சனி, 4 ஜனவரி, 2014

ராமதாஸ்: தே.மு.தி.க கட்சிக்கு கொடுக்கிறதை எனக்கும் கொடுங்க!'

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, பா.ம.க., பலத்த தோல்வியை சந்தித்தது. அதனால், 'பா.ம.க., இடம்பெறும் கூட்டணி, வெற்றி கூட்டணி' என்ற பேச்சு பொய்யானது.இந்தத் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத, பா.ம.க., தலைமை, 'இனி, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை; அ.தி.மு.க., தி.மு.க.,விடமிருந்து, தமிழகத்தை காப்பாற்றுவதே, எங்களின் குறிக்கோள். தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 2016ல், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என, அறிவித்தது.அதன்பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஜாதி அமைப்பு களை ஒன்றிணைத்து, 'சமூக ஜனநாயக கூட்டணி' என்ற, புது கூட்டணியை ஏற்படுத்தினார். லோக்சபா தேர்தலில் பா.ம.க., போட்டியிட உள்ள ஏழு தொகுதிகளுக்கான, வேட்பாளர் களையும் அறிவித்தார்.
இதை கட்சியினர், அதிகம் விரும்பவில்லை. அதனால், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க, அக்கட்சி இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி முடிவு செய்தார் இந்நிலையில், நேற்று முன் தினம், பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பா.ம.க.,வின் கூட்டணி நிலைப்பாடை, ராமதாஸ் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் கூட்டணி குறித்து எதுவும் பேசாமல், 'ஜாதி கட்சி கூட்டணியில் போட்டியிடுேவாம்' என, அறிவித்தது, கட்சியினர் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.உண்மையிலே, பா.ம.க., தனித்து போட்டியிட உள்ளதா என, கட்சி நிர்வாகிகள் சிலரை கேட்டபோது, அதை மறுத்தனர்.

இது தொடர்பாக, அவர்கள் கூறியதாவது:பா.ஜ., கூட்டணியில் சேர, ராமதாசும், அன்புமணியும் தயாராக உள்ளனர். அன்புமணியுடன், பா.ஜ., நிர்வாகிகள், தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனாலும், கூட்டணி குறித்த அறிவிப்பை உடனே வெளியிட்டால், கூடுதல், 'சீட்'களை பெற முடியாது.பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தால், அக்கட்சிக்கு எத்தனை, 'சீட்' ஒதுக்கப்படுகிறதோ, அதே அளவு, தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என, ராமதாஸ் கோரியுள்ளார். எனவே, அதிக, 'சீட்'களை பெறுவதற்காகவே, கூட்டணி குறித்து, பொதுக்குழுவில் அறிவிக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

நமது நிருபர்  dinamalar.com

கருத்துகள் இல்லை: