வெள்ளி, 24 ஜனவரி, 2014

பட்டப்பகலில் வக்கீல் சரமாரியாக வெட்டி கொலை ! ஓட்டலுக்குள் புகுந்து 4 பேர் கும்பல் ! அதிமுக Ex கவுன்சிலர் மகன்

அண்ணாநகர்:அமைந்தகரையில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வக்கீலை பைக்கில் வந்த 4 பேர் கும்பல் சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் குப்பன். அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் நித்யானந்தம் (33) வக்கீல். 3 வருடங்களுக்கு முன்பு பொன்விளைந்தகளத்தூர் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் குப்பனுக்கு தொடர்பு இருப்பதாக கருதி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மறைமலைநகரில் குப்பனை மர்ம ஆசாமிகள் வெட்டி கொன்றனர். இதையடுத்து குடும்பத்துடன் அமைந்தகரைக்கு வந்து விட்டார் நித்யானந்தம். அங்குள்ள தேவகி தெருவில் வசித்தார். நித்யானந்தம் மீது மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.


இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் அமைந்தகரை புல்லா அவென்யூவில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட வந்தார் நித்யானந்தம். கூட்டம் அதிகமாக இருந்தது. ஓட்டலில் நித்யானந்தம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது 2 பைக்கில் 4 பேர் கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. பைக்கை ஓட்டல் வெளியே நிறுத்திவிட்டு ஓட்டலுக்குள் புகுந்தது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த நித்யானந்தத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறி ஓடினர். உடனே அந்த கும்பல் தப்பியது.

தகவல் அறிந்து அண்ணா நகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நித்யானந்தத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என விசாரிக்கின்றனர். 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: