வியாழன், 10 மார்ச், 2016

விஜயராசு இன்று ஓவர் மவுசு, நாளை டவுசர் போயிடாம ஆடனும்...அம்மா பாடம் மறந்தாச்சா....(உங்க பாணில பேசுறோமுங்கோ)..

தமிழக கட்சிகளின் திரைமறைவு பேரத்தால், கூட்டணி எதுவும் இறுதி கட்டத்தை எட்டாமல், குழப்பமான சூழல் நிலவுகிறது.  தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் முனைப்பில் தீவிரமாகி உள்ளன. சுத்தி சுத்தி: ஒருபக்கம், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ள அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம், கூட்டணி அமைப்பதிலும் தீவிரமாக உள்ளன. இதற்காக, பல கட்டங்களிலும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு அழைத்து செல்ல வேண்டும் என, தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும், மக்கள் நல கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், தே.மு.தி.க.,வை சுற்றியே மொத்த அரசியல் நிகழ்வுகளும் நடக்கின்றன.
தி.மு.க., கூட்டணிக்கு, விஜயகாந்த் ஒப்புக் கொண்டார் என, தி.மு.க., தரப்பில் அடித்து சொன்னாலும், கூட்டணி உறுதியாவில்லை என்பதே நிஜம்.இதற்காக, தமிழகத்தின் பிரபல தொழிலதிபர், பாதிரியார் என, பல்வேறு தரப்பினரும் விஜயகாந்திடம் ஏற்கனவே பேரத்தை நடத்தி முடித்தும், ஒத்து வராததால், கடைசியாக, கனிமொழியின் நெருக்கமான அரசியல் விமர்சகர் ஒருவர் களம் இறங்கி, பேச்சு நடத்தி உள்ளார்.

அப்போது, துணை முதல்வர்; ஆட்சியில் பங்கு உள்ளிட்டவிஷயங்களை,
தே.மு.தி.க., தரப்பில் வலியுறுத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில், 25 சதவீத தொகுதிகள் கேட்டுத்தான் வலியுறுத்தப்பட்டது. அதை தி.மு.க., ஏற்பதாக சொல்லி விட்டதால், கூட்டணி கிட்டத்தட்ட முடிவடையும் சூழலை எட்டி இருப்பதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்து தான், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது' என, தே.மு.தி.க., கூட்டணி குறித்து சொன்னார்.

உடனே, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், விஜயகாந்த் தரப்பினரிடம் பேசினார். அப்போது, 'கூட்டணிக்கு வர வேண்டும் என்றால், 150, 'சீட்' வேண்டும்' என விஜயகாந்த் தரப்பு சொல்லியுள்ளது. அதற்கும், வேகமாக தலையசைத்தது மக்கள் நல கூட்டணி. இருந்தும், கூட்டணிக்கு விஜயகாந்த் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை.

அதேநேரம்,பா.ஜ., தரப்பிலும் விஜயகாந்தின் மனைவியை தொடர்பு கொண்டு பேசினார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'விஜயகாந்துக்கு, கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அந்தஸ்து அளிக்கிறோம்' என, ஆசை வார்த்தை காட்டினார். 'தொடர்ந்து பேசுவோம்' என, சொன்ன பிரேமலதா, தி.மு.க., கூட்டணி குறித்து வாய் திறக்கவில்லை. இதனால், பா.ஜ., தரப்பும், விஜயகாந்த் கூட்டணிக்கு வருவார் என, நம்பிக் கொண்டுள்ளது.

விஜயகாந்தை வைத்து நடக்கும் திரைமறைவு பேரங்கள் இப்படி என்றால், அ.தி.மு.க., கூட்டணியில், இணைய பாடுபட்டு கொண்டிருக்கும் த.மா.கா.,வுக்கு, எட்டு 'சீட்'கள்தான் என்று, ஐவரணியினர் சொன்ன பின்னும், கூட்டணிக்காக பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

'வேடிக்கை':
இதே நிலையில்தான், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை என, பல கட்சிகளும் காத்திருக்கின்றன. ஆனால் ஜெயலலிதாவோ, விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கிறார். 'இதெல்லாம் தெரிந்தும், பல கட்சிகள், மற்ற கட்சிகளுடன் திரைமறைவில் கூட்டணி பேச்சு நடத்தி வருவதுதான் வேடிக்கை' என்கிறார் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர்.
- நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: