வியாழன், 5 ஜனவரி, 2017

சசிகலாவுக்கு 20 கேள்விகள்! எம்ஜியார் நாளை நமதே என்று கூறியது உங்களுக்காகத்தானா?

பொதுச்செயலாளர் பேச்சு...சசிகலா முதன்முறையாக மைக் முன்பு வந்து நின்றிருக்கிறார். அவருடைய `அக்கா’வைப் போலவே எழுதிவைத்த உரையை ஏற்ற இறக்கத்தோடு முழங்கியிருக்கிறார். நவரசங்களும் கொட்டிய அவருடைய பேச்சு சொல்வது என்ன? 
அந்தப் பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள். அதில் எழும் கேள்விகள் என்னென்ன?
‘‘என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும், என் அன்பு சகோதர, சகோதரிகளே!’’ என உரையைத் தொடங்கினார். ‘உயிரில் சுமந்த’ ஜெயலலிதாவின் உடல்நிலை தொடங்கி, உயிர் போகும் வரையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை மறைத்தது ஏன்?‘என்னை பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்வு செய்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ எனச் சொன்னார். உங்களைத் ‘தேர்வு’ செய்யவில்லை. ‘நியமனம்’தான் செய்திருக்கிறார்கள்.  இது உங்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

‘‘ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஆனால், இன்று, மேடைக்கு வந்து பேசுகிற சூழல் உருவாகி இருக்கிறது’’ என்கிறார். ‘அரசியலில் ஈடுபடும் எண்ணமோ பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசையோ எனக்குத் துளியும் கிடையாது’ என 2012 மார்ச் 28-ம் தேதி நீங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களுக்குத் தெரியாமல் வெளியானதா?

;‘‘நன்கு உடல் நலம் தேறிவந்த நம் அம்மா... அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வருகிற அளவுக்கு உடல் நிலையில் முன்னேற்றம்...’’ என்றெல்லாம் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்வதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?

‘‘75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் போராட்டங்களின் ஒரு படத்தைக்கூட ஏன் வெளியிடவில்லை?‘

‘நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை’’ என்கிறவர், அவர் இறந்த 26-வது நாளிலேயே இயக்கம்தான் வாழ்க்கை என வந்தது ஏன்?

;‘‘சில நாட்களில் அம்மாவை பூரண நலம் பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்துக்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்’’ எனச் சொல்கிறார். அந்த நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்?

‘அழைத்து வந்துவிடுவோம்’ என்பதற்குப் பதிலாக ‘அழைத்து வந்துவிடுவேன்’ என ஜெயலலிதாவைப் போலவே ‘நான்’ என்கிற மனோபாவம் வெளிப்பட்டது ஏன்?
‘‘10 கோடி தமிழ் மக்களின் பாசத் தாயை இறைவன் பறித்துக்கொண்டான்’’ எனச் சொல்கிறார். இந்த மக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சந்தேகம்தான் இருக்கிறது. அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

. ‘‘33 வருடங்களாக அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களைக் கரைத்துவிட்டேன்’’ என்கிறீர்கள். அது சங்கடமான வாழ்க்கையா? அப்படி வாழ்க்கையை கரைத்துவிட்டதற்கு காரணம் என்ன?`

`அக்கா, கோட்டைக்குக் கிளம்பிட்டீங்களா? மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?’’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்’’ என சொல்லியிருக்கிறீர்கள். ‘அக்காவின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறேன்’ எனச் சொல்லும் நீங்கள், கோட்டைக்குப் போக ஆசைப்பட்டது ஏன்?

‘‘அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது’’ எனச் சொல்கிறார் சசிகலா. ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனபோது இந்தக் கண்மணிகள் உயிர் தியாகம் செய்தார்களே... அந்தக் கண்மணிகளிடம் இருந்து அம்மாவை மறைத்தது ஏன்?

‘‘எத்தனையோ போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள் என எவ்வளவோ வந்தபோதிலும், அதில் எல்லாம் அம்மா வென்று வருவார்; நான் உறுதுணையாக இருப்பேன்’’ என்கிறீர்கள். இந்தச் சோதனைகள் எல்லாம் யாரால் வந்தன? 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைத் தள்ளியது யார்? உங்கள் குடும்பத்தினருக்கு அதில் பங்கு இல்லையா? அனைவரும் சேர்ந்துதானே நீதிமன்றப் படியேறினீர்கள். இதைத்தான் போராட்டம், நெருக்கடி எனச் சொல்கிறீர்களா?

‘‘அம்மாவின் அரசியல் பிரவேசம், பெண் இனத்துக்கே வழிகாட்டுதலையும், நம்பிக்கையையும் கொடுத்தது. இன்றும் அம்மாவுக்குப் பிறகு ஒரு பெண்ணாக, நான் பொதுச்செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன்’’ எனச் சொல்வது ஜெயலலிதாவைப் போலவே உங்களுக்கும் அரசியல் பாரம்பர்யம் உள்ளது என்று சொல்ல வருகிறீர்களா?

‘‘தந்தை பெரியாரின் தன்மானம், பேரறிஞர் அண்ணாவின் இனமானம், புரட்சித் தலைவரின் பொன்மனம்’’ என்றெல்லாம் எதுகை மோனை நடையில் பேசுகிறீர்கள். தலைமைச்செயலகத்துக்குள் சோதனை போட்டபோதும் துணை ராணுவப் படை வந்தபோதும் ‘தன்மானம்’ எங்கே போனது? ‘இனமானம்’ எங்கே இடறியது?

16. ‘‘அம்மா, நமக்குக் கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம்’’ எனச் சொல்கிறார். உதய், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி.எஸ்.டி. என ஜெயலலிதா எதிர்த்தத் திட்டங்களை எல்லாம் ஏன் இப்போது ஆதரிக்கிறீர்கள்? அந்தப் பாதத் தடங்களில் பயணிக்காமல் மத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசுவது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்தானே? இதுதான் அவர் காட்டிய பாதையா? அதில்தான் உங்கள் பயணமா?

17. ‘‘அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, இவர்கள்தான் அ.தி.மு.க-வின் அடையாளங்கள். இவர்களைத் தவிர, வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி’’ எனச் சொல்கிறீர்கள். பிறகு எப்படி உங்கள் படத்தை மட்டும் பெரிதாகப் போட்டு ஃபிளெக்ஸும் பேனர்களும் முளைக்கின்றன?

18.
 ‘‘நம் அம்மா காட்டிய வழியில் இருந்து இம்மிகூட விலகாமல் இந்த இயக்கத்தைக் கொண்டு செலுத்துவோம்’’ என்கிறார். பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏற்றினாலே ஜெயலலிதாவிடம் இருந்து கண்டன அறிக்கை வரும். ஆனால், ‘செல்லாக்காசு’ அறிவிப்புக்குப் பிறகு மக்கள் வீதியில் நிறுத்தப்பட்டபோதும் ஒரு அறிக்கைகூட வரவில்லையே... இதுதான் இம்மியளவா?

19.
 ‘‘தமிழக மக்களால் ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றிமணி அளவுக்கும் குறை வராது பாதுகாப்போம்’’ என முழங்குகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு, அதன்பிறகு பல்டி அடித்ததை ஜெயலலிதா இருந்திருந்தால் சும்மா விட்டிருப்பாரா? ஆனால், குன்றிமணி அளவுகூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?

20.
 ‘‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால், நாளை நமதே’’ என்று பாடினீர்கள். நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் சொன்னது உங்களுக்காகத்தானா?

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி  விகடன்

கருத்துகள் இல்லை: