சனி, 11 ஜூன், 2016

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

thetimestamil.com :வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது:
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக மதனிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், தங்களுக்கு மருத்துவப்படிப்பில் இடமும் வழங்கப்படவில்லை; தாங்கள் கொடுத்த பணமும் இதுவரை திருப்பித் தரப்படவில்லை என்றும் கூறி சுமார் 50 பேர் சென்னை மாநகரக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் தங்கள் குழுமத்துக்கும், மதனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரது செயல்களுக்கு தங்கள் குழுமம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. ஏனெனில், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவுக்கு மதன் எல்லாமுமாக இருந்திருக்கிறார். அவரது பெயரில் திரைப்பட நிறுவனம் தொடங்கி கோடிக்கணக்கில் முதலீடு செய்து திரைப்படங்களை தயாரித்தும், வினியோகித்தும் உள்ளார். பச்சமுத்துவுடனான உறவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் மதன் என்பவர் முகவரி இல்லாத மிக மிகச் சாதாரண மனிதர் தான். இப்படிப்பட்ட சாதாரண மனிதரை நம்பி எவரும் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்துவிட மாட்டார்கள்.
அதுமட்டுமின்றி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்காக மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களின் பணத்தை திருப்பித் தர வலியுறுத்தி பச்சமுத்துவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையிடமும் பச்சமுத்து, மதன் ஆகிய இருவரின் பெயரிலும் தான் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மேலாக, தலைமறைவான மதன் எழுதி வைத்துள்ள கடிதத்தில்,‘‘மருத்துவப் பட்டப்படிப்பு, மேற்படிப்பு ஆகியவற்றுக்கு நுழைவுத்தேர்வு உண்டு என்றாலும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 102 இடங்கள் நிரம்பிவிட்டன. இதற்குக் காரணம் எனது உழைப்பு. நான் அனுப்பிய பட்டியலிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இடமளிக்க வேண்டும். அவர்களிடம் வாங்கிய பணம் முழுமையாக உங்களிடம் (பச்சமுத்து) கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் மதனுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானதாகும்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பும் பொறுப்பு மதனுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா மருத்துவ இடங்களும் மதன் மூலமே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதற்காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் குறிப்பிட்ட தொகை மதனுக்கு தரகுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களை பிடித்து தருவதற்காக பல மாநிலங்களில் முகவர்களை மதன் நியமித்திருக்கிறார். மதனுக்கு உள்ள இத்தொடர்பு மூலம் தான் பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பச்சமுத்து தொடங்கிய இந்திய ஜனநாயக கட்சி போட்டியிட முடிந்தது. இதை பல்வேறு ஊடக நேர்காணல்களில் பச்சமுத்துவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை பணம் வாங்கிக் கொண்டு சேர்க்கும் முகவராக மதன் செயல்பட்டார் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் பச்சமுத்து மற்றும் மதன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக தமது மூலம் தான் மாணவர் சேர்க்கை நடந்ததாகவும், 8 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை பச்சமுத்துவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தமது கடிதத்தில் மதன் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மருத்துவப் படிப்பு இடங்களை பணத்திற்கு விற்பனை செய்திருப்பது உறுதியாகிறது. இந்தச் செயல் இந்திய மருத்துவக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிரானது ஆகும். இத்தகைய முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அத்துடன், மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் குறித்து இந்திய மருத்துவக் குழு(MCI) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ராமதாஸின் அறிக்கைக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவராக பாரிவேந்தர் பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறுபல கல்லூரிகளிலும் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்ட மதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும் மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள யாரையாவது எதிரியாக சித்தரித்து, அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது மருத்துவர் ராமதாசின் அன்றாட வாடிக்கை.
தமிழ்நாடு முழுவதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் – பார்க்கவகுலத்தைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். அவர்களிடத்தில் விரோதத்தை வளர்த்து அமைதியை கெடுக்க பார்க்கிறார் ராமதாஸ். சமூக நீதிக்காக போராடுகிறேன் என கூறும் ராமதாஸ், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான என்னை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்..
வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்தோடு தவறான அறிக்கைகளை விடுவது வழக்கை திசை திருப்பும் முயற்சியல்லவா
மத்தியிலும், மாநிலத்திலும் கிடைத்த அரசு பதவிகளை பயன்படுத்திக்கொண்டு, கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வெளிநாட்டில் முதலீடு செய்து இருப்பது யார் என்பதை பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விளக்கவேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ் , இன்று பலஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும் – பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா.. ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்ட மருத்துவர் ராமதாஸ், 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் துவங்கி படிப்படியாக முன்னேறி உலக தரம் வாய்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னை பார்த்து குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.
மருத்துவர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற வகையில் பெற்றுக்கொண்டு, அந்த 5 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாதா..
அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியை விசாரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நிராகரித்துவிட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி இரண்டு மருத்துவக்கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது ஊர் அறிந்த உண்மை அல்லவா..
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா..
தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா.. அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில் என் மீது நஞ்சை கக்குவது நியாயமா..
எதிரியின் மீது குற்றம்சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும்போது, மற்ற மூன்று விரல்களும் தன் மார்பை நோக்கித் திரும்புவதை அவர் உணரவேண்டும். யாரோ சில வழிப்போக்கர்கள் பாடும் வஞ்சக பாட்டிற்கு பின்பாட்டு பாட வேண்டாம் என மருத்துவர் ராமதாசைக் கேட்டுக்கொள்கின்றேன்.
நீங்கள் நியாயவானா எனக் கேள்விக் கேட்ட பச்சமுத்துவுக்கு பாமக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி இப்படி ‘பதிலடி’ தருகிறார்:
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் படிப்புக்கு வேந்தர் மூவீஸ் அதிபர் மதன் மூலம் மாணவர்களை சேர்ப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்தும், எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து ரூ.20,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து வைத்திருப்பது குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலளிப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து, மருத்துவர் அய்யா எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காமல் அய்யா அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துள்ளார்.
அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக யாரையாவது எதிரியாக சித்தரித்து அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது மருத்துவர் அய்யா அவர்களின் நோக்கம் என்று பச்சமுத்து கூறியிருப்பதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. கொளுத்தும் வெயில் குறையும் நேரத்தில் நடந்து செல்பவர்களின் நிழல், அவர்களின் உண்மையான உயரத்தைவிட அதிகமாக இருக்கும். அதேபோல், வெயில் நேரத்தில் தனது நிழலைப் பார்த்துவிட்டு தாம் ஏதோ வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவரை மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்ப்பதாக பச்சமுத்து உளறியிருக்கிறார். பச்சமுத்துவிடம் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. அவரை எதிர்த்து அய்யா அவர்கள் அரசியல் செய்வதாகக் கூறுவது மனநிலை பிறழ்வுக்கு முந்தைய நிலை கற்பனை தானே தவிர வேறொன்றுமல்ல. அதேபோல், அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் பச்சமுத்து செய்த மோசடிகள் பற்றியது தானே தவிர பச்சமுத்து என்ற தனி மனிதர் குறித்தவையல்ல.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 102 மாணவர்கள் பச்சமுத்துவின் பினாமியான மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவ்வாறு ஏமாந்த மாணவர்கள் சமூக நீதிக் காவலரான மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பணத்தை இழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அய்யா அவர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்தார். அப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்துவுக்கு இப்போது ரூ.20,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்தது எப்படி? என்று வினா எழுப்பினார். அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மருத்துவர் அய்யா அவர்களின் வினா மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா. தம் மீது எந்த தவறும் இல்லை என்பதில் பச்சமுத்து உறுதியாக இருந்தால் தன் நிலை குறித்து விளக்கம் அளித்திருக்கலாம் அல்லது இது குறித்த விசாரணையை சந்திக்க தயார் என்று அறிவித்திருக்கலாம்.
ஆனால், தம் மீதான குற்றச்சாற்றுகளுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு வன்னிய சமுதாயத்தையும், பார்க்கவகுல சமுதாயத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறார். மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பியது வன்னியர் பிரச்சினையும் அல்ல… பார்க்கவகுல சமுதாயத்தினர் பிரச்சினையும் அல்ல. மோசடி மன்னர்களை நம்பி மருத்துவப்படிப்புக்கு பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களின் பிரச்சினை. மருத்துவப் படிப்புக்கு பணத்தை வாங்கி மோசடி செய்தது குறித்து பச்சமுத்து விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்பதால் எவரும் பொங்கி எழுந்துவிட மாட்டார்கள். மாறாக பாரி மன்னனின் வழி வந்த அம்மக்கள் உண்மைக்காக போராடுபவர்களுக்கு துணை தான் நிற்பார்கள். வன்னியர்களும், பார்க்கவகுல மக்களும் சகோதரர்களாகத் தான் பழகி வருகின்றனர்… இனியும் அவர்கள் அப்படித் தான் பழகுவார்கள். அதுகுறித்த கவலை பச்சமுத்துவுக்கு தேவையில்லை. ‘‘சமூக நீதிக்காக போராடுவதாகக் கூறும் ராமதாஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒருசமுதாயத்தின் தலைவரான என்னை தனிபட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்?’’ என்றும் பச்சமுத்து வினா எழுப்பியிருக்கிறார். சமூக நீதி என்றால் என்ன? என்பதற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பச்சமுத்து விளக்கம் கேட்டுக் கற்றுக் கொள்வது நல்லது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பச்சமுத்து போன்றவர்களின் மோசடிக்கு துணை நிற்பது சமூக நீதியல்ல. இத்தகைய மோசடிகளை எதிர்ப்பது தான் சமூக நீதியாகும்.
மருத்துவர் அய்யா அவர்களின் சொத்து மதிப்பு குறித்தும், வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்தும் பச்சமுத்து மனம் போன போக்கில் உளறியிருக்கிறார். அவை இரண்டுமே திறந்த புத்தகங்கள். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. அதை தனிநபர்கள் எவரும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. பச்சமுத்து விரும்பினால் அவரை எனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று மருத்துவர் அய்யா அவர்களின் சொத்து விவரங்களையும், வன்னியர் கல்வி அறக்கட்டளை விவரங்களையும் காட்டத் தயாராக உள்ளேன் என்பதை அய்யா அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக பேராசிரியர் குழுவைக் கொண்டு விசாரணை நடத்தினாலும் அதற்கு ஒத்துழைக்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அது குறித்த எந்த விசாரணைக்கு வேண்டுமானாலும் அய்யா அவர்கள் தயார். அதேபோல், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்ந்த சர்ச்சைகள் குறித்து விசாரணையை எதிர்கொள்வதற்கு பச்சமுத்து தயாரா?
மது போதையில் தள்ளாடும் ஒருவன் தனது தாயையும், மனைவியையும் பார்த்து எப்படி அவதூறாக வசைபாடுவானோ, அதேபோல் மதிப்பிற்குரிய பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும் மருத்துவர் அய்யா அவர்கள் குறித்தும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்தும் உண்மை கலப்படமற்ற புகார்களைக் கூறி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். கடந்த காலங்களில் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவர் அய்யாவின் கால்களில் மட்டுமின்றி, அவரது இல்ல பணியாளர்கள் கால்களிலும் விழுந்து வணங்கியும் தமது விதிமீறல்களுக்கு துணை நிற்கவில்லை என்பதாலும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் அம்பலப்படுத்திவிட்ட கோபத்திலும் தான் பச்சமுத்து இப்படி அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலிருக்கிறது. இதை மருத்துவர் அய்யா அவர்கள் மன்னித்தாலும் என்னைப் போன்றவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. மருத்துவர் அய்யா மீதும், அன்புமணி இராமதாஸ் மீதும் கூறிய அவதூறு புகார்களுக்காக பச்சமுத்து மீது பா.ம.க. தொண்டர்கள் அவதூறு வழக்குகளை தொடுப்பர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் எந்தத் தரப்பினர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்துவதும் மருத்துவர் அய்யா அவர்களின் வழக்கம். அதனால் அவர் சமூகப் போராளியாக மக்களால் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையில் தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புக்கு பணம் கட்டி ஏமாந்த மாணவர்களுக்காக குரல் கொடுத்தார். இப்போதும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் பணம் கொடுத்து ஏமாந்தது உண்மை தான் என்பதை தமது அறிக்கையில் பச்சமுத்து ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு மதன் தலைமறைவாகிவிட்டார் என்பது தான் பச்சமுத்து அவரது அறிக்கையின் முதல் பத்தியில் சொல்ல வரும் விஷயம் ஆகும். பச்சமுத்துவின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் அவர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளித்தாக வேண்டும்.
  1. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மதன் ஏமாற்றி விட்டார் என்றால் அவ்வாறு செய்வதற்காக அனுமதியை அவருக்கு தந்தது யார்? அதை பச்சமுத்து ஏன் தடுக்கவில்லை.
  2. மருத்துவப்படிப்புக்கு மதன் பணம் வசூலித்து ஏமாற்றியது உண்மை எனும் போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடங்கள் விலைக்கு விற்கப்பட்டன என்பது தானே உண்மை. அது சட்டவிரோதம் தானே. பச்சமுத்து படிப்படியாக பணக்காரர் ஆனது இப்படித் தானோ?
  3. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவப் படிப்பு இடங்கள் 8 ஆண்டுகளாக தம்மால் தான் நிரப்பப்பட்டதாக மதன் கடிதத்தில் கூறியிருப்பது உண்மையா… இல்லையா?
  4. மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பச்சமுத்து கூறியுள்ளார். அப்படியானால் எஸ்.ஆர்.எம் குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன் மோசடி செய்து விட்டதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருப்பது ஏன்? எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க முடியுமா?
  5. மதனுடன் தொடர்பு இல்லை என்றால், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் மதனுடன் ஒன்றாக பச்சமுத்து கலந்து கொண்டது ஏன்?
  6. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு அனைத்து மாணவர்களும் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? ஒருவரிடமும் நன்கொடை வாங்காமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாங்கி மாணவர்களை சேர்ப்பதாக பச்சமுத்துவால் கூற முடியுமா?
  7. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?
  8. 250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக காட்டாங்கொளத்தூர் வளாகம் ஏரிகளையும், புறம்போக்கு நிலங்களையும் வளைத்து பட்டா வாங்கி கட்டப்பட்டது தானே? அதுகுறித்த விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிட்டு, விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாரா?
  9. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம். குழுமம் படகு சவாரி நடத்தி வருகிறது. அரசு சொத்தான ஏரியை ஆக்கிரமித்தது குற்றமில்லையா?
மேற்கண்ட எந்த வினாவுக்கும் பச்சமுத்துவால் பதிலளிக்க முடியாது. மதனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க பச்சமுத்து முயல்கிறார். பச்சமுத்துவும், மதனும் எந்த அளவுக்கு நெருக்கம், இருவரும் இணைந்து திரைத்துறையில் அடித்த கூத்துக்கள் என்ன? என்பதற்கெல்லாம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்தால் தான் முழு உண்மையும் வெளிவரும் என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும். இப்பிரச்சினையில் பச்சமுத்து உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது.
ஆக, மொத்தத்தில் இரண்டு கல்விக் கடவுள்களும் எப்படி கல்விச் சேவையில் ஈடுபட்டு பல கோடிகளுக்கு அதிபதிகள் ஆனார்கள் என்பதை பரபரஸ்பர இந்த அறிக்கைகளே எடுத்துக் காட்டுகின்றன. இதில் யார் முதலிடம் என்பதைத் தீர்மானிக்கும் பொருப்பை நேர்படப் பேசு விவாத பாணியில் மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்!

கருத்துகள் இல்லை: