திங்கள், 7 மார்ச், 2016

மகளிர் மேம்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா


பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் தனது அரசு சிறப்பான பணிகளைச் செய்து வருவதாக முதல்வர் ஜெயலலிதா தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
“மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா”
-- என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் வாக்கிற்கேற்ப, பெண்மையின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, பல சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருவதால், மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் மகளிர் மேம்பாட்டிற்கும், அவர்களின் சம உரிமையை பேணிக் காத்திடவும், தொட்டில் குழந்தைத் திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை, தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை குழந்தையின் பெயருக்கு முன்னர் முதலெழுத்தாக பயன்படுத்துதல், மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “குடிமகள்” என்ற சொல்லை பயன்படுத்துதல், சாதனைப் பெண்களைப் போற்றும் வகையில், வீர, தீரச் செயல் புரியும் பெண்களுக்கு "கல்பனா சாவ்லா விருது", சிறந்தப் பெண்மணிக்கு "அவ்வையார் விருது", திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் பெண்கள் திருமண உதவித் திட்டம், தாய் சேய் நலன் காக்கும் வகையில் நிதி உயர்வு அளித்து திருத்தியமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்சத் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், தொடர் கல்வித் திட்டம், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே பள்ளிகள், கல்லூரிகள்;

பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “அம்மா இலக்கிய விருது”, பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு ``அம்மா கைப்பேசி” வழங்கும் திட்டம், மகளிர் தொழில் முனைவோருக்கான பிரத்யேக தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு;

இல்லத்தரசிகளின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப் பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்களுக்கு நவீன ரக தையல் இயந்திரங்கள் வாங்கிட 10ரூ மானியம் வழங்கும் திட்டம், குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற வயது வரம்பு 20-லிருந்து 18-ஆக குறைப்பு, பெண்களின் சுகாதாரத்தினை பேணும் வகையில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக எடைக் கருவிகள் வழங்குதல், 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இணை உணவு வழங்கும் திட்டம், பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் குழந்தைகளுக்கு அன்னையர் பாலூட்ட தனி அறைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு சட்டத்தின் மூலம் 1994-ஆம் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு என வழங்கியது, தற்போது இந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதம் என உயர்த்தியது போன்ற எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை தமிழக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக செயல்படுத்தி வருகிறது.

அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது உளங்கனிந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.  //tamil.thehindu.com/t

கருத்துகள் இல்லை: