வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ராமதாஸ் :சுங்க சாவடி வருவாயை தணிக்கை செய்யவேண்டும். வழிப்பறி கொள்ளை போன்று...

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''விரைவான, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்குடன் வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது, தங்க நாற்கர சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு உள்ளிட்ட சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன.
தமிழகத்தில் மொத்தம் 40 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்துக்கான செலவை விட, சுங்கக் கட்டணத்துக்கான செலவு அதிகரித்து விட்டது.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், வருவாயைக் குறைத்துக் காட்டி, தொடர்ந்து முழுமையான சுங்கக் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. எனவே, ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: