ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

மின்வெட்டு பற்றி தவறான தகவல்களை அள்ளி வீசும் ஜெயலலிதா

தமிழகம் விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழும்' எனப் பேசி வந்த, முதல்வர், மின் வெட்டு குறித்த எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தால், மக்கள் மனதில் ஏற்படக் கூடிய கருத்தை மாற்றும் வகையில், தன் பிரசாரத்தையும் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில், சேலத்தில் மின்வெட்டு குறித்த, ஜெ.,வின் பிரசாரத்திற்கு, எதிர்ப்பு கிளம்பாததால், அனைத்து பிரசாரத்திலும், அதே பேச்சை தொடர முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில், மின் உற்பத்தியை விட, தேவை அதிகமாக இருப்பதால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது.

மின்தடை
அனல், நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதிப்பு, காற்றாலை மின்சாரம் கைவிரிப்பு போன்ற காரணங்களால், தற்போது, 1,200 - 1,400 மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தேர்தல் நேரம் என்றும் பார்க்காமல், சென்னை உட்பட, தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது.லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவக்கிய, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, தான் பேசிய ஒவ்வொரு ஊரிலும், 'மின் உற்பத்தியில், என் அரசின் பகீரத முயற்சி காரணமாக, தற்போது கிட்டத்தட்ட, 2,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கிறது. 'வெளி மாநிலங்களில் இருந்து, 500 மெகாவாட், மின்சாரம் வாங்கப்படுகிறது. இதுதவிர, 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். இதன் விளைவாக, விரைவிலே, மின் வெட்டே இல்லாத மாநிலமாக, தமிழகம் திகழும்' என, கூறி வந்தார்.ஆனால், அவர் பேசியதற்கு மாறாக, மின் உற்பத்தி பாதிப்பால், கிராமங்களில், ஆறு முதல், எட்டு மணி நேரம்; சென்னையில், ஒன்று முதல் இரண்டு மணி நேரம், மின் தடை செய்யப்பட்டது.இது, பொது மக்கள், தொழில் முனைவோர் என, பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

'முதல்வர் மின்வெட்டு தொடர்பாக, தவறான பிரசாரம் செய்கிறார்' என, எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். மின் வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி தொடர்பாக, உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததால், முதல்வர் அவ்வாறு பேசியதாக, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.இந்த நிலையில், முதல்வர் தன் வழக்கமான பேச்சை மாற்றிக் கொண்டு உள்ளார். நேற்று முன்தினம், சேலம் மற்றும் நாமக்கலில் பேசும்போது, 'இருண்ட
தமிழகம் ஒளிபெற, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று, வாக்குறுதி அளித்து இருந்தோம். இந்த வாக்குறுதி, ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், 8,000 மெகாவாட் என்று இருந்த மின் உற்பத்தி, தற்போது, 12 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது. 'புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மின் நிலையங்களில், சில சமயங்களில், பாதிப்புகள் ஏற்படுவதால், சில நாட்களில் மின்தடை ஏற்படுகிறது. அவை அனைத்தும், உடனுக்குடன்சரி செய்யப்படுகின்றன. இதை தான், எதிர்க்கட்சிகள் ஊதி ஊதி பெரிதாக்குகின்றன' என்றார்.தன் பேச்சில், 'மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்' எனக் கூறுவதை தவிர்த்து விட்டார். இது, அரசியல் வட்டாரங்களில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுஉள்ளது.

திங்கட்கிழமை தோறும்தகவல் தர உத்தரவு!
மின் உற்பத்தி குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் உற்பத்தி குறித்த விவரங்களை, திங்கட்கிழமை தோறும், தலைமைச் செயலர் தலைமையில் நடக்கும், ஆய்வு கூட்டத்தில் தெரிவிப்போம். தற்போது, தினமும், மின் உற்பத்தி தகவல்களை வழங்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.
- நமது நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை: