புதன், 8 ஜூன், 2016

டாக்டர் கிருஷ்ணசாமி: நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை


' ஓட்டப்பிடாரம் தொகுதியில் முறைகேடு செய்துதான் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அதனை ரத்து செய்து,  நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்' என தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் மனு கொடுத்திருக்கிறார் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி .சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி.
தேர்தல் முடிவில்,  493 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சுந்தர்ராஜிடம் தோற்றுப் போனார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

அதில், " சட்டசபையில் அ.தி.மு.க.வை எதிர்த்து குரல் கொடுப்பதாலும், மழை வெள்ளம் தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்ததாலும், தேர்தலில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.கவினர் குறியாக இருந்தனர். அதற்குத் தகுந்தவாறு தேர்தல் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் நடந்து முடியும் வரையில், அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டனர். எனது தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகளை தேர்தல் அதிகாரிகள் விநியோகிக்கவில்லை. வாக்காளர்களுக்கு தங்கு தடையில்லாமல் அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தனர்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தரராஜ், தனது சொத்துகள் பற்றிய தகவல்கள் பலவற்றை வேட்புமனுவில் மறைத்துவிட்டார். தேர்தல் முடிவில் நான் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டேன். வாக்கு எண்ணிக்கையிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்கு எண்ணிக்கை அன்றே புகார் கொடுத்தேன். அதை யாரும் பொருட்படுத்தவில்லை. எனவே, இதுபோன்ற பிரச்னைகளை பரிசீலித்து பார்த்து, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், தேர்தலில் நான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டாக்டர். கிருஷ்ணசாமியிடம் பேசினோம். " தமிழக தேர்தல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து முறையிடுவோம். அவர்களும் நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாகவும் மக்களைத் திரட்டியும் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்" என்றார் நிதானமாக.

வழக்கம்போல, புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர், ' உரிய நடவடிக்கை எடுப்பதாக'க் கூறி கிருஷ்ணசாமியை அனுப்பி வைத்திருக்கிறார். ஆணையத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள்.

-ஆ.விஜயானந்த் விகடன்.com

கருத்துகள் இல்லை: