சனி, 7 ஜனவரி, 2017

அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி- திடீர் திருப்பம்! உபியில் காங்கிரசும் .... சாமஜவாதியும் ... நம்ம வாயால ஏன் சொல்லணும்? விதி வலியது!


சமாஜ்வாதி கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் மோதலில் அகிலேஷ் யாதவ் கைதான் ஓங்கியிருக்கிறது. தந்தை முலாயம் பிரிவால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு கட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அகிலேஷ் யாதவ்.
உத்திரபிரதேச முஸ்லீம் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற முலாயம் தனித்து நின்றால் தனக்கு முஸ்லீம் வாக்குகள் கிடைக்காமல் போகும் எனக் கருதும் அகிலேஷ் யாதவ் அந்த இழப்பை சமன் படுத்தும் விதமாக, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க நினைக்கிறார். காங்கிரஸும் சமாஜ்வாதியும் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், உத்திர பிரதேசத்தின் 403 சீட்களில், 300 -க்கும் மேற்பட்ட சீட்களை அக்கூட்டணி பெறும் என்பதுதான் இக்கூட்டணிக்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. கட்சிக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு முன்னால் காங்கிரஸ் கூட்டணியை முலாயம் விரும்பவில்லை.காங்கிரஸ் கட்சியுடன் எந்த விதமான தொடர்பும் சமாஜ்வாதி கட்சிக்கு இருக்கக் கூடாது என அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இப்போது கட்சி பிளவு பட்டு முலாயம், அகிலேஷ் என பிரிந்து விட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பதற்கு முன்னர் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தயாராகவே இருந்தது. காங்கிரஸின் உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளர் ஷீலா தீக்‌ஷித், “ தேர்தலில் இருந்து விலகி அகிலேஷிற்கு ஆதரவளிக்க தயார்” என பொதுவெளியில் தெரிவித்ததன் வழியே, இக்கூட்டணி இப்போது உறுதியாகி இருக்கிறது.
அடுத்த வாரம் அகிலேஷ் யாதவ் தில்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்தித்து, இதை உறுதி செய்யவிருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.ஐந்து மாநில தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிறகு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷக்திசின்ஹ கோஹில், “பாசிச படைகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க, சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார். ஷீலா தீக்‌ஷித், “சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது நடந்தால், உத்திர பிரதேசத்திற்கு இளம் முதலமைச்சர் ஒருவர் கிடைப்பதை நிச்சயமாக பார்க்க விரும்புவேன். காங்கிரஸும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்தால், அதற்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்” என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆஸாத், வரவிருக்கின்ற தேர்தல்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: