புதன், 22 ஜனவரி, 2014

இசையமைப்பாளர் அனிருத் மீது ரஜினியின் மைத்துனர் புகார்

இசையமைப்பாளர் அனிருத்தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மீதான புகார் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனர் சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை சந்தித்து விளக்கமளித்தார்.
சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த "எய்ன்ட் நோபடி' என்ற ஆங்கில இசை ஆல்பத்தின் டிரெய்லர் "யூ-டியூப்' உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாடல்களில் பெண்களுக்கு எதிராகவும், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். மேலும் இந்த ஆல்பம், உரிய அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரணை செய்ய ஆணையர் ஜார்ஜ், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனரும், அனிருத்தின் தந்தையும், நடிகருமான ரவி ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார்.
இது தொடர்பாக ரவி ராகவேந்தர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரை சந்திதார். அவரிடம் ஆல்பம் குறித்து ரவி ராகவேந்தர் விளக்கமளித்தார். மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள இணையதளங்களில் இருந்து அந்த ஆல்பத்தின் டிரெய்லர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறினாராம். இதையடுத்து போலீஸ் தரப்பில் அந்த புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தால் முழு ஒத்துழைப்பு தரும்படி அறிவுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: