வெள்ளி, 11 மார்ச், 2016

ராகுல் :ரொட்டி திருடினால் அடித்து சிறையில் போடுகிறீர்கள்....9,000 கோடி திருடினால்(மல்லையா) முதல் வகுப்பில் தப்பி செல்ல உதவி செய்கிறீர்கள்?

டெல்லி: நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன் என தொழிலதிபரும், ரூ.9000 கோடி கடனாளியுமான விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பது புகாராகும். அவர் சமீபத்தில் யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதற்காக அவருக்கு அந்த நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான டயாஜியோ பிஎல்சி நிறுவனம் 75 மில்லியன் டாலர் (சுமார் ரூ.515 கோடி) தர சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 Let media bosses not forget help, favours says Vijay mallya உடனே விஜய் மல்லையாவுக்கு அந்த நிறுவனம் 75 மில்லியன் டாலர் தொகை வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி வங்கிகள் சார்பில் பெங்களூரு கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 
மேலும், ‘விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும், அவர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்' என்று கோரி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன் ஆகியோர் முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, இந்தியாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். 
இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மல்லையா விவகாரம் அனலை கிளப்பி வருகிறது. விஜய் மல்லையா தப்பிச்செல்ல மத்தியஅரசு உதவி செய்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 
"ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 
விஜய் மல்லையா விவகாரத்திற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 'சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார். 
இந்நிலையில்தான், விஜய் மல்லையா "நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன்" என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: "நான் ஒரு சர்வதேச தொழிலதிபர். தொழில் நிமித்தமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. நான் பயந்தவனும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன். நமது நாட்டின் நீதித்துறை வலுவானது, போற்றுதற்குரியது. நீதிக்கு நான் கட்டுப்படுகிறேன், ஆனால், ஊடகங்கள் கற்பிக்கும் நியாய அநியாய வாதங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. நான் என் சொத்து விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன. 
எனது சொத்து விவரங்கள் என்னவென்பது எனக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்குத் தெரியும். ஏன், நாடாளுமன்றத்திலும் என் சொத்து விவரங்களை தெரிவித்துள்ளேன். 
இப்போது என் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஊடக முதலாளிகள் கடந்த காலங்களில் என்னால் அடைந்த பலன்களை மறந்துவிட வேண்டாம். அவற்றையெல்லாம் நான் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன். 
இப்போது டி.ஆர்.பி.க்காக ஊடகங்கள் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. ஊடகங்கள் சில விவகாரங்களை கையிலெடுத்துக் கொண்டால் அவற்றை பெரிதாக்கி, நெருப்பை வளர்த்து அதில் உண்மையை எரித்து சாம்பலாக்கி விடுகின்றன." எனக் குறிப்பிட்டுள்ளார். மல்லையா, எங்கிருந்து இந்த டுவீட்களை அனுப்பியிருக்கிறார் என்பதை தெரிவிக்காவிட்டாலும் அவர் லண்டனில் வடக்கு பகுதியில் இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன

Read more at/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: