சனி, 25 ஜனவரி, 2014

ராமதாஸ் : சமூக ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தை அண்மையில் கூட்டிய டாக்டர் ராமதாசு, ‘‘அனைத்து சமுதாயக் பேரியக்கம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது’’ என்று திடீரென அறிவித்தார் என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
வேறு சில விஷமத்தனமான வாரமிருமுறை இதழ்களோ, ‘‘கசந்தார் ராமதாஸ் – பிசுபிசுத்தது சாதிக் கூட்டணி’’ என வேண்டு மென்றே உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுகின்றன. இத்தகைய செய்திகளுக்கு மறுப்பும், விளக்கமும் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் முதல் கூட்டம் கடந்த 18.08.2012 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜ் பேலஸ் விடுதியில் நடைபெற்றது. அதன்பின்னர் 02.12.2012 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டமும், தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன. மாவட்ட அளவிலான கடைசிக் கூட்டம் கடந்த 26.03.2013 அன்று நீலகிரியில் நடைபெற்றது.

தொடர்ந்து 05.10.2013 அன்று சென்னை தியாகராய நகர், 20.01.2014 அன்று சென்னை மந்தைவெளியிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 32 மாவட்டங்களிலும் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய சில சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் அனைத்து சமுதாயப் பேரியக்கம் அரசியலில் போட்டியிட வேண்டும் என்று கூறிய போது, நான் உடனடியாகக் குறுக்கிட்டும், இறுதியாக பேசும்போதும், ‘‘ அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியல் இயக்கமல்ல... இது ஒரு சமுதாய இயக்கம்’’ என்று விளக்கமளித்து இருக்கிறேன்.
இந்தக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இன்று வரை அரசியல், தேர்தல் தொடர்பான கருத்துக்கள் இடம்பெறவில்லை என்பதிலிருந்தே இந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? என்பது விளங்கும்.
பாதிக்கப்பட்ட சமுதாயங்களை ஒன்று திரட்டுவதும், அவர்களின் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு தீர்வு காண்பதும் தான் இந்த பேரியத்தின் நோக்கமாகும். பேரியக்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கும், அரசுக்கும் அனுப்புவதன் மூலம் சமுதாயங்களின் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வு காணவும் முயன்று வருகிறோம்.
அனைத்து சமுதாய பேரியக்கத்தில் அங்கம் வகிக்கும் சில தலைவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தான் சமூக ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டது. அந்தக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் 21.10.2014 அன்று வெளியிடப் பட்டது. இக்கூட்டணியில் இடம் பெறும் மற்ற கட்சிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று நான் தெரிவித்திருந்தேன்.
அதன்பிறகு, 20.01.2014 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டத்திலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, அதற்கு முந்தைய கூட்டங்களில் தெரிவித்த அதே கருத்தை நான் மீண்டும் கூறினேன். அனைத்து சமுதாய பேரியக்கம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கடைபிடிக்கப்படும் நிலைப்பாட்டைத் தான் நான் அப்போதும் தெரிவித்திருந்தேன். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென எடுத்தது போன்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவது சரியல்ல.
சமூக நீதி, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவை தான் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் நோக்கங்கள் ஆகும். யார் ஏளனம் செய்தாலும், சிண்டு முடிய முயன்றாலும், உள்நோக்கம் கற்பித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும் வலிமை யுடனும், உத்வேகத்துடனும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் லட்சியப் பயணம் தொடரும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: