திங்கள், 7 மார்ச், 2016

பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை...தில்லி ,குஜராத்,ஜம்மு-காஷ்மீர் உஷார்

தினமணி.com பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தும் திட்டத்துடன் 10 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதைத் தொடர்ந்து, தில்லி, குஜராத், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 குஜராத்தில் போலீஸாருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முக்கிய பகுதிகளில், தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுமார் 200 பேர் கண்காணிப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 குஜராத் மாநிலம், கட்ச் கடலோரப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) அங்கு சந்தேகப்படும்படி உலவிய படகை அண்மையில் கைப்பற்றினர். அப்போது பிஎஸ்எஃப் வீரர்கள் வருவதைக் கண்டதும், படகின் அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள், பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பிச்சென்று விட்டனர்.
 இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்குள் கடல் வழியாக பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் 10 பேரும், தில்லியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த பயங்கரவாதிகள், தில்லிக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 இதையடுத்து, தில்லியில் முக்கிய இடங்கள், கட்டடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் ரவுடிகளின் நடமாட்டமும் போலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது. தில்லியில் உயரமான கட்டடங்களில் கண்காணிப்பு கேமிராவைப் பொருத்தி, அவற்றின் மூலம் மக்களின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
 குஜராத்தில் முக்கியமான பகுதிகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி திங்கள்கிழமை (மார்ச் 7) கொண்டாடப்படுவதால், பிரசித்தி பெற்ற சோமநாதர், ஜுனாகட் மற்றும் அக்ஷர்தாம் கோயில்களுக்கு பக்தர்கள் அதிகம் வருவார்கள். இதனால், அக்கோயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறையை அந்த மாநில காவல்துறைத் தலைவர் பி.சி. தாக்குர் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், எத்தகைய சவாலான நிலையையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கும்படி போலீஸாரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சோமநாதர் கோயிலுக்கு தேசியப் பாதுகாப்புப் படையின் குழு ஒன்றையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
 குஜராத் உள்துறைச் செயலர் ஆலோசனை: உளவு அமைப்பின் எச்சரிக்கை தொடர்பாக காந்திநகரில் குஜராத் மாநில உள்துறைச் செயலர் பி.கே. தனேஜா உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை காலையும் இரு முறை ஆலோசனை நடத்தினார். இதேபோல், காவல்துறைத் தலைவர் பி.சி. தாக்குரும், தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தனியே ஆலோசனை நடத்தினார்.
 சோமநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சி முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. கட்ச் மாவட்டத்தில் சந்தேகப்படும்படியான இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
 சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் பலத்த பாதுகாப்பு: இதேபோல், மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நாட்டின் பிற பெருநகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 "கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் 24 மணி நேரத்தில் குண்டு வைத்து தகர்க்கப்படும்' என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய கமாண்டர் கே.ஜே. சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியபோது, இந்தியாவில் சிவராத்திரி விழாவை சீர்குலைக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கும் தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: