நீதிமன்றத்தின் வழி நசுக்குகிறது.தேசத்தை சுரண்டுவோர்கள் தேச பக்தர்கள் என்கிறது.தேச வளத்தை காக்கப் போராடுவோர்கள் அரசுக்கு எதிரான தேசத் துரோகி எனவும் சித்தரிக்க முயல்கிறது.சட்ட விரோத சக்திகள் என்கிறது.
அப்படிப் பார்த்தோமென்றால் இந்த அரசுதான் மக்கள் கண்ணோட்டத்தின்படி சட்ட விரோதாமனது.சட்டமும் அரசியல் சாசனமும் மக்கள் நலனுக்காக இயங்காது போது,இந்த அரசியல் அமைப்பு சட்டவிரோதமானது.இந்த அமைப்பை தாங்கி பிடிக்கிற அதன் கைக்கூலிகள் சட்ட விரோதமானவர்கள்.
அனைத்து குடிமகன்களையும் ஆதார் வழி கண்காணிக்கிற அரசுசட்டவிரோதமானது.மக்கள் நலனுக்காக செயல்படுகிற புரட்சிகர சக்திகளை கண்காணிக்கிற போலீஸ்,உளவுத் துறை அமைப்பு சட்டவிரோதமானது.இந்த அமைப்பின் தாங்கு தூண்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கு எதிராக இயக்குகிற சட்டபூர்வ வடிவிலான சர்வாதிகார சக்திகளாகும்.
நமது பிரச்சனைகளுக்கான தீர்வுதான் என்ன?
ஆக,நமது பிரச்சனைக்கான தற்போதைய தீர்வு என்பது பெரும்மான்மையான உழைக்கும் மக்கள் பங்கேற்கிற,உழைக்கு மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம்செய்கிற மக்கள் ஜனநாயக குடியரசு என்றாகத் தான் இருக்க முடியும்.இந்த சுரண்டல் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிற்கு மாற்றாக மக்கள் ஜனநாயக அமைப்பு நடைமுறைக்கு வரவேண்டும்.
அம்பானிக்களின்,அதானிக்களின்,பெரும் பணக்கார விவசாயிகளின் சொத்தை பறிமுதல் செய்யப்படவேண்டும்.மக்களின் வரிப்பணம் முறையாக மக்களுக்கே பகிர்ந்து வழங்கப்பட வேண்டும்,நிரந்தர ராணுவம்,போலீஸ் கலைக்கப்பட்டு மக்கள் குழு அமைக்கப்படும்.கல்வியும்,மருத்துவமும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த பாராளுமன்ற அரசியல் சாசன வடிவங்களின் வழி முதலாளித்துவ சக்திகளின் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி அதிகாரத்தை ஒழித்து, தகர்த்தால்தால் இந்த மாற்றங்கள் சாத்தியமாகும். ஏனெனில் இந்த அரசியல் அமைப்பு முறையானது,பெரும் முதலாளிகளின், செல்வந்தர்களின் சொத்தை பாதுகாக்கிற காவலனாக உள்ளது. காவலேனே இவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய இயலாது அல்லவா? எனவே பெரும்பாண்மை மக்களுக்கான ஜனநாயகத்தை உறுதிப் படுத்துகிற மக்கள் ஜனநாயக ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.
இந்த பாராளுமன்ற, சட்டமன்ற வடிவங்கள் பன்றிகளின் தொழுவைக் கூடமாக திகழ்கிற காரணத்தால், அந்த அமைப்பை தகர்த்து மக்கள் பிரதிநிதிகளை அமர்த்தப்பட வேண்டும்.இந்த பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானால் மக்களால் திருப்பி அழைக்கப்படுவார்கள்.
யார் நமது எதிரிகள்?
நமது உழைப்பையும்,வளங்களையும் கொள்ளையடிக்கிற,99 % மக்களை அடக்கி ஒடுக்கி சட்டத்தின் வழி ஆட்சி செய்கிற இந்த 1% முதலாளிகளும்,பணக்கார விவசாயிகளும், இவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளும்,இவர்கள் ஒன்றாக கூட்டு சேர்ந்து இயங்கிற இந்த அரச அமைப்பும் நமது எதிரிகள்.
உழைக்கும் மக்களின் மக்கள் ஜனநாயக குடியரசுக்கு எதிராகவும்,இந்த 1% முதலாளித்துவ ஜனநாயக அமைப்போடு சமரசம் செய்து கொள்கிறவர்கள் அனைவரும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள்.ஆளும் அரசின் கொள்கையை மயில் இறகால் வறுடுவது போல விமர்சிப்பவர்கள்,உழைக்கும் மக்கள் புரட்சிக்கு விரோத சக்திகளாக இருப்பார்கள்.இவர்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை விமர்சித்து,அதன்வழி சட்டமன்ற பதிவிக்கோ,பாராளுமன்ற பதவிக்கு வரத் துடிக்கிற பதவி வெறி மோகர்கள்.மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தருவதாக நாடகமாடுகிற இந்த முதலாளித்துவ ஜனநாயக சக்திகள் பதவி வெறி,சுய அடையாள வெறி பிடித்த மக்கள் நல விரோதிகள்.நீடித்த நலன்களுக்கு மாற்றாக,இந்த அமைப்பில் சிறு சமரசம் செய்து கொண்டு,அரசின் சுரண்டலுக்கு வால் பிடிக்கிற அயோக்கியர்கள்.இவர்களே தற்போது தேர்தல் அரசியல் தீர்வு ,நீதிமன்ற தீர்வு, ஹைஜாக் அடையாள போராட்ட அரசியல்,மீடியா அரசியல் மூலமாக “கொச்சை மாற்று அரசியல்” பேசி வருகின்றனர். இவர்களின் பின்னேதான் நமது பெரும்பாலான இளைஞர்கள் உண்மை அறியாமல் அதிகமாக பின்தொடர்கிறார்கள்.
சுற்றுச்சூழல் குழுக்கள், விவசாய சங்கங்கள், தொழில்சங்கள், மீனவர் சங்கங்கள் என அனைத்து துறைகளிலும் இந்த பிற்போக்குவாதிகள், அரசின் வாளாக செயல்பட்டு மக்களை குழப்புகின்றனர். ஊடகத்திலும் இவர்களே ஆதிக்கம் செய்கின்றனர். நமது இளைஞர்கள் இவர்களிடம் மாற்று அரசியல் குறித்து கேள்வி கேட்டாலோ. அரசியல் சாசனம் குறித்த புரிதலை விலக்க கோரினாலோ திரு திருவென்று முழிப்பார்கள், குழப்புவார்கள். இவர்கள் பிற்போக்கு சக்திகள்.
என்ன செய்ய வேண்டும்?
உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடுகிற, அவர்களின் அரசியல் அதிகாரத்திற்காக போராடுகிற புரட்சிகர அரசியலை தேர்ந்துகொண்ட புரட்சிர அரசியல் இயக்கங்கள் கட்சிகளின் பக்கம் இளைஞர்கள் மாணவர்கள் அணி திரளவேண்டும்.
ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டுதலின்தான் அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராகவும்
உழைக்கும் வர்க்க நலனுக்காகவும் சமூக விடுதலைக்காகவும் இறுதிவரை உறுதியாக இலட்சியத்திற்காக போராட முடியும்.
முதலாளித்துவ வடிவத்தில் மாற்றில்லை, அதைக் கவிழ்தால்தான் முழு ஜனநாயகத்தை அனைத்து மக்களுக்கும் வழங்க முடியும் என்ற அரசியல் தெளிவு பெற வேண்டும்.  வரலாற்றில் நமக்கு வழக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளை நாம் இவ்வாறு மாற்றிக் கட்டமைக்க வேண்டும்.
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: