வியாழன், 10 மார்ச், 2016

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு ரூ.2.5 கோடி மத்திய அரசு நன்கொடை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்புக்கு ரூ.2.5 கோடி நன்கொடை கொடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய கலாச்சாரத் துறை மந்திரி மகேஷ் சர்மா கூறியதாவது:-< உலக கலாச்சார திருவிழா நடத்துவதற்காக வாழும் கலை அமைப்புக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கலைகளின் முனேற்றத்திற்காக செயல்படும் அமைப்புகளுக்கு நன்கொடை கொடுப்பது வழக்கம். இதன்படி தான் வாழும் கலை அமைப்புக்கு ரூ.2.5 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை ஊக்குவிக்கும் ஸ்பிக் மெகாய் அமைப்புக்கும் இதே அளவு பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. நன்கொடைக் கேட்டு ஆண்டுக்கு சுமார் 100 விண்ணப்பங்கள் வருகின்றன.
யாருக்கு நிதி அளிக்க வேண்டும் என்பதை தனியாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிட்டி தான் முடிவு செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றின் வெள்ளச் சமவெளி பகுதியில் வருகிற 11–ந்தேதி முதல் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியால் யமுனா நதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு எழுந்தது. மேலும் தேசிய பசுமைத் தீர்பாயத்தில் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்பாயம் வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து, நிபந்தனைகளுடன் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்துள்ளது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: