ஞாயிறு, 6 மார்ச், 2016

மல்கம் X திரைப்படம் குறித்து சில குறிப்புகள்

நான் உங்களுக்கு கூறுகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கொலைகாரர்கள் வெள்ளையர்கள் தான்”“நான் குற்றஞ் சுமத்துகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கடத்தல்காரர்கள் வெள்ளையர்கள் தான் அந்த மனிதர்கள் போகாத ஓரிடமும் இந்த உலகத்தில் இல்லை. எல்லா இடங்களுக்கும் சென்று அவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் கொண்டு வருவதாக. ஆனால் அவர்கள் மிக மோசமான நாசகாரர்கள். அடிமை வணிகம் செய்பவர்களும், கொள்ளைக்காரர்களும் வெள்ளையர்கள் தான். அவர்கள் இதனை மறுக்க முடியாதபடி வாழும் சாட்சியங்களாக நாங்கள் உள்ளோம். நீ அமெரிக்கன் இல்லை. அமெரிக்கனால் பழிவாங்கப்பட்டவன். நீயும் நானுமே அதற்குச் சாட்சிகள்.” இந்த வரிகளுடன் காட்சிப் படிமங்களினூடு செல்லும் ஸ்பைக் லீயின் கமெரா ஒரு கறுப்பு இளைஞனை வெள்ளையினப் பொலிஸ் அடித்து நொறுக்குவதையும் அதன் காரணமாக பற்றியெரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி பொசுங்கிப் போவதனையும், கொழுந்து விட்டெரியும் அந்த நெருப்பு எக்ஸ் எனும் எழுத்தாக உருமாறுவதனூடாகவும் வாழும் சாட்சியாக இருந்து தனது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி விட்டுப் போன மாபெரும் கறுப்பினத் தலைவனான மல்கம் எக்ஸை உயிர்பெற வைக்கின்றது.
அலெக்ஸ் ஹெலி எழுதிய மல்கம் எக்ஸின் வாழ்க்கைக் காவியத்தைப் திரைக்காவியமாக எமக்குத் தந்திருக்கிறார் ஸ்பைக் லீ. ஸ்பைக் லீ 1957ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பிறந்த ஒரு கறுப்பினத்தவர். கலைத்துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றவர். திரைப்படக்கலை சம்பந்தமாகவும் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். 15க்கு மேற்பட்ட சிறந்த திரைப்படங்களையும், இசை அல்பங்களையும், குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் அவர் ஒரு எழுத்தாளரும் கூட. இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல பரிமாணங்களில் பிரகாசிப்பவர் ஸ்பைக் லீ. இவருடைய பல படங்கள் கறுப்பர்கள் மீதான வெள்ளையர்களின் இனவெறி மற்றும் நிறவெறி பற்றியே பேசுகின்றன. இவருடைய மிக முக்கியமான திரைப்படங்களிலொன்று மல்கம் எக்ஸ். இத்திரைப்படத்தின் மூலம் பலத்த சர்ச்சைகளுக்கும் ஆளானவர். அந்த வகையில் மல்கம் எக்ஸ் திரைப்படம் மூலம் கறுப்பர்களை மட்டுமல்லாமல் எம்மையும் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறார் ஸ்பைக் லீ.
>திரைப்படம் மல்கம் எக்ஸின் இளம்பராய வாழ்க்கையுடன் ஆரம்பிக்கிறது. இதில் இளம் பராய மல்கம் எக்ஸின் தோழனாக ஸ்பைக் லீயே நடித்துள்ளார். கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மல்கமின் தந்தை ஏர்ல் லிட்டில் ‘‘கு க்ளக்ஸ் க்ளன்’’ எனும் வெள்ளையர்களின் கொலைவெறிப் படையால் கொலை செய்யப்படுகிறார். சிறந்த ஆளுமையும், சிறந்த பேச்சுத் திறமையும், மார்க்கஸ் கார்வியின் ‘‘உலகெங்கும் உள்ள கறுப்பர்கள் அனைவரும் ஆபிரிக்காவுக்குத் திரும்ப வேண்டும்;’’ என்ற கொள்கைக்கான உலக நீக்ரோ முன்னேற்றக் கழக அமைப்பின் ஒமாஹா பகுதியின் தலைவராகவும் இருந்த ஏர்ல் லிட்டில் மல்கமுக்கு ஆறு வயதாக இருந்தபோதே படுகொலை செய்யப்படுகிறார்.
>மல்கமின் சிறுவயதில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இளைஞனாகவுள்ள மல்கம் நினைத்துப் பார்ப்பது போல் பின்னோக்கி நகரும் காட்சியின் உத்தியில் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறார் லீ.
>ஒரு சந்தர்ப்பத்தில் பாடசாலையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களாக, நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வெள்ளையின மாணவர்கள் கூறும் பதிலால் திருப்தியடையும் ஆசிரியர், மல்கமைப் பார்த்து நீ என்னவாக வர விரும்புகிறாய் எனக் கேட்க, நான் ஒரு வழக்கறிஞராக வர விரும்புகிறேன் எனக் கூறும் மல்கமை நோக்கிய ஆசிரியர் வெறுப்பும், சினமும் கொள்கிறார். அதனைக் காட்டிக் கொள்ளாதவாறு "நீ ஒரு தச்சுத் தொழிலாளியாக வரலாமே'' என்று கூறுகிறார். இந்தப் பதில் மல்கமின் பிஞ்சு மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களிலேயே திறமைசாலியான மாணவனாக இருந்தும் கறுப்பன் என்ற காரணத்திற்காக அவன் ஒதுக்கப்படுகிறான். பிஞ்சு மனங்களிலே நஞ்சு விதைக்கப்படுகிறது. கறுப்பு மாணவன் என்ற காரணத்திற்காக அவனது விளையாட்டு ஆர்வமும் தடைப்பட்டுப் போகிறது.
இளைஞனாக இருந்த காலத்தில் வெள்ளைக்காரர் போல் தான் இருக்க வேண்டும் என்று ஆசை கொண்ட மல்கத்தை படத்தின் ஆரம்பக் காட்சிகளில் லீ தெளிவாகக் காட்டியுள்ளார். கறுப்பர்களுக்கே உரித்தான தனது சுருண்ட தலைமயிரை 'ஸ்ரைற' பண்ணி வெள்ளைக்காரர் மாதிரி பாவனை செய்து கொள்வதும், அவர்கள் மாதிரியே நடையுடை பாவனையை மாற்றிக் கொள்வதும், வெள்ளையினப் பெண்களுடன் சல்லாபிப்பதுமாக இருக்கும் மல்கமையே லீ முதலில் எமக்கு அறிமுகம் செய்கிறார். படத்தின் முதல் அரைவாசியும் மல்கமின் இளம் பராய வாழ்க்கை பற்றியே பேசப்படுகிறது. போதைப் பொருள் கடத்துவது, விற்பது, சூதாட்டங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் மல்கம் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒருமுறை கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு பொலிஸாரிடம் பிடிபடும் மல்கம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்.
>சிறை செல்லும் மல்கம் வெள்ளைக் காவலர்களிடம் காட்டும் எதிர்ப்பின் காரணமாக பல சித்திரவதைகளை அனுபவிக்கிறார். எவ்வளவுதான் உல்லாசமாகத் திரிந்தாலும் அவ்வப்போது அவரது வெள்ளையர்கள் மீதான எதிர்ப்பும் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. சிறை மல்கமுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. சிறையில் சந்திக்கும் பெய்னிஸ் எனும் சக கைதியினால் கறுப்பின அடையாளத்தைப் பற்றியும், ‘நேஷன் ஒவ் இஸ்லாம்’ எனும் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவரான இலிஜா மொஹமட்டைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார். வெள்ளையர் பற்றிய மல்கமின் மாயையைத் தகர்த்து இலிஜா மொஹமட்டால் மட்டும் தான் உன்னையும், உனது மனதையும் வெளிக் கொண்டு வர முடியும் எனக் கூறுகிறான் பெய்னிஸ். கறுப்பர்கள் தான் உன்னதமானவர்கள். கடவுள் கூடக் கறுப்புத்தான். வெள்ளைக்காரர்கள் தான் கூறுகிறார்கள் ஜீஸஸ் வெள்ளை உடம்பும், நீலக் கண்களும், பொன்னிறத் தலைமயிரும் உடையவர் என்று. அதை நாமும் நம்புகிறோம். ஆனால் எல்லாமே கறுப்புத்தான், நாங்கள் தான் உண்மையான மனிதர்கள், இந்த உலகத்தில் முதன் முதலில் பிறந்தவர்கள் கறுப்பர்கள் தான் எனக் கறுப்பர்களின் பலம், ஆளுமை என்பவற்றைப் புரிய வைக்கின்றான். இந்தச் சம்பவமே மல்கமின் வாழ்வை இன்னொரு திசைக்கு இட்டுச் செல்ல வழி சமைக்கிறது. மேலதிகமாக வாசிக்கவும் அதனால் யோசிக்கவும் தூண்டுகிறது. இந்தவேளையில் அமைப்பின் உறுப்பினராக இருந்த சகோதரி பெற்றி எக்ஸின் மேல் மல்கமுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பெற்றியின் ஆளுமை அவரை கவனம் கொள்ளச் செய்கின்றது. பெற்றியும், மல்கமும் இலிஜா மொஹமட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

மல்கம் எக்ஸின் புகழ் கூடக் கூட அமைப்பிற்குள்ளேயே மல்கமிற்கு எதிரிகள் உருவாகத் தொடங்குகிறார்கள். மல்கமின் ஆளுமைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாக மாறுகிறார்கள். சிறையில் மல்கமுக்கு நேஷன் ஒப் இஸ்லாமை அறிமுகப்படுத்தும் பெய்னிஸ்ஸே ஒரு கட்டத்தில் மல்கம் மீது பொறாமை கொள்கின்றான். அவனுக்கு மல்கமின் வளர்ச்சி தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் மல்கமோ பெய்னிஸ் தனக்கு எதிரியாக மாறுவான் என நம்ப முடியாதவராக இருக்கிறார். பெற்றிக்கும் அவருக்குமான உரையாடலில் மல்கம் எவ்வாறு சகோதரர் பெய்னிஸை நம்பினார் என்பதை தெளிவுபடுத்துகிறார் லீ. சகோரதரர் பெய்னிஸ்தான் சிறைக்குள் விலங்கைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு கௌரவத்திற்குரிய இலிஜா மொஹமட்டை அறிமுப்படுத்தியவர். எனது வாழ்க்கையைப் பத்திரப்படுத்தியவரும் அவரே, அவரால் எனக்குத் துரோகம் செய்ய முடியாதென மல்கம் பெற்றியிடம் கூறுகிறார்.

இந்த நேரத்தில்தான் இலிஜா மொஹமட்டால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட, அமைப்பின் பெண் சகோதரிகள் இருவர் தமக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தந்தை இலிஜா மொஹமட் என்று பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார்கள். பேட்டியின் மூலம் அது தெரிய வரும்போது இலிஜா மொஹமட் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் மல்கம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்துப் பேசும் போது உண்மையை அறிந்து கொள்கிறார்.
<>அதன் பிறகு பெய்னிஸ் உடன் நடைபெறும் உரையாடலில் பெய்னிஸ் கூட மொஹமட் செய்ததில் தவறில்லையெனக் கூறுகிறான். இலிஜா மொகமட் கூட தான் செய்தது தவறில்லையெனும் கருத்துப்பட மல்கமுடன் உரையாடுகிறார். ஆனால் மல்கத்தால் இதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் மக்கள் தலைவர்கள். நாங்களே இவ்வாறு செய்யலாமா? எனக் கேள்வியெழுப்புகிறார். <இந்த விடயமும், கென்னடியின் கொலை தொடர்பாக மல்கம் அளித்த பேட்டியும் நேஷன் ஒப் இஸ்லாமுக்கும் அவருக்குமான உறவில் பிளவு ஏற்படக் காரணமாகிறது. இதன் பிறகு முற்றாக நேஷன் ஒப் இஸ்லாமிலிருந்து விலகும் மல்கம் “ஆப்ரோ அமெரிக்க ஒற்றுமை நிறுவனம்” (OAAU) என்ற புதிய அரசியல் அமைப்பை, நிறுவி மக்கள் முன் பிரகடனப்படுத்துகிறார். </மல்கமைத் தமது அமைப்பு தடை செய்துள்ளதாக நேஷன் ஒப் இஸ்லாமும் அறவிக்கிறது. மல்கமின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், மல்கமை அழிப்பதற்காக அமெரிக்காவின் FBI உளவுப்படையுடன் கூட்டுச் சேர்கிறது நேஷன் ஒப் இஸ்லாம். இதற்கிடையில் மல்கமின் ஒவ்வொரு நடவடிக்கையும் FBI யினால் கண்காணிக்கப்படுகிறது. மல்கம் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் போது FBI உளவாளிகள் அவருடன் சென்று அவரைக் கண்காணிக்கிறார்கள். அதனை மல்கம் பெற்றிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கிறார், “நான் போகுமிடமெல்லாம் இரண்டு வெள்ளையர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்களென”.அடிமைத்தனம் மல்கமின் மனதை எவ்வளவு புண்படுத்தியுள்ளது என்பதனை அவர் கூறும் இந்தக் கருத்துக்கள் ஊடாக நாம் புரிந்து கொள்ளலாம். “இப்பொழுது நான் இதைச் சொன்னால் நீங்கள் திகைத்துப் போவீர்கள்! மக்காவில் நாங்கள் முஸ்லிம்களுடன் ஒரு கோப்பையில் உண்டோம், ஒரு கிளாஸில் குடித்தோம், ஒரு கடவுளை வழிபட்டோம். அவர்களுடைய கண்ணும் நீலமாக இருந்தது. அவர்களது தலைமயிர் பொன்னிறமாக இருந்தது. அவர்களுடைய தோலும் வெள்ளையாவே இருந்தது. ஆனால் நாங்கள் எல்லோரும் உண்மையான சகோதரர்களாக இருந்தோம். எல்லா நிறத்தவர்களும், எல்லா இனத்தவர்களும் ஒரே கடவுளையே, ஒரே மனிதத்துவத்தையே நம்புகின்றனர். நான் இனவாதியல்ல. எனக்கென்று எதுவும் வேண்டியதில்லை. ஆனால் எல்லா மக்களுக்கும், சுதந்திரம், நீதி, சமத்துவமான வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சி என்பன கிடைக்க வேண்டும். மனிதர்களை தோலின் நிறத்தை மட்டுமே வைத்து எடைபோடும் அமெரிக்க வெள்ளையர்களின் மனிதாபிமானமற்ற செயலுக்கு மாறாக அங்கிருந்த சூழ்நிலை காணப்பட்டது'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மல்கம் நேஷன் ஒப் இஸ்லாமில் இணைந்ததன் பிறகே சிறிய அமைப்பாக இருந்த நேஷன் ஒப் இஸ்லாம் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக அமெரிக்காவில் தலைதூக்கியது. ஒவ்வொரு கறுப்பரையும் வெள்ளையர்கள் துன்புறுத்தும் போது தட்டிக் கேட்கும் மல்கத்தின் பின் கறுப்பின மக்கள் திரண்டனர். அவரை ஆதரித்தனர். ஒரு கட்டத்தில் மார்ட்டின் லூதர்கிங்கின் அகிம்சை வழியை விட, மல்கம் எக்ஸின் தீவிரத் தன்மையின் மேல் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். தீவிரமான இந்தத் தலைவரின் ஆணையின் கீழ் ஆபிரிக்க அமெரிக்கர்கள் எதனையும் செய்யத் தயாராக இருந்தனர். இந்தத் தீவிரத் தன்மை அமெரிக்க வரலாற்றிலேயே அவ்வளவு காலமும் இல்லாத ஒன்றாகவும் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றக் கூடிய ஒன்றாகவும் இருந்தது.

புரட்சி என்பது இரத்தம் சிந்துவது, புரட்சி என்பது சமரசமற்றது. புரட்சி என்பது தனது பாதையில் எதிர்ப்படும் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போடுவது’ என்று தான் கூறிய இந்தக் கருத்திற்கு ஏற்றவாறே இறுதிவரை தனது மக்களுக்காகப் போராடி, தனது மக்கள் முன்னாலேயே இரத்த வெள்ளத்தில் காவியமாகிப் போனான் இந்தக் கறுப்பு மனிதன்.</சரிநிகர்
;மே - ஜீன், 2007  //thiraiveli.blogspot.com

கருத்துகள் இல்லை: