செவ்வாய், 8 மார்ச், 2016

அன்று பிளாட்பாரம்... இன்று கோடீஸ்வரர்... ஒரு அதிமுக விசுவாசியின் தில்லாலங்கடி கதை!

விகடன்.com :பிளாட்பார வியாபாரியாக இருந்த ஆளுங்கட்சியின் விசுவாசியான சிதம்பரம், இன்று பலகோடிக்கு அதிபதியாக இருக்கிறார். இவரை சென்னை சாஸ்திரி நகர் போலீஸார், நிலமோசடி வழக்கில் கைது செய்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. சிதம்பரத்தால் பாதிக்கப்பட்ட லண்டனில் டாக்டராக பணியாற்றும் சுப்பிரமணியத்திடம் பேசினோம்.
"என்னுடைய உறவினரான சிதம்பரம் மூலம் தமிழகத்தில் சில இடங்களை வாங்கினேன். ஆரம்பத்தில் இடங்களை சரியாக வாங்கிக் கொடுத்த அவர், ஒரு கட்டத்தில் என்னை ஏமாற்றி விட்டார். லண்டனில் நான் இருந்த சமயத்தில் எனக்கே தெரியாமல் சில இடங்களை பவர் மூலம் விற்றுவிட்டார். அடையாறில் உள்ள வீட்டை விற்றபோதுதான் சிதம்பரம் என்னை ஏமாற்றிய விவரம் எனக்குத் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் போலீஸில் புகார் கொடுத்து மிரட்டுகிறார்.
சிதம்பரத்துக்கு உறுதுணையாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால் அவர் மீது புகார் கொடுத்தால் அடுத்த நிமிடமே கம்பளைன்ட் சிதம்பரத்தின் கைக்கு சென்று விடுகிறது. என்னிடம் மட்டுமே பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சிதம்பரம் ஏமாற்றி இருக்கிறார். அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் என்னிடம் உள்ளது. பணத்தை மீட்க சட்டரீதியாக போராடி வருகிறேன்" என்றார்.

திருப்போரூரை சேர்ந்த விதவைப் பெண் அனிதா, "என்னுடைய கணவர் ஜெகநாதனும், சிதம்பரமும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தனர். கடந்த 2010-ல் எனது கணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருடைய பெயரில் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சிதம்பரம் தன்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டார். இதன்பிறகு என்னுடைய கணவர் ஜெகநாதன் இறந்து விட்டார். தற்போது கணவரிடமிருந்து பெற்ற சொத்துக்களை திரும்ப தர மறுக்கிறார். இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்றார்.

சிதம்பரம் குறித்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் கூறுகையில், " 1990ல் திருவான்மியூர் பகுதியில் பிளாட்பாரத்தில் சைக்கிள் பஞ்சர் கடையை நடத்திய சிதம்பரம், நிலபுரோக்கர் தொழிலில் ஈடுபட்டார். அதில் கொடிகட்டிப் பறந்த அவர், குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து விட்டார். இவருக்கும், அ.தி.மு.கவில் முக்கியப்புள்ளியாக இருக்கும் பெண் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சினிமா துணை நடிகைகளை சிதம்பரத்துக்கு அவர் அறிமுகம் செய்து வைப்பதுண்டு. ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த பெண்ணும், சிதம்பரமும் ரகசியமாக நட்சத்திர ஓட்டல்களிலும், பங்களா வீடுகளிலும் சந்திப்பார்கள். இதனால் அவர், சினிமாவுலகிலும் கால்பதித்தார். அப்போது பிரியமான ஒரு நடிகையுடன் சிதம்பரத்துக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலம் பலரை வீழ்த்தியுள்ளார் சிதம்பரம். இந்த பட்டியலில் நீதிபதிகள், போலீஸ் உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பட்டியல் நீள்கின்றன.

சிதம்பரம் மீது யாராவது புகார் கொடுத்தால் அவர்களை சரிகட்டவே தனிநெட்வொர்க் உள்ளது. அந்த முயற்சி தோல்வி அடைந்தால் புகார் கொடுத்தவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படும். இதனால் சிதம்பரத்தின் மீது புகார் கொடுக்கவே பலர் தயங்குவார்கள். இதைப் பயன்படுத்தி பல கோடிக்கு அதிபதியாகி விட்டார். கடந்த ஆண்டு மட்டும் பல வழக்குகளுக்கு முன்ஜாமீன் பெற்று இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றனர்.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
"சிதம்பரத்தின் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. ஆனால் அதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நிலமோசடி புகாரில் சிதம்பரம், அவரது மனைவி தெய்வானை, மாமனார் முத்துராமன், சிதம்பரத்தின் சகோதரி சாந்தா, சாந்தாவின் கணவர் ராஜகோபாலன் ஆகிய 5 பேர் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, வெளிநாட்டில் தலைமறைவாகி விடலாம் என்ற முடிவில் சிதம்பரம் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அவருக்கு ஆள்பலம், பணபலம் இருப்பதால் கீழ்மட்டத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றனர்.

இது குறித்து சிதம்பரத்திடம் பேசினோம். "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் சொல்ல முடியாது. என் மீது எந்த புகாரும் கிடையாது" என்றார்.

-எஸ்.மகேஷ்  விகடன்.com

கருத்துகள் இல்லை: