திங்கள், 20 ஜனவரி, 2014

முஜாகிதீன் கைதியை விடுவிக்கக்கோரி கெஜ்ரிவாலை கடத்த தீவிரவாதிகள் சதி


புதுடெல்லி,
 இந்தியன் முஜாகிதீன் கைதியை விடுவிக்கக்கோரி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை கடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருக்கிறது. மேலும் அவர்கள் விமானத்தை கடத்தும் அச்சுறுத்தல் இருப்பதால், விமானநிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி யாசின் பத்கல்.
தீவிரவாததாக்குதல்கள்
இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பத்கல் என்ற இடத்தை சேர்ந்தவர். 30 வயதான யாசின் பத்கல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி பீகார் மாநிலத்தில் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.

யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆமதாபாத், சூரத், பெங்களூர், புனே, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
பெங்களூர் கொண்டு வந்தனர்
2010-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையேயான ஆட்டம் தொடங்குவதற்கு முன், அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு விசாரணைக்காக யாசின் பத்கலை கர்நாடக போலீசார் கடந்த 17-ந்தேதி தங்கள் காவலில் எடுத்தனர். இதைத்தொடர்ந்து அவரை டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெங்களூர் கொண்டு வந்தனர். வருகிற 28-ந்தேதி வரை யாசின் பத்கலை கர்நாடக போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க இருக்கிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலை கடத்த சதி
இந்த நிலையில், யாசின் பத்கலை விடுவிக்கும் கோரிக்கையை முன்வைத்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தனக்கோ தனது மந்திரிகளுக்கோ போலீஸ் பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை என்று கெஜ்ரிவால் கூறி வந்தார். காசியாபாத்தில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதும் அவருக்கு டெல்லி போலீசாரும், உத்தரபிரதேச மாநில போலீசாரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முன்வந்தனர். அத்துடன் அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கவும் போலீசார் தீர்மானித்தனர். ஆனால் கெஜ்ரிவால் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்து, கடத்தல் அச்சுறுத்தல் பற்றி எடுத்துக் கூறி ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
விமானத்தை கடத்த திட்டம்?
யாசின் பத்கலை விடுதலை செய்யும் நோக்கத்தில், இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் குடியரசு தினமான 26-ந்தேதியன்று விமானத்தை கடத்த வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதுபற்றிய தகவலை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கருக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதேபோல் சென்னை, ஐதராபாத் நகரில் உள்ள விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ‘உஷார்’ படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீர் சிறையில் இருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் மற்றும் இரு தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கந்தகாருக்கு கடத்திச்சென்றனர். அந்த தீவிரவாதிகளை விடுதலை செய்த பின்னரே விமான பயணிகளை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
5 அடுக்கு பாதுகாப்பு
அதேபோல் இப்போது யாசின் பத்கலை விடுதலை செய்யக்கோரி தீவிரவாதிகள் விமானத்தை கடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்து இருப்பதால் சென்னை, பெங்களூர், ஐதராபாத் விமானநிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
விமான கடத்தல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவுப் பகுதியில் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தே அனுமதிக்கின்றனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
விமான நிலைய ‘போர்டிகோ’ பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கார்கள் நிறுத்தும் இடம், விமான நிலைய சுற்று பகுதிகள் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மாறு வேடத்திலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலைய வளாகத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரிப்பதோடு, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: