சனி, 12 மார்ச், 2016

ரூ.5 கோடி அபராதம் செலுத்த டபுள் ஸ்ரீ ரவிசங்கர் தயார்...தேசிய பசுமை தீர்ப்பாயம்.....

புதுடெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராத தொகையை தவணை முறையில் செலுத்த ‘வாழும் கலை’ அமைப்பு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, உலக கலாசார விழா தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி யமுனை நதிக்கரையில் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில், ‘உலக கலாசார திருவிழா’ நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.< இந்த விழா ஏற்பாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நடந்ததாகவும், எனவே விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ‘யமுனை நதியை காப்போம்’ என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, திருவிழாவுக்கு தடை விதிக்க மறுத்தது. ஆனாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, ரூ.5 கோடி அபராதத்தை விழா தொடங்குமுன் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், அபராத தொகையை கட்டப்போவதில்லை. அதற்கு பதிலாக சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம் என ‘வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்து இருந்தார். அபராத தொகை செலுத்துவதற்கான காலக்கெடு நேற்று வரை இருந்த நிலையில், இந்த விவகாரம் நேற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தாங்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மட்டுமே என்றும், தங்களால் இந்த தொகையை ஒரே தவணையில் செலுத்த முடியாது’ எனவும் வாழும் கலை அமைப்பு சார்பில் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அபராத தொகையில் ரூ.25 லட்சத்தை இன்று (நேற்று) செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை 3 வாரங்களுக்குள் செலுத்துவதாகவும் அந்த அமைப்பு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. வாழும் கலை அமைப்பின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பசுமை தீர்ப்பாயம், உலக கலாசார விழாவின்போது யமுனை நதி மற்றும் சமவெளி பகுதியில் எந்தவித மாசுக்களோ, கழிவுகளோ கலக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழுவுக்கு உத்தரவிட்டது.

ஆனாலும், தீர்ப்பாயத்தின் உத்தரவை விமர்சித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் செயலுக்கு, நீதிபதி சுவதந்தர் குமார் கடுமையான அதிருப்தி வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரூ.5 கோடி அபராதம் செலுத்துவதற்கு பதிலாக சிறைக்கு செல்வோம் என்று நீங்கள் (ரவிசங்கர்) கூறியது சரிதானா? புகழ்பெற்ற ஆன்மிக தலைவரான உங்களிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானோம்’ என்று தெரிவித்தார்.

பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராத தொகையை செலுத்த ‘வாழும் கலை’ அமைப்பு ஒத்துக்கொண்டதை தொடர்ந்து இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: