புதன், 9 மார்ச், 2016

தில்லி ஜே.என்.யூ-வில் மனுஸ்மிருதி எரிப்பு !

ஏ.பி.வி.பி மாணவர் பங்கேற்புடன் எரிக்கப்படும் மனுஸ்மிருதி
ஏ.பி.வி.பி மாணவர் பங்கேற்புடன் எரிக்கப்படும் மனுஸ்மிருதி – படம் நன்றி: The Hindu மார்ச்-8 உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் (ஜே.என்.யூ) பார்ப்பன இந்துமத பயங்கரவாதத்தின் அடையாளங்களில் ஒன்றான மனுஸ்மிருதி கொளுத்தப்பட்டது. மனுஸ்மிருதியில் இடம்பெற்றிருக்கும் பெண்களுக்கு எதிரான 40 சட்டதிட்டங்களை சுட்டிக்காட்டி இந்த எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஜே.என்.யூ மீதான மோடி அரசின் அடக்குமுறை மற்றும் மனுஸ்மிருதி குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யிலிருந்து வெளியேறிய மாணவர்களும், தற்போதைய ஏ.பி.வி.பி-ஜே.என்.யூ கிளையின் துணைத் தலைவர் ஜதின் கோரயாவும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
AISA உள்ளிட்ட பிற மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டு மனுஸ்மிருதியை எரித்து (மனு)ஸ்மிருதி இராணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
முன்னதாக ஏ.பி.வி.பி-யில் மனுஸ்மிருதி பற்றிய கருத்துக்களை விவாதித்து அதன் சிந்தாத்ததுடன் முரண்படுவதாக கூறிய வெளியேறிய மாணவர் பிரதீர் நர்வால் அந்த 40 கருத்துக்களையும் உரக்க வாசித்து அம்பலப்படுத்தினார். அவர் கூறுகையில் “மனுஸ்மிருதியை ஆதரிக்கும் எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது, மனுஸ்மிருதிதான் தீண்டாமையை தீவிரப்படுத்தியது” என்றும் பேசினார். போராட்டத்தில் பார்ப்பனித்தியத்திற்கு எதிராகவும், சாதியவாதத்திற்கு எதிராகவும், மனுவாதிகளுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட்ன.
ஜே.என்.யூ-வில் இருக்கும் ஏ.பி.வி.பி கூடாராம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும் நிலையில் இப்போராட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஏ.பி.வி,பி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் கூடுதல் செயலாளர் சவுரப் குமார் சர்மா. அதில் தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் எதிரான பகுதிகளை மாணவரகள் எரித்துள்ளதாகவும் அதில் ஏ.பி.வி.பி மாணவர் கலந்து கொண்டது அவரது தனிநபர் உரிமை என்பதாக சப்பைக் கட்டு கட்டியுள்ளார். மோடிக்கு சொம்படிக்கும் ஊடகமான ஜி-நியூசிற்கு அளித்த பேட்டியிலோ ஆசிரியர்களின் அழுத்தத்தின் காரணமாகவே இத்தீவைப்பு நடந்ததாக போராடும் மாணவர்களை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.
மனுஸ்மிருதி எரிப்பு நிகழ்ச்சிக்கு பல்கலைகழகம் அனுமதி மறுத்த நிலையில் அதை மீறி மாணவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனர். மனுஸ்மிருதியெல்லாம் யாருக்காவது தெரியுமா? அதை யாரும் படிப்பதில்லை. ஒருகாலத்தில் அது இருந்திருக்கலாம். இன்று அதை அதை யாரும் பின்பற்றுவதில்லை என்பது தான் இந்த்துவவாதிகளின் வாதம்.
ஆனால் உண்மை நிலை என்ன? இன்றும் கயர்லாஞ்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் மனுநீதியின் பெயரால்தான் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க போற்றும் உடன் கட்டையில் ரூப் கன்வர் ராஜஸ்தானில் ஏரிக்கப்பட்டிருக்கிறார். முசுலீம்களும், தலித்துக்களும் மாட்டுக்கறியின் பெயரால் கொல்லப்படுகிறார்கள். ஆக மனுநீதியின் சட்டங்களை அமல்படுத்தும் வண்ணம் இங்கே பார்ப்பனியம் பண்பாட்டு ரீதியாகவும், அரசு ரீதியாகவும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது; நீடிக்கிறது.
மனுஸ்மிருதியின் மீதான எதிர்ப்பை ஒழிப்பதற்கு பார்ப்பனியம் தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொண்டுதான் வருகிறது. இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திகள் சாதி முறையின் தேவைகளை பற்றி தேனொழுக பேசி வருகிறார்கள். அரவிந்தன் நீலகண்ட போன்ற வேடதாரிகள் எழுதும் ஸ்வராஜ்யா பத்திரிகை சாதியை ஒரு சமூக உந்துசக்தியாக சிலாகிக்கிறது.
தருமபுரியின் நாயக்கன் கொட்டாய் இளவரசரன் தொடங்கி ரோகித் வெமுலா வரை மனுஸ்மிருதி இன்றளவும் செயல் வடிவில் நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பா.ம.கவும், பா.ஜ.கவும் பங்காளி முறையில் அணி சேர்கின்றன.
இந்த பின்னணியில் ஆர்.எஸ்.எஸை புரிந்து கொண்டு அதிலிருந்து விலகி மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்துவோம். இன்று மனுஸ்மிருதியில் பார்ப்பனியத்தின் வன்மத்தை புரிந்து கொண்டவர்கள் நாளையே முழு இந்திய மக்களது வாழ்க்கையை அடிமைப்படுத்தும் அதன் சமூக பொருளாதார அரசியல் நிலையை புரிந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் இந்துமதவெறியை எதிர்ப்போரை சுட்டுத்தள்ளுவோம் என்று முழங்கும் பா.ஜ.க-வின் ரவுடி எச்.ராஜா தற்போது என்ன செய்வார்? அவரது முன்னாள் ஸ்வயம் சேவகர்களே இன்று மனுஸ்மிருதியை எரித்திருக்கிறார்கள். பாரதம் போற்ற வேண்டிய ஒரு ‘தவப் புருச’னின் சாஸ்திரத்தை எரித்த இந்த ‘தேச துரோகிகளை’ என்ன செய்வார்? உடனே ஒரு ஏ.கே 47- தூக்கிக் கொண்டு தில்லி விரைவாரா?
இன்று இந்த ‘தேசத் துரோகிகளை’ தூண்டி விட்டது பாகிஸ்தானோ, காஷ்மீர் போராளிகளோ, இல்லை நக்சலைட்டுகளோ இல்லை. ஹெட்கேவாரின் (ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்) முகாமிலிருந்தே இவர்கள் வந்திருக்கின்றனர். ஒரு வேளை இவர்களை தூண்டி விட்டது இந்துமதவெறியர்கள்தான்.
தொலைக்காட்சிகளில் ‘தேச துரோகி’களுக்கு எதிராக ஊளையிடும் ஊடக அடிமைகள் தற்போது என்ன பேசுவார்கள்?வினவு.com

கருத்துகள் இல்லை: